Skip to main content

ஆலால சுந்தரர் பாடிய பதிகம்; கவ்விய குழந்தையின் காலை விடுவித்த முதலை - நாஞ்சில் சம்பத் பகிரும் தமிழ் வரலாறு

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

சமகால தமிழகத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சிக்கு இன்றைக்கு உள்ள அரசு முகம் கொடுத்திருக்கிறது. தமிழில் அர்ச்சனை செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு அது நடைமுறைக்கும் வந்துள்ளது. மயிலாப்பூரில் சிவநேச செட்டியார் என்று ஒருவர் இருந்தார். அவர் மகளின் பெயர் பூம்பாவை. அவரை வளர்க்கும்போதே திருஞானசம்மந்தருக்கு மணமுடித்து வைக்க வேண்டும் என்று சிவநேச செட்டியார் நினைத்து வைத்திருந்தார். பூம்பாவை ஒருநாள் திடீரென உயிரிழந்துவிட்டார். மகளை இழந்த சோகத்தில் அழுதுகொண்டும் ஆண்டவனைத் தொழுதுகொண்டும் காலத்தை கழித்தார் சிவநேச செட்டியார். ஒருநாள் திருஞானசம்மந்தர் மயிலாப்பூருக்கு வருகிறார் என்று தெரிந்ததும் அவரிடம் சென்று என் மகளை உங்களின் பொருட்டே ஆசைஆசையாய் வளர்த்தேன். அவளை காலன் கவர்ந்து சென்றுவிட்டான் என்று கூறுகிறார். அந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் 'மட்டிட்ட புன்னை...' என்று தொடங்கும் பதிகத்தை பாடினார் திருஞானசம்மந்தர். 

 

தமிழில் அர்ச்சனை என்று சொன்னால் இது தகாது என்று சிலர் சொல்கிறார்கள். மட்டிட்ட புன்னை என்ற பதிகத்தைப் படிக்கிறபோது பூம்பாவை உயிர் பெற்றுவந்தார் என்று நாம் படிக்கிறோம். கொங்கு மண்டலத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களுள் ஒன்று அவிநாசி. அந்த திருத்தலத்திற்கு ஒருநாள் ஆலால சுந்தரர் வருகை தருகிறார். அவிநாசி குளத்தில் ஒரு தாயும் குழந்தையும் குளிக்கச் செல்கின்றனர். அந்தக் குழந்தையின் காலை முதலை கவ்வியதும் மக்கள் அலற ஆரம்பிக்கின்றனர். அந்த இடத்தில் ஊரே கூடிவிட்டது. அங்கு கதறி அழுதுகொண்டிருந்த தாய், இறைவனே என்னுடைய குழந்தையை காப்பற்றித் தரமாட்டாயா என்கிறாள். அங்கு வந்த ஆலால சுந்தரரிடமும் குழந்தையை காப்பற்றித்தாருங்கள் என்று கோரிக்கை வைக்கிறார். உடனே அவிநாசியப்பனை பார்த்து ஒரு பதிகம் பாடுகிறார் ஆலால சுந்தரர். 

 

அவர் அந்தப் பதிகத்தை பாடி முடித்ததும் முதலை குழந்தையின் காலை விட்டுவிட்டது. இப்படி முதலையின் வாயில் சிக்கிய குழந்தையை மீட்பதற்கும், உயிர் பிரிந்த பூம்பாவையை பிழைக்க வைப்பதற்கும் என்னுடைய தமிழ் உதவியது. திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் கதவை மூடுவதற்கும் திறப்பதற்கும் தமிழ்ப்பாசுரம் உதவியது. ஆகவே சமயக்குறவர்கள் இறைவன் மீது தமிழில் பாடினார்கள்.

 

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றும், பன்னிரு திருமுறைகள் என்றும் எழுதிக் குவித்திருக்கிற நூல்களைப் படிக்கிறபோது உள்ளம் உருகுகிறது. அந்தத் தமிழில் இறைவனை அர்ச்சித்தால் ஏற்க முடியாது என்று கூறி வாய்க்கு வசப்படாத யாருக்கும் புரியாத சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்துவந்த நடைமுறையை மாற்றுவதற்கான தொடக்கம் தற்போது தமிழ்நாட்டில் ஆரம்பமாகியுள்ளது. ஞானசம்மந்தருடைய பாடல் கேட்டால் உங்களுக்கு சிவலோககதி கிடைக்கும். அப்படி பாடிய பனுவல்கள் பைந்தமிழில் நிறைய இருக்கின்றன. இந்தப் பைந்தமிழ் பாசுரங்களை திருக்கோவில்களில் பாடி தமிழில் அர்ச்சனை செய்வதற்கான நல்ல காலம் தற்போது திரும்பி வந்துள்ளது. இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட தமிழ் மொழிதான் அர்ச்சனைக்கு ஏற்ற மொழி. 

 

மாணிக்கவாசகரின் திருவாசகத்தை படித்துவிட்டு சிவபெருமானே தமிழில் கையெழுத்துப்போட்டார். அந்தக் கையெழுத்து இன்றும் தில்லையில் இருக்கிறது. தென்குமரியிலிருந்து திருவேங்கடம்வரை உள்ள இந்தத் தீந்தமிழ் நாட்டில் தமிழிலேயே அர்ச்சனை செய்வோம். தமிழில் அர்ச்சனை செய்வதும் தமிழில் பாடுவதும் தமிழ்நாட்டில் பழக்கமாகிவிடுமானால் ஆட்சி மொழி என்ற தகுதியையும் தாண்டி உலக மொழி என்ற உச்சத்தையும் தமிழ் தொடும்.

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.