Skip to main content

அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஆண்டாளை கண்ணதாசன் புகழ என்ன காரணம்? - நாஞ்சில் சம்பத் பகிரும் தமிழ் வரலாறு 

Published on 06/05/2022 | Edited on 06/05/2022

 

Nanjil Sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், ஆண்டாள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...  

 

மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ணன். மார்கழி தொடங்கிவிட்டால் மகோற்சவங்கள் எல்லா இடங்களிலும் நடைபெறுகின்றன. இந்த மார்கழி திங்களில்தான் ஆண்டாள் நாச்சியார் அதிகாலை துயிலெழுந்து, உறங்கிக்கொண்டிருந்த தன் தோழிகளை எழுப்பி கண்ணனை சேவிப்பதற்கு அழைக்கின்ற காட்சிகளை தமிழ் இலக்கியத்தில் பார்க்க முடிகிறது. அதை ஆண்டாள் பதிவு செய்கிற முறையும் விதமும் ஆண்டாளின் தனித்துவத்தைக் காட்டுகிறது. ஆண்டாள் மீது கொண்ட காதலால் கண்ணனே நாச்சியார் திருக்கோலத்தில் ஒருநாள் இருந்தான் என்பதுதான் வரலாறு. 

 

அதிகாலை எழச் சொல்லி, உறக்கத்தை கலைக்கச் சொல்லி, மனதில் நம்பிக்கையை நட்டு வைக்கிறாள் ஆண்டாள். பஞ்ச பூதங்களுக்கு இல்லாத ஆற்றல் ஒரு பாடலுக்கு இருக்கும் என்பதை தன்னுடைய வீச்சு மிகுந்த பாட்டின் மூலம் பதிவு செய்திருக்கிறாள். 

 

   மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
   நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்,
   சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
   கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
   ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்,
   கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்,
   நாரா யணனே நமக்கே பறைதருவான்,
   பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

 

ஆண்டாளின் இந்தப் பாடலை படிக்கும்போதே குற்றால குதூகலம் நம்மிடத்தில் குடிகொண்டுவிடுகிறது. தமிழ்நாட்டின் பண்பாட்டு வரலாற்றில் அதிகாலை எழுந்து, நீராடி, வாசலில் கோலமிட்டு வழிபடும் பழக்கம் இன்றைக்கும் தொடர்கிறது. அதை நடைமுறைப்படுத்தியதில் ஆண்டாள் வெற்றிபெற்றிருக்கிறார்.

 

மார்கழி மாதத்தில் அதிகாலை பாட்டு பாடிக்கொண்டு கூட்டமாக செல்கிறார்கள். பாட்டும் இசையும் தமிழ்ப்பண்பாட்டின் இரண்டு கண்கள். ஆண்டாள் பாடியிருக்கும் பாடல் 12 ஆழ்வார்கள் பாடிய பாடல்களிலும் உச்சத்தை தொட்டது. கண்ணனே நாச்சியார் திருக்கோலத்தில் அமர்ந்து அவனை சேவிப்பதற்கு வழிகாட்டினான் என்றால் அதிலிருந்தே ஆண்டாள் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். மார்கழி மாதத்தில் மேற்கொள்ளும் இந்தத் தவம் கல்யாணமாகாத கன்னிப் பெண்களின் வாழ்வில் திருப்பமும் விருப்பமும் நிறைவேறுவதற்கு பலனளிக்கும் என்ற நம்பிக்கை இந்த மண்ணில் இருந்துவருகிறது. அதனால்தான் மார்கழி மாதத்தை தமிழ்ப்பண்பாட்டோடு பொருத்தினார்கள்.  

 

ஒரு மனிதன் என்னை கல்யாணம் செய்துகொள்வான் என்றால் அதை நான் ஏற்கமாட்டேன். எனக்கு கல்யாணம் என்ற ஒன்று உண்டு என்றால் அது கண்ணனோடுதான். அவன்தான் என் மணாளன் என்று சொல்லி கண்ணனை காதலித்தாள் ஆண்டாள். அதற்காகவே நோன்பிருந்து அவள் சூடிக்கொடுத்த சுடர்கொடியை கண்ணன் ஏற்றுக்கொண்டான். தமிழிலக்கியத்தில் ஆண்டாள் ஏற்படுத்திய இத்தகைய தாக்கத்தால்தான் ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று அர்த்தமுள்ள இந்து மதத்தில் கண்ணதாசன் எழுதினார்.         

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.