Skip to main content

கண்டங்கள் களையும் கீழையூர் கடைமுடிநாதர்

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Keezhaiyur Kadaimudinathar Temple

 

இறைவன்: கடைமுடிநாதர் (அந்தஸம் ரக்ஷணேஸ்வரர்).

இறைவி: அபிராமியம்மை.

விசேஷமூர்த்தி: கிளுவைநாதர்.

விநாயகர்: கடைமுடி விநாயகர்.

புராணப்பெயர்: திருக்கடைமுடி, கிளுவையூர்.

ஊர்: கீழையூர்.

தலவிருட்சம்: கிளுவை மரம்.

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், கருணா தீர்த்தம்.

 

இவ்வாலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களுள் 72-ஆவது தலம்; காவிரி வடகரையில் 18-ஆவது தலம். திருஞான சம்பந்தரால் பதிகம் பாடப்பட்ட பெருமையுடன் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெரும் சிறப்புகளுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதொரு திருத்தலம்தான் கீழையூர் கடைமுடிநாதர் ஆலயம்.

 

சிறப்பம்சங்கள்

 

✷ மூலவர் கடைமுடிநாதர் மேற்கு நோக்கி சுயம்புலிங்க மூர்த்தியாக எழுந்தருளியுள்ள இந்த ஆலயம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது.

 

✷ இறைவனின் கடைமுடிநாதர் என்ற பெயரினால், நாம் நமது ஆயுளின் கடைசிக் காலத்தில் அவரைப் பற்றவேண்டும் என்றும்; அந்தஸம் ரக்ஷணேஸ்வரர் என்ற பெயரினால் நமது அந்திமக் காலத்தில் அதாவது இறுதிக் காலத்தில் நம்மைக் காப்பவர் அவரே என்றும் நமக்குத் தெளிவாகப் புலப்படுத்துகிறார்.

 

✷ மூலவரான சிவலிங்கத்தில் ஷோடசலிங்கம் என்றழைக்கப்படும் 16 கோடுகள் உள்ளன. இவரை வணங்குபவர்கள் 16 வகையான செல்வங்களையும் அடைவார்கள் என்று தல புராணம் உரைக்கிறது.

 

✷ மறைமதியை நிறைமதியாக்கி திருக்கடவூரிலே அற்புதம் நிகழ்த்திய அன்னை, அதே பெயரில் அபிராமியம்மை என்ற திருநாமத்துடன் திருக்கடவூரைப் பார்த்தவண்ணம் தெற்கு நோக்கி நின்ற நிலையில் வரப்ரசாதியாக இருக்கிறாள்.

 

✷ காவிரியில் நீராடி, அபிராமி அன்னையை வெள்ளிக்கிழமை தரிசனம் செய்து சௌபாக்கிய திரவியங்கள் சமர்ப்பித்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

 

✷ திருமணத்தடையுள்ளவர்கள் இந்த அம்பாளுக்கு வித்தியாசமான பிரார்த்தனையாக திருமாங்கல்ய வழிபாடு செய்கின்றனர். திருமணமாகாத பெண்கள் இவளுக்குத் தாலிகட்டி வேண்டிக் கொள்கின்றனர். வரன் அமைந்த பிறகு மீண்டும் அம்பாள் கழுத்திலிருக்கும் தாலியைத் தங்களது கழுத்தில் கட்டி அம்பாளை வணங்கிவிட்டு, மீண்டும் அதனை அம்பாளுக்கே கட்டிவிடுகின்றனர். "இவ்வாறு செய்வதால் பெண்கள் சுமங்கலியாகவே இருப்பர் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை என்கிறார் ஆலய அர்ச்சகர்.

 

✷ பிரகாரத்திலுள்ள நவகிரக சந்நிதியில் வலதுபுறம் திரும்பிய அறுங்கோண வடிவிலுள்ள ஆவுடையாரின் மீது நவகிரகங்கள் நேர் வரிசையில் இல்லாமல் ஒருவருக்கொருவர் முன்னும் பின்னுமாகப் பார்த்திருப்பது தனிச்சிறப்பு.

 

✷ காவிரி நதி வடக்கு மற்றும் மேற்கு நோக்கிய ஓட்டத்தில், காவிரியின் வளையம் இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதனால்தான் மேற்கு நோக்கிய இத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தி இடது காதில் மட்டும் வளையம் அணிந்து வலது காதில் வளையமில்லாமல் இருக்கிறார். இது சிறப்பான அமைப்பு.

 

✷ இதேபோல் மேற்கு நோக்கிய பைரவரின் இடது காதில் மட்டும் வளையம் அணிந்து வலது காதில் ஒன்றுமில்லாமல் அருள்புரிவது சிறப்பு.

