ஒருவரது ஜாதகத்தில் 2, 7-ஆம் அதிபதிகள் கிரகச் சேர்க்கையுடன் இருந்தாலும், 2, 7-ஆம் அதிபதிகள் ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தால் ஒரே திருமணம்தான் நடைபெறும்.ஒருவரது ஜாதகத்தில் 2, 7-ஆம் அதிபதிகள் கிரகச் சேர்க்கையுடன் இருந்தாலும், திருமணத்திற்குப்பிறகு வரக்கூடிய தசாபுக்திகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. லக்னத்திற்கு நட்பு கிரகங்களுடைய தசாபுக்தியாக இருந்தாலும், கேந்திர திரிகோணாதிபதிகளின் தசாபுக்தியாக இருந்தாலும், சுபகிரகங்களின் தசாபுக்தியாக இருந்தாலும் ஒரே தாரம்தான் அமையும்.ஒருவரது ஜாதகத்தில் 2, 7-ஆம் அதிபதிகளுடன் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் இணைந்திருந்தால், சில அனுபவமற்ற ஜோதிடர்கள் அந்த ஜாதகருக்கு பல திருமணம் நடைபெறும் என்று கூறி, பலருக்கு கைகூடவேண்டிய திருமணத்தைக்கூட தடுத்துவிடுகின்றனர்.ஒருவரது ஜாதகத்தில் 7-ஆம் அதிபதியுடன் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் இணைந்திருந்து ஏக தாரத்தோடு வாழ்ந்தவர்கள் பலர் உள்ளனர்.7-ஆம் அதிபதியுடன் பாவ கிரகங்கள் இணைந்திருந்தால் பல திருமணம் நடைபெறும் என்ற கூறிவிடமுடியாது. 7-ஆம் அதிபதியுடன் இணைந்த பாவ கிரகங்களின் தசாபுக்திகள் நடைபெறுகின்றபோது ஒற்றுமைக்குறைவுகள் ஏற்படும். வேறு சில தொடர்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தும் என்பதால், அக்காலங்களில் தேவையற்ற நட்புகளிடம் கவனமாக இருப்பது நல்லது.ஒருவர் ஜாதகத்தில் தோஷம் இருந்தால், தோஷத்தை ஏற்படுத்தும் கிரகங்களின் தசாபுக்தி நடக்கும்போது மணவாழ்வில் மகிழ்ச்சிக்குறைவு, பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். அப்படிப்பட்ட ஜாதகருக்கு, அதற்கு ஈடுகொடுக்கும் ஜாதகமாகப் பார்த்துத் திருமணம் செய்து வைப்பது நல்லது. பத்துவிதப் பொருத்தங்களில் ஐந்துக்கு மேல் இருந்தால் திருமணம் செய்யலாம் என்னும் கருத்து இருந்தாலும், ஆண்- பெண் இருவருக்கும் ராசியாதிபதிகள் ஒருவராக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்துவைப்பது சிறப்பு. 12 ராசிகளில் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ஆறு ராசிகளும் ஒருவருக்கொருவர் நட்பு ராசிகளாகும்.
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ஆறு ராசிகளும் ஒருவருக்கொருவர் நட்பு ராசிகளாகும். இதுமட்டுமின்றி, இருவருடைய லக்னமும் நண்பர்களாக அமைந்தால் நல்லது. திருமணப் பொருத்தத்தில் வசியப் பொருத்தம் கூடிவந்தால் தம்பதிகள் அன்யோன்ய வசீகரத்துடன் இன்புற்று வாழ்வார்கள். ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம் இருக்கும் ஜாதகமாகவோ, இருவருக்கும் லக்னாதிபதி நட்பு கிரகமாக இருக்கும் ஜாதகமாகவோ பார்த்துத் திருமணம் செய்து வைத்தால், எத்தனைப் பிரச்சினைகள், சண்டைகள் வந்தாலும் மனதளவில் ஒன்றுபடக்கூடிய அமைப்பு நிச்சயமாக இருக்கும்.