Skip to main content

குபேரனுக்கு சிறப்பான பூஜை இங்கு தான் …

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

சிவபெருமான் ஜோதியாய்த் தோன்றி சிவலிங்கரூபமாய் கோவில் கொண்ட தலங்கள் ஜோதிர்லிங்கத் தலங்கள் எனப்படுகின்றன. மொத்தம் 64 ஜோதிர்லிங்கங்கள் உண்டென்பர். அவற்றுள் முக்கியமானவை பன்னிரண்டு. அவற்றிலொன்று தானே தோன்றிய ஓங்காரேஸ்வரர் ஜோதிர்லிங்கம்.யமுனையில் 15 நாள் நீராடிய பயன், கங்கையில் ஏழு நாள் நீராடிய பயன் நர்மதையைப் பார்த்தாலே கிடைக்கும் என்பர். அத்தகைய நர்மதையில் "ஓம்' போன்ற வடிவில் ஒரு தீவுப்பகுதி உள்ளது. இது மந்தாதா, சிவபுரி என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் ஓங்காரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.மந்தாதா என்னும் மன்னன் நர்மதைக் கரையில் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான்.அவனுக்குக் காட்சிகொடுத்த சிவன், அவன் கோரிக்கையையேற்று இங்கே எழுந்தருளினாராம். அந்த மன்னன் பெயரால் இப்பகுதி மந்தாதா எனப்படுகிறது.தேவி அகல்யாபாய் போல்கர் என்னும் சிவபக்தை, தினமும் களிமண்ணில் 18,000 சிவலிங்கங்கள் செய்து அதை நதியில் விடுவாராம். அவை மிதந்து செல்லுமாம். அத்தகைய சக்தி வாய்ந்த தலமாக இது விளங்குகிறது.

grishneswar temple

நர்மதைக் கரையில் மல்லேஸ்வரர் ஆலயம் உள்ளது. அங்கிருந்து படகுகள் மூலமோ பாலத்தின் வழியாகவோ தீவுக்குச் செல்லலாம். அங்கே நர்மதையில் நீராடிவிட்டு ஆலய தரிசனம் செய்யலாம். ஆலய வாயில் சிறு குகைபோல இருக்கும். அதற்குள் சென்று ஓங்காரேஸ்வரரை வழிபடலாம். சிவலிங்கத்தின் நான்கு புறமும் அபிஷேக நீர் விழும் அமைப்புள்ளது. பார்வதிதேவி, பஞ்சமுக ஆஞ்சனேயர் விக்ரகங்களும் உள்ளன. முதல் தளத்தில் ஓங்காரேஸ்வரரை தரிசித்துவிட்டு இரண்டாவது தளத்துக்குச் சென்றால் மகாகாளேஸ்வர லிங்கத்தை தரிசிக்கலாம். மூன்றாவது தளத்தில் சித்தநாதேஸ்வரரும், நான்காவது தளத்தில் குப்தேஸ்வரரும், ஐந்தாவது தளத்தில் தவஜேஸ்வரரும் அருள்புரிகின்றனர்.இவ்வாலயத்தைச் சுற்றி மேலும் 12 லிங்கங்கள் உள்ளன. மேலும் மாதா காட் (படித்துறை), சீதா வாடிகா (தோட்டம்), தாவடி குண்ட் (குளம்), மார்க்கண்டேயர் சிற்பம்- ஆசிரமம், அன்னபூரணி ஆசிரமம், அறிவியல்கூடம், படே அனுமன், ஹேடாவதி அனுமன் கோவில்கள், ஓங்கார மடம், மாதா ஆனந்தமயி ஆசிரமம், ரிணமுக்தேஸ்வரர் ஆலயம், காயத்ரி மாதா, மகாவிஷ்ணு, வைஷ்ணவி தேவி, காசிவிஸ்வநாதர் ஆலயங்கள் உட்பட ஏராளமான புனிதத் தலங்களும் தீர்த்தங்களும் இப்பகுதியில் உள்ளன.

kuberan god

இங்கு குபேரன் சிவபெருமானை எண்ணித் தவமிருந்து நவநிதிகளுக்கும் தலைவனான். எனவே குபேரனுக்கும் இங்கு ஆலயம் உள்ளது. சிவனின் ஜடாமுடியிலிருந்து ஒருதுளி நீர் இங்கே விழுந்ததாம்.அது சிற்றாறாக ஓடி நர்மதையுடன் கலக்கிறது. தீபாவளியின்போது குபேரனுக்கு இங்கு மிகச் சிறப்பாகப் பூஜைகள் நடக்கும்.பக்தர்கள் பல்வேறு புனித தீர்த்தங்களிலிருந்து நீர்கொண்டுவந்து ஓங்காரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இதனால் எண்ணியவை யாவும் ஈடேறுகின்றன என்பது பக்தர்கள் கூற்று. மத்தியப் பிரதேச மாநிலம், கண்ட்வா மாவட்டத்தில் அமைந்துள்ளது ஓங்காரேஸ்வரர் ஆலயம். உஜ்ஜயினியிலிருந்து 142 கிலோமீட்டர், கண்ட்வாவிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.