 

✷ விக்ரம சோழன் கால கல்வெட்டில் இத்தல ஈசன் "திருச்சதைமுடி உதயமகாதேவர்' என்று குறிக்கப்பட்டுள்ளார். மூன்றாம் நந்திவர்ம பல்லவன், பராந்தக சோழன் காலத்திய கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. கோவிலின் அருகில் கண்டெடுக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரரின் படம் ஆதித்யசோழர் கால கல்லமைப்புடன் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. அது தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்புடன் உள்ளது.

 

✷ எவரிடமும் சொல்ல முடியாத சங்கடமான சூழ்நிலையில் உள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தியன்று கடைமுடி விநாயகரை தரிசித்து வழிபட்டால் வம்பு வழக்குகள் தீர்ந்து வளமுடன் வாழலாம்.

 

✷ மாத சிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம் மற்றும் சிவாலயத்திற்குரிய அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடக்கின்றன.

 

✷ கட்டளைதாரர்கள் வேண்டுதலுக்கிணங்க இவ்வாலயத்தில் மிருத்யுஞ்சய ஹோமம் நடக்கிறது. இந்த ஹோமம் செய்து வழிபட்டால் எமனையும் வெல்லலாம். மிருத் யுஞ்சயம் என்றால் எமனை வெல்வதென்று பொருள்படும். பொதுவாக, ஒருவரது ஜாதகத்தில் குரு, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோணமாக இருந்தால், அவருக்கு எதிர்பாராத விபத்தின் மூலம் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. அதேபோல பெண் ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோணமாக இருந்தால் அவருக்கு எதிர்பாராத விபத்தின் மூலம் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. இதுபோன்று பல கிரக காரணங்களால் ஒருவருக்கு மரண கண்டங்கள் வரும்போது, அதிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள செய்யப்படும் ருத்ர வழிபாடே இந்த மிருத்யுஞ்சய ஹோம வழிபாடாகும்.

 

சிவனை அழிக்கும் கடவுள் என்று வேதங்கள் கூறுவதாகச் சொல்கின்றனர். ஆனால் சிவன் அழிக்கும் கடவுளல்ல; அளிக்கும் கடவுள். ஈசனிடம் வரம்பெற்ற இராவணனை அழிக்க திருமாலே மனித ரூபம் தாங்கி வரவேண்டியதாயிற்று. எனில் வரமளித்த ஈசன் எப்படிப்பட்டவன்? திருமால் மேற்சொன்ன இந்த ஹோமத்தைச் செய்தே ஈசனிடம் இருந்து சுதர்சன சக்கரத்தைப் பெற்றார். மிருகண்டு முனிவர் தனது மகன் மார்க்கண்டேயனுக்காக இந்த ஹோமத்தைச் செய்ய, அவன் தீர்க்காயுளைப் பெற்றான்.

 

இறுதியில் ருத்ரரை மனமுருக வேண்டி அபிஷேக நீரை ஜாதகரின் மேல் ஊற்றி அங்க சுத்தி செய்வித்து ஈசனை வணங்க, ஜாதகருக்கு சகலபாவமும் தீர்ந்து நிறைந்த ஆயுள்பலம் ஏற்படும். அதுமட்டுமல்ல அதிக எதிரிகளைக் கொண்டவர்கள் இந்த ஹோமத்தைச் செய்ய, எதிரிகள் பலம் குறைந்து இவர்கள் பலம் அதிகரிக்கும் என்று பெருமிதத்துடன் கூறுகிறார்கள் ஆலய அர்ச்சகர்களான சங்கர் குருக்கள், சுவாமிநாத குருக்கள்.

 

காவிரி வடக்கு முகமாக வந்து, பின் மேற்காக வளையம்போல் காட்சி தந்து ஓடுகிற மகிமை வாய்ந்த தலமாம். செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்களுக்கு மன அமைதியைத் தருகிற தலமாம். சஷ்டியப்தப் பூர்த்தி, சதாபிஷேகம், மிருத்யுஞ்சய ஹோமப் பூஜைகள் நடக்கிற தலமாம். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ 16 பட்டைகளுடன் ஷோடஷலிங்கமாய் அருள்கிற தலமாம். நெடுநாட்கள் முடிவுக்கு வராத பிரச்சினைகளுக்கு நல்ல முடிவைத் தருகிற தலமாம். கீழையூரில் அருள்தரும் அன்னை அபிராமி சமேத கடைமுடிநாதரை விநாயகர் பிறந்த மாதமான ஆவணி மாதத்தில் கடைமுடி விநாயகருடன் வழிபடுவோம். வாழ்வில் அதீத பலன்களைப் பெறுவோம்.

 

காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். அமைவிடம்: நாகை மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செம்பனார்கோவில். அங்கிருந்து பூம்புகார் செல்லும் வழித் தடத்தில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கீழையூர். கீழையூர் பஸ் நிறுத்தத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ளது கடைமுடிநாதர் கோவில். மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில் மேலப்பாதியைக் கடந்தும் கீழையூர் வரலாம். பஸ் வசதி குறைவாக உள்ளது.

 


 

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.