Skip to main content

குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2018-2019

Published on 04/10/2018 | Edited on 05/10/2018

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி.சுப்பிரமணியம்

முதலில் இதைத் தெரிந்துகொள்ளவும்

வகிரகங்களில் சுபகிரகங்களாக வர்ணிக்கப்படுபவை குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய நான்கு கிரகங்கள் மட்டுமே! இதிலும் வளர்பிறைச் சந்திரன் சுபராகவும் தேய்பிறைச் சந்திரன் அசுபராகவும் கணக்கிடப்படும். அதேபோல புதனும் சுபகிரகத்தோடு சேருகிறபோது சுபத்தன்மை உடையவராகவும் அசுப கிரகத்தோடு சேருகிறபோது பாவத்தன்மை உடையவராகவும் கருதப்படும். ஆகவே முழு சுபகிரகங்களாக செயல்படுவது குருவும் சுக்கிரனும் மட்டும்தான். மற்ற ஐந்து கிரகங்களும் (சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது) முழு பாவ கிரகங்களாக ஜோதிட சாஸ்திரம் நிர்ணயித்துள்ளது. இதைத்தான் அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை என்பார்கள்.

மேற்கண்ட இரண்டு முழு சுபகிரகங்களிலும் குருவை தேவகுரு என்றும் சுக்கிரனை அசுர குரு என்றும் புராணங்கள் வர்ணிப்பதால், குரு ஒருவரையே முழு சுபகிரகம் எனலாம். நல்லதைச் செய்யவல்லவர் என்றும் பாராட்டலாம். அதனால்தான் "குரு பார்க்க கோடி நன்மை' என்றும், "கோடி தோஷம் விலகும்' என்றும் கூறப்படுகிறது.

இத்தனை சிறப்புகளையுடைய குரு வாக்கியப் பஞ்சாங்கப்படி 4-10-2018-ல் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுவார். 13-3-2019 வரை விருச்சிக ராசியில் நின்று பலன் தருவார்.

அதன்பிறகு தனுசு ராசிக்கு மாறுவார். தனுசு ராசியில் 10-4-2019-ல் வக்ரம் அடைந்து 18-5-2019-ல் மீண்டும் விருச்சிக ராசிக்கு மாறி விருச்சிகத்தில் 7-8-2019-ல் வக்ரநிவர்த்தியாகி, மறுபடியும் 28-10-2019-ல் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாவார். குரு தான் நின்ற இடத்தில் இருந்து 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்ப்பார்.

மீன ராசி, ரிஷப ராசி, கடக ராசிக்குப் பார்வை கிடைக்கும்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 11-10-2018 (புரட்டாசி 25) அன்று குருப்பெயர்ச்சி. கோவில்களில் வாக்கியப் பஞ்சாங்கப்படிதான் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி விழா நடக்கும்.

குரு- அவரவர் ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் வரும்போது நற்பலனும்;

ஜென்மம், 4, 10-ஆம் இடங்களில் வரும்போது சமபலனும்; 2, 6, 8, 12 ஆகிய இடங்களில் வரும்போது துர்பலனும் நடக்கும். இது பொதுவிதிதான். மாறுபட்ட பலனும் நடக்கலாம். சந்திரா ராசிக்குப் பார்ப்பதுபோல ஜென்ம லக்னத்துக்கும் குருப்பெயர்ச்சிப் பலனைப் பார்க்க வேண்டும்.

அதேபோல பிறக்கும் காலத்தில் ஜனன ஜாதகத்தில் குரு நின்ற இடத்துக்கும் கோட்சார குரு எத்தனையாவது இடத்தில் மாறுகிறார் என்பதையும் பார்த்துப் பலன் காணவேண்டும். இது அனுபவரீதியான உண்மை.

விருச்சிக ராசிக்கு மாறும் குரு தான் நின்ற இடத்திலிருந்து 5-ஆம் பார்வையாக மீன ராசியையும்; 7-ஆம் பார்வையாக ரிஷப ராசியையும்; 9-ஆம் பார்வையாக கடக ராசியையும் பார்க்கக் கூடும். குரு அவரவர் ராசிக்கு எந்த இடத்துக்கு வந்திருக்கிறார் என்று கணித்துச் சொல்லுவதுபோல குரு பார்க்கும் இடங்கள் அவரவர் ராசிக்கு எத்தனையாவது இடம் என்றும், அது நல்லதா- கெட்டதா என்றும் ஆராய்ந்து- பார்வைப் பலன், சேர்க்கைப் பலன், ஸ்தான பலன் போன்றவற்றையும் ஆய்வுசெய்து இந்தப் புத்தகத்தில் விளக்கமாக எழுதியுள்ளேன்.

