Skip to main content

வெற்றியை தேடித்தரும் காங்கடா வஜ்ரேஸ்வரி!

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

Kangada Vajreshwari temple

 

இந்த ஆலயம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ளது. இங்கு குடிகொண்டிருக்கும் அன்னையை "நகர்கோட் தேவி' என்றும் அழைக்கிறார்கள். "நகரக் கோட்டையின் தலைவி' என்று இதற்குப் பொருள். இந்த ஆலயம் காங்கடா என்னும் இடத்தில் இருப்பதால் இந்த அன்னை "காங்கடா தேவி' என்றும் அழைக்கப்படுகிறாள். இமாச்சலப் பிரதேசத்திலிருக்கும் மிகப்பெரிய கோவில் இது.

 

ஆலய உச்சியிலிருக்கும் கலசத்தை மிகவும் தூரத்திலிருந்தே பார்க்கலாம். "துர்க்கா சாலீசா' என்ற நுலில் "மூன்று உலகங்களிலும் புகழ்பெற்ற அன்னை வஜ்ரேஸ்வரி” என்று எழுதப் பட்டிருக்கிறது. இந்த ஆலயம் பாண்டவர் காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. கர்ப்பக்கிரகத்தில் தாய் பிண்ட வடிவத்தில் (உருண்டையாக) காட்சியளிக்கிறாள். இதுதவிர, பல கடவுள் சந்நிதிகள் இருக்கின்றன. அவற்றுள் பைரவர் பிரதானமாக வழிபடப்படுகிறார்.பாரதத்திலுள்ள 51 சக்தி பீடங்களில் இந்த ஆலயமும் ஒன்று.

 

சதிதேவியின் இடது மார்புப்பகுதி விழுந்த இடம் இதுவெனப் படுகிறது. அதனால் இப்பகுதி வஜ்ரேஸ்வரம் என்றும், அன்னை வஜ்ரேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறாள். உலகில் பல பகுதிகளிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபட வருகிறார்கள். நவராத்திரியின்போது ஏராளமான கூட்டம் இருக்கும்.

 

இந்த ஆலயத்தில் தினமும் ஐந்து முறை பூஜைகள் நடக்கின்றன. காலையில் சுப்ரபாத பூஜை நடக்கிறது. இரவில் அலங்காரத்துடன், மங்கள ஆரத்தி செய்யப் படுகிறது. பிறகு அலங்காரங்கள் நீக்கப்பட்டு பால், நீர், தயிர், நெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் தாயை அலங்கரித்து, புத்தாடைகள், நகைகள் அணிவித்து, பட்டாணி, பூரி, பழங்கள், உலர்ந்த பழங்கள் ஆகியவற்றைப் பிரசாதமாக வைத்துப் பூஜை செய்கிறார்கள். மதிய வேளையில் யாருக்கும் தெரியாமல் ஒரு ரகசிய பூஜை செய்யப்படுகிறது.

 

இந்தப் பகுதியிலிருந்த ஜலந்தரன் என்ற அரக்கன் மக்களுக்குப் பல இன்னல்கள் கொடுத்தான். எல்லாரும் அன்னையிடம் முறையிட, அவள் தன் கையிலிருந்த வஜ்ராயுதத்தால் ஜலந்தரனைக் கொன்றாள். அதனால் இந்த தாய்க்கு "வஜ்ரஹஸ்த தேவி' என்றும் பெயர் ஏற்பட்டது. பகைவர்களை வெற்றிபெற நினைப்பவர்கள் இந்த அன்னையைத் தேடிவந்து வழிபடுகிறார்கள். இந்த ஆலயம் 10-ஆவது நூற்றாண்டில் புகழ்பெற்று, நல்ல செல்வாக்குடன் இருந்தது.

 

வெளிநாட்டினர் அவ்வப்போது வந்து கொள்ளையடித்திருக்கிறார்கள். 1009-ஆம் ஆண்டில் கஜினி முகமது இந்தக் கோவிலில் கொள்ளையடித்திருக்கிறான். அங்கிருந்த வெள்ளிக் கதவைக்கூட விட்டு வைக்கவில்லை. கஜினி மட்டுமே இந்தக் கோவிலை ஐந்து முறை குறிவைத்திருக்கிறான். 1337-ஆம் ஆண்டில் முகம்மது பின் துக்ளக்கால் இந்தக் கோவில் கொள்ளையடிக்கப்பட்டது. சிக்கந்தர் லோதி என்ற மன்னனும் இந்த ஆலயத்தைக் கொள்ளையடித்திருக்கிறான். ஆலயம் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டிருக்கிறது.

 

அக்பர் இங்கு வந்து திருப்பணி செய்திருக்கிறார். 1905-ல் ஏற்பட்ட பூகம்பத்தால் ஆலயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு உண்டானது. 1920-ல் இந்த ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்துக்களுடன் சீக்கியர்களும் முஸ்லிம்களும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் உச்சியிலிருக்கும் கோபுரம் இந்து, சீக்கிய, முஸ்லிம் பாணியில் கட்டப்பட்டிருக்கிறது.

 

சென்னையிலிருந்து "அந்தமான் எக்ஸ்பிரஸ்' விரைவு ரயிலில் "பட்டான் கோட்' சென்று, அங்கிருந்து 87 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள காங்கடா ரயில் நிலையத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில், நகரத்துக்கு மத்தியில் அமைந்துள்ளது ஆலயம்.

 

 

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.