Skip to main content

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி 5ஆம் நாள் விழா..!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

Srirangam Renganathar Temple Vaikunda Ekadasi 5th day festival ..!

 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி 5ஆம் நாள் விழா, நம்பெருமாள் கவரிமான் தொப்பாரக்கொண்டை, விமானப் பதக்கம் மற்றும் திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிதார்.
 


பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் நடைபெற்றுவரும் வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்புவிழா மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். 

 


கடந்த 15ஆம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கி பகல்பத்து நாட்கள் இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் நிகழ்வில், பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி உலாவரும் நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்வர்.  வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து விழாவின், 5ஆம் திருநாளான இன்று, சுக்கிரனுக்கு அதிபதியான நம்பெருமாள் (உற்சவர்) மூலஸ்தானத்திலிருந்து கவரிமான் தொப்பாரக் கொண்டையணிந்து, மார்பில் விமானப்பதக்கம், மற்றும் வைர அபயஹஸ்தம், முத்துமாலை, பவளமாலை சாற்றிக்கொண்டு எழுந்தருளினார். 

 


பின்னர் ராமானுஜர், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் தொடர்ந்துவர வழியெங்கும் அரையர்கள் சேவையின்போது திருமொழி பாசுரங்களை கேட்டருளி, பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அர்ச்சுன மண்டபத்தில் பெருந்திரளான பக்தர்கள் வரிசையில் நின்று பூலோகவைகுண்ட பெருமாளை ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு வணங்கிச்சென்றனர்.

 

 

Next Story

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் அடிகளார்கள் போராட்டம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
struggle at Trichy Srirangam

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோவில் ஆரியப்படாள் வாசல்  அருகே  கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இச்சிலை கடந்த 2015 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டது. இதற்கு திருமால் அடியார் குழாம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட பெருமாள் அடியார் குழாமினர், அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பெருமாள் பண்ணிசைத்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

ஸ்ரீரங்கத்தில் பிரதமருக்கு இந்தியில் வரவேற்பு; வைரலாகும் புரோகிதர்களின் வீடியோ

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Priests write in Hindi on Srirangam Temple to welcome the Pm modi

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார். அதன்படி, நேற்று மாலை சென்னையில் நடந்த கேலோ விளையாட்டுப் போட்டி துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இந்த நிலையில் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வேஷ்டி சட்டை அணிந்து திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் யானைக்கு உணவளித்து பிரதமர் மோடி ஆசி பெற்றுக்கொண்டார். ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, ஹெலிஹாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். 

இதனிடையே ஸ்ரீரங்கம் வந்த பிரதமர் மோடியை, ஸ்ரீரங்கம் கோவில் தெருவில் புரோகிதர்கள் இந்தியில் எழுதி வரவேற்றிருந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.