guruகுருப்பெயர்ச்சிப் பலன் நல்லதாக இருந்தாலும்- கெட்டதாக இருந்தாலும் அதைச் சாதகமாக்கிக் கொள்ள பிரார்த்தனை, பூஜை, பரிகார முறைகளைக் கடைப்பிடிக்கலாம். பரிகாரம் என்பது கிரகப் பலனையோ வரும் விதிப்பலனையோ தடுத்துநிறுத்தும் வழியல்ல. மழைக் காலத்தில் குடை பிடித்துச் செல்வதால் மழை நீர் தலையில் விழாதபடி பாதுகாப்பு தருவதுபோலவும்- படிப்பு ஏறாத மாணவனுக்கு டியூஷன் பயிற்சிபோலவும் பரிகாரம் என்பது கிரகப் பலனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் நமது மனதைப் பக்குவப்படுத்திக்கொள்ளும் ஒரு கவசம்போன்றது.

வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு அல்லது நவகிரகத்தில் உள்ள வியாழனுக்கு (குருவுக்கு) சுண்டல் கடலை மாலை சாற்றலாம். சுண்டல் நெய்வேத்தியம் (நிவேதனம்) செய்து அர்ச்சனை செய்யலாம். அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடை, மஞ்சள் நிற மலர் மாலை அல்லது முல்லை மலர் மாலை சாற்றலாம். தட்சிணாமூர்த்தி நெற்றியில் கஸ்தூரி பொட்டு வைத்து வழிபடலாம். தட்சிணாமூர்த்திக்கும் நவகிரகங்களுக்கும் ஹோமம் வளர்க்கலாம்.

நவகிரகங்களில் குருவுக்கு அர்ச்சனை செய்த தேங்காய், பழம், பொருட்களை தானம் செய்துவிட வேண்டும். வீட்டுக்கு எடுத்து வரக்கூடாது. ஆனால் தட்சிணாமூர்த்திக்கு செய்த அர்ச்சனைப் பொருட்களை வீட்டுக்கு கொண்டுசெல்லலாம். கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே தட்சிணாமூர்த்தி படம் வைத்து நெய்தீபம் ஏற்றி ஜெபப்பாராயணம் செய்யலாம். தட்சிணாமூர்த்தி படமோ விக்ரகமோ வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். ஆனால் நவகிரக படங்களை வைத்து வழிபடக்கூடாது.

குருவுக்குப் பரிகார ஸ்தலங்கள்

குருவுக்கு உரிய ஸ்தலமாக திருச்செந்தூர், கும்பகோணம் அருகிலுள்ள ஆலங்குடி சிறப்பாகக் கூறப்படும். மேலும் செங்கோட்டை அருகில் புளியறை யோக தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர் அருகில் பட்டமங்கலத்தில் அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தி, மயிலாடுதுறை வள்ளலார் கோவிலில் மேதா தட்சிணாமூர்த்தி, சென்னை- திருப்பதி சாலையில் பெரியபாளையம் அருகில் சுருட்டப்பள்ளியில் தாம்பத்திய தட்சிணாமூர்த்தி, தென்குடித்திட்டை (தஞ்சாவூர் அருகில்), சென்னைக்கு அருகில் பழூர், மயிலாடுதுறை அருகில் திருவீழிமிழலை ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாடு, ஹோமம், அபிஷேகம், அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்படும். திருநாகேஸ்வரம் அருகில் தேவப்பெருமாள்நல்லூர் சிவாலயத்திலுள்ள குரு அன்னதட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் சித்தேஸ்வர தட்சிணாமூர்த்தி, நாமக்கல் அருகில் சேந்தமங்கலத்திலும்- கும்பகோணம் குடவாசல் அருகில் சேங்காலிபுரத்திலும் குரு அம்சமாக தத்தாத்ரேயராக அருள்பாலிக்கிறார். ராஜபாளையம்- தென்காசி பாதையில் வாசுதேவநல்லூருக்கு அடுத்த தாருகாபுரம் என்னும் ஊரில் மத்தியஸ்தநாதர் கோவிலில் நவகிரக தட்சிணாமூர்த்தியாக காட்சியளிப்பார்.

