Skip to main content

முருகன் போருக்குச் சென்றதால் உருவான ஊர்கள் - நாஞ்சில் சம்பத் பகிரும் தமிழ் வரலாறு

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

Nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தமிழ்க்கடவுள் முருகன் குறித்தும், குன்றத்தூர், திருப்போரூர் ஆகிய ஊர்கள் உருவான விதம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

தமிழர்கள் காதலையும் வீரத்தையும் இரு கண்களாகக் கருதியவர்கள். தங்கள் இலக்கியங்களை அகம், புறம் என்று இரண்டாக வகுத்தவர்கள். காதலையும் வீரத்தையும் மதித்தார்கள் என்பதைவிட அதை தங்கள் வாழ்க்கையிலும் கடைபிடித்தார்கள். தாங்கள் கடைபிடித்தது மட்டுமில்லாமல், தாங்கள் வழிபடுகிற கடவுளும் அதற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதனால்தான் மற்ற கடவுளைவிட முருகனை அதிகம் வழிபட்டார்கள்.

 

அறுபடை வீடுகளில் மக்கள்கூட்டம் அலைமோதுகிறது. அலை மேவும் கடலோர திருச்செந்தூரில் அலைகள் ஆர்ப்பரிப்பதைப்போல மக்கள்கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. அம்மையப்பனாக கடவுளைப் பார்த்தவர்கள், அண்ணன் தம்பியாக கடவுளைப் பார்த்தவர்கள் முருகனை தங்களுடைய பண்பாட்டின் அடையாளமாகப் பார்த்ததால்தான் வள்ளி தெய்வானை திருமணத்திற்கு இந்த நாட்டில் பெரிய மரியாதையுள்ளது. முருகன் தெய்வானையை மட்டும் மணமுடித்தவன் அல்ல; காட்டுக்குறத்தி வள்ளியையும் திருமணம் செய்தவன். தங்கள் அனுபவித்த காதலை இறைவன் மீதும் பொருத்திப் பார்த்த தமிழர்களின் நாகரிகம் பண்பட்டது. 

 

தமிழர்களின் போர்க்குணம் உலகத்தையே திகைக்க வைத்தது. கனகன், விஜயன் என்ற வடநாட்டு மன்னர்கள் தமிழ் மன்னர்களை இழித்துப் பேசினார்கள் என்ற செய்தியறிந்து இங்கிருந்து படையெடுத்துச் சென்று, அவர்களை வீழ்த்தி, அவர்கள் தலையில் கல்லை ஏற்றி ஆறாயிரம் மைல்கள் நடத்தி அழைத்துவந்து கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கோவில் கட்டினான் என்பது வரலாறு. வலிய சண்டைக்கு போகமாட்டோம், வந்த சண்டையை விடமாட்டோம் என்பது தமிழர்களின் போர்க்குணத்தில் இருந்த ஒரு அம்சம். அதைப்போலத்தான் முருகன் போர் புரிந்தான்.

 

அசுரர்களின் அழிச்சாட்டியத்தால், அட்டகாசத்தால் மக்கள் அவதிக்குள்ளான சமயத்தில், அந்த அசுரர்களுக்கு முடிவு கட்டவேண்டும் என்று முருகன் போர்க்களத்திற்கு வந்தான். கிழக்கு கடற்கரையில் உள்ள திருப்போரூரில் போர் நடந்த காரணத்தினால்தான் அந்த ஊருக்கு போரூர் என்று பெயர்வந்தது. அந்தப் போரில் கலந்து கொள்வதற்காக படைகளுடன் புறப்பட்டுவந்த முருகன், சிறிது ஓய்வெடுப்பதற்காக ஒரு குன்றில் அமர்ந்தான். அந்தக் குன்றுதான் குன்றத்தூர் என அழைக்கப்படுகிறது. அந்தச் சிறப்பு மட்டும் குன்றத்தூருக்கு கிடையாது. 63 நாயன்மார்கள் வரலாற்றை கதையாக எழுதி காப்பியமாகத் தந்த சேக்கிழார் பிறந்த ஊரும் அதுதான்.

 

ஆகவே, தமிழ்நாட்டு பண்பாட்டின் வரலாற்றில் குன்றத்தூருக்கு முக்கிய இடமுண்டு. அதனால்தான் முருகனுக்கு அங்கு ஆலயம் எழுப்பினார்கள். அண்மையில் அங்கு நடந்த குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். போரையும் காதலையும் வாழ்க்கையாக கொண்டிருந்த தமிழர்கள் வாழ்வியலில் ரத்தமும் சதையுமாக முருகன் கலந்துவிட்டான். எனவே தமிழர்கள் யாரை மறந்தாலும் முருகனை மறக்கமாட்டார்கள். 

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.