Skip to main content

ஆண்களின் பஜனை! பெண்களின் கோலம்! - மார்கழி பரவசம்! 

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

Margazhi festival celebration

 

‘மாதங்களில் அவள் மார்கழி’ என்று கவிஞர் கண்ணதாசன் சினிமாவுக்கு பாடல் எழுதியதெல்லாம் பிற்பாடுதான். ஐந்தாம் நூற்றாண்டில், ஸ்ரீகிருஷ்ணர் அருளியதாகச் சொல்லப்படும் கீதையிலேயே, ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று தனது சிறப்பினை பார்த்தனிடம் விவரித்திருக்கிறார், பகவான். 


அப்பேர்ப்பட்ட தெய்வீக மாதத்தில், உஷத் காலத்திலேயே எழுந்து (அதென்ன உஷத் காலம்? பெண் தேவதையான உஷஸ் தோன்றிய பிறகே சூரியன் உதயமாகிறதென்றும், அந்த நேரத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வான்மண்டலத்தில் சஞ்சரிக்கிறார்கள் என்பதும் ஐதீகம்) குளித்துவிட்டு, ஆண்கள் வீதிகளில் பஜனைபாடி வருவதும், வாசலில் பெண்கள் கோலமிடுவதும் வழக்கமாக உள்ளது.

 

மார்கழி மாதத்தின் அதிகாலை வேளையில், பிராண சக்தி அதிக அளவில் கிடைப்பதால், இருபாலரும் அதிக பிராண சக்தியை உள்வாங்குவதற்காகவே, இப்படியொரு கலாச்சாரம் வேரூன்றப்பட்டுள்ளது.



சிவகாசி, நேருகாலனியில் வசித்துவரும் 86 வயது முதியவர் ராமசாமி, “தொடர்ந்து 55 ஆண்டுகளாக நாங்கள் மார்கழி பஜனையை வீதிகளில் பாடி வருகிறோம்” எனச் சொல்லி, “ஒரு நடை வந்துபாருங்களேன்” என்று அழைப்பு விடுத்தார். 

 

Margazhi festival celebration
                                                           ராமசாமி


அதிகாலை 5 மணிக்கெல்லாம், கழுத்தில் தொங்கிய ஆர்மோனிய பெட்டியை ராமசாமி இசைக்க, பெரியவர்களும் சிறியவர்களுமாக பாடல்களைப் பாடியவாறு வீதிகளைச் சுற்றிவர ஆரம்பித்தனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில், அன்றைய பஜனைச் செலவுகளை ஏற்றுள்ள உபயதாரர் வீட்டில், சூடாக டீ போட்டுக் கொடுத்தனர். 


தொடர்ந்து  உற்சாகமாக வீதிகளில் ‘தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் நாரயணன்..’, ‘செந்தாமரை மலர் செழித்திடும் வைகைபோல் திருவண்ணாமலை வாழ் கோவிந்தா..’, ‘ராமா ராமா ராமா என்று நாமம் சொல்லிப் பாடணும்.. நாவினில் வராவிட்டால் நல்லவரோடு சேரணும்..’, ‘சின்ன சின்ன காவடி.. செந்தில்நாதன் காவடி..’, ‘பக்தர்கள் பஜனைக்கு ஓடி வா சாமி..’ என, பல பாடல்களை சிறுவர்களும் சேர்ந்து ஆடியபடியே பாடினார்கள்.


அந்த ஏரியாவிலுள்ள முனியசாமி கோவில், கடம்பன்குளம் காளியம்மன் கோவிலுக்குச் சென்ற பஜனைக் கோஷ்டியினர், சிவசக்தி விநாயகர் கோவிலுக்கு வந்து, ‘ஈஸ்வர அல்லா தேரே நாம்.. சப்கோ சன்மதி தே பகவான்..’ எனப்பாடி நிறைவு செய்தனர். அப்போது, உபயதாரர் தரப்பில் சர்க்கரைப் பொங்கல், சுண்டலெல்லாம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

 

Margazhi festival celebration


பெரியவர் ராமசாமி நம்மிடம், “முன்பெல்லாம் மார்கழி பஜனைக்கு கூட்டம் நிறைய வரும். இப்போது அப்படி கிடையாது. ஆனாலும், அதிகாலையிலேயே குளித்து தயாராகி, வீதிகளில் பக்திப் பாடல்களைப் பாடி உற்சாகம் பெறும் இன்பத்தை, பரவசத்தை வரும் தலைமுறையினரும் அனுபவிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தின் காரணமாகவே, இந்த ஆன்மிக சேவையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறோம்” என்றார்.

 
ஆன்மிகம் என்பது வெறும் வார்த்தையல்ல! தன்னை அறிதலும், பிரபஞ்சத்தை உணர்தலுமே!

 

 

 

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.