அதேபோல கும்பகோணம்- காரைக்கால் பாதையில் எஸ்.புதூரில் 12 ராசிகளுக்கும் உரிய நவகிரக தட்சிணாமூர்த்தியும், பேரளம் பூந்தோட்டத்தில் நவகிரக தட்சிணாமூர்த்தியும் திகழ்கிறார்கள். திருச்சி மாம்பழச்சாலை டோல்கேட் அருகில் உள்ள உத்தமர் கோவில் சப்த குரு ஸ்தலம் ஆகும். குச்சனூரில் சனீஸ்வரர் கோவில் அருகில் வடகுரு ஸ்தலம் உள்ளது.

guru



மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)


மேஷ ராசி அன்பர்களே!

மேஷ ராசிக்கு இதுவரையில் நல்ல இடமான 7-ல் இருந்த குரு இப்போது 8-ஆம் இடத்துக்கு மாறுகிறார். 7-ஆம் இடத்தைவிட 8-ஆம் இடம் மோசமான இடம்தான். ""இன்மை எட்டினில் வாலி பட்டமிழந்தது'' என்பது பாடல். விபத்து, கண்டம், அபகீர்த்தி, அவமானம், மலையேறி வீழ்தல், சஞ்சலம், கவலை, இழப்பு ஆகிய பலன்களைக் குறிக்கும் இடம்தான் 8-ஆம் இடம். இயற்கையில் சுப கிரகமான குரு 8-ஆம் இடத்துக்கு வருவதால் 8-ஆம் இடத்துக்குரிய கெட்ட பலனை அதிகப்படுத்தலாம். அதாவது பாவகிரகம் பாவ ஸ்தானத்தில் (கெட்ட இடத்தில்) வருவதால் அந்த பாபவப் பலனை- கெட்ட பலனை- நாசமாக்குவார். சுப கிரகம் கெட்ட இடத்தில் இருந்தால் அந்த கெட்ட பலனை அதிகப்படுத்துவார். விருத்தி செய்வார். சுபகிரகம் எந்த இடத்தில் இருக்கிறதோ அதன் பலனை விருத்தி செய்வார். நல்ல இடத்தில் சுப ஸ்தானத்தில் இருந்தால் அந்த நல்ல பலன் விருத்தியடையும். எனவே குருப்பெயர்ச்சியால் நேரடியாக பாதிப்புக்குள்ளாகும் ராசிக்காரர்களில் மேஷ ராசிக்காரர்களும் உண்டு. குருப்பெயர்ச்சியின் விளைவால் பாதிக்கப்படுவோரில் மேஷ ராசி- மிதுன ராசி- தனுசு ராசி- விருச்சிக ராசி அடங்கும்.

கடந்த காலத்தில் குரு 7-ல் (துலா ராசியில்) இருந்தபோது உங்களுடைய ஜென்ம ராசியான மேஷத்தைப் பார்த்தார். அதனால் உங்களுக்கு மதிப்பு- மரியாதை- செல்வாக்கு- கௌரவம்- திறமை- ஆற்றல் முதலியவை பிரபலம் அடைந்தது. பாராட்டுகளும் கௌரவப் பட்டங்களும் கிடைத்தன. பதவி, அந்தஸ்து உயர்ந்தது. துலா குரு உங்கள் ராசிக்கு 11-ஆம் இடம் குடும்பத்தையும், உங்கள் ராசியையும், மூன்றாம் இடத்தையும் பார்த்தார். அதனால் தைரியம், வீரியம், பராக்கிரம சகாயம், சகோதர வகையில் நற்பலன், எதிர்பாராத லாபம், வெற்றி, எடுத்த முயற்சிகளில் அடுத்தடுத்து ஜெயம், அனுகூலம், வழக்கு விவகாரங்களில் வெற்றி, சாதகமான தீர்ப்பு ஆகிய நற்பலன்களைச் சந்தித்தீர்கள்.

