புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று (13.07.2025)   பூச்சொரிதல் விழா நடந்தது. கிராமத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள், கிராமத்தினர், மேளதாளங்கள் முழங்க பூ தட்டுகளுடன் ஊர்வலமாகக் கோயிலுக்குக் கொண்டு வந்து அம்மனுக்கு மலரபிஷேகம் செய்தனர். அதே போல மேளம், டிரம்ஸ் வானவேடிக்கைகளுடன் வாகன உரிமையாளர்கள் பூ கமிசன்கடை உரிமையாளர்கள் வாகனங்களிலும் பூ தட்டுகள் கொண்டு வந்தனர்.

இவ்வாறு டன் கணக்கில் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு மலர் அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து இரவு கரகாட்டம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதனையடுத்து வரும் 18ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நாலாஞ்சந்தி கருப்பர் உள்படக் கிராமத்தில் உள்ள கோயில்களில் பொங்கல் வைத்துச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து  20ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி 10 நாட்கள் வரை நடக்கிறது.

மேலும், வரும் 27ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பொங்கல் திருவிழாவும் 28ஆம்  தேதி திங்கள் கிழமை தேரோட்டத் திருவிழாவும் நடக்கிறது. இந்த திருவிழா நாட்களில் பகலில் அன்னதானமும், இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு வழக்கத்தைவிடக் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒரு ஏ.டி.எஸ்.பி., 2 டி.எஸ்.பி.கள் உள்பட சுமார் 250 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.