அதேசமயம் குரு 3-ஆம் இடம் மிதுனத்துக்கு 7, 10க்குடையவர் ஆகி மிதுனத்துக்கு 5-ல் நின்று மிதுனத்தைப் பார்த்தார். அதனால் உடன்பிறப்புகளோடும், விசுவாசமான நண்பர்களோடும் இணைந்து புதிய தொழில் முயற்சிகளை செய்திருக்கலாம். அல்லது உடன்பிறப்புகள் வகையில் திருமணம், வாரிசு போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்திருக்கலாம். தொழில் துறையில் வெற்றிகளையும், தைரியமாக புதிய முயற்சிகளையும் எடுத்திருக்கலாம். இப்படி ஒருபுறம் நன்மைகள் நடந்திருந்தாலும் சில விரயங்களையும் சந்திக்க வேண்டிய அனுபவங்களும் நடந்தது. 12-க்குடைய குரு ஜென்ம ராசியைப் பார்த்த காரணத்தால் தொழில்துறையில் முன்னேற்றம், ஊதிய உயர் வு, சன்மானத்தையும் ஒருபுறம் கொடுத்து, இன்னொருபுறம் வேலைப்பளு, உறவுச்சுமை, கடன் ஆதிக்கத்தையும் கொடுத்தது. இப்போது 8-ஆம் இடத்தில் குரு வந்திருப்பது கெடுபலன் தரும் இடம்தான். என்றாலும் மேஷ ராசிக்கு 12-ஆம் இடம், 2-ஆம் இடம், 4-ஆம் இடங்களைப் பார்க்கிறார். மேஷ ராசிக்கு பாக்யாதிபதி என்ற வகையில் குரு மேற்படி 12-ஆம் இடம், 2-ஆம் இடம், 4-ஆமிடங்களுக்கு அனுகூலமான பலன்களைச் செய்வார். குடும்பச் செலவுகளுக்காகவும், குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்காகவும் சுபச்செலவுகளைச் செய்வார்.

12-ஆம் இடம் என்பது பிரயாணம், வெளியூர் வாசம், ஸ்தான மாற்றம் இவற்றைக் குறிக்கும் இடம். கடல் கடந்து போய் வேலை பார்க்கலாம். குடும்பத்தை விட்டுப் பிரிந்துபோய் வேலை பார்க்கலாம். அல்லது படிக்கலாம். தொழில் செய்யலாம். ஜாதக தசாபுத்திகள் சாதகமாக இருந்தால் சொந்த வீடு வாங்கி குடிபோகலாம். அல்லது வாடகை வீடு அல்லது ஒத்தி வீட்டுக்குக் குடியிருப்பை மாற்றலாம்.செலவழிக்கும் யோகம் இருக்கிறது என்றால் வரவுக்கும் யோகம் இருக்கிறது என்பதுதானே அர்த்தம். குறிப்புப் பேரேடு பற்று- வரவு கணக்குப் புத்தகத்தில் வரவு காலத்தில் வரவு வைத்தால்தானே பற்று காலத்தில் செலவு எழுத முடியும். வரவு வைக்காமல் செலவை மட்டும் எழுத முடியாது. இதுதான் அக்கௌண்ட் முறை. அந்த வரவு லாப வரவாகவும் இருக்கலாம். ஆதாய வரவாகவும் அமையலாம். அல்லது கடன் வரவாகவும் இருக்கலாம். தனக்கு வர வேண்டிய பாக்கி சாக்கி வரவாகவும் இருக்கலாம். ஆக 12-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு உங்களுக்கு செலவுகளை ஏற்படுத்தினால், 2-ஆம் இடத்தையும் பார்ப்பதால் தன வரவுகளையும் தருவார் என்பது தவறில்லையே.2-ஆம் இடமான ரிஷபத்துக்கு குரு 8, 11-க்குடையவர் ஆவதால் எதிர்பாராத அதிர்ஷ்டமும் தனவரவும் வரும் என்றும் சொல்லலாம். எல்லா குடும்பங்களிலும் பொருளாதார நெருக்கடியினால்தான் பிரச்சினைகள் உருவாகும். வீட்டுச் செலவுக்கு மனைவி 100 ரூபாய் கேட்டு 50 ரூபாய் கொடுத்தால் பிரச்சினைதான். அதையே 200 ரூபாயாகக் கொடுத்தால் மனைவியின் முகத்தில் மலர்ந்த சிரிப்பை எதிர்பார்க்கலாம். ""மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம்.'' நீங்களும் வச்சிக்கிட்டு வஞ்சகம் பண்ண மாட்டீர்கள். வீட்டுப் பெண்களுக்கு வீட்டு பட்ஜெட் ஒன்றுதான் தெரியும். ஆண்களுக்கு வெளி பட்ஜெட், கரண்ட் பில், டெலிபோன் பில், கடன், வட்டி என்று ஆயிரம் பட்ஜெட் இருக்கும். வெளி பட்ஜெட்டைக் குறைக்க முடியாது. வீட்டு பட்ஜெட்டை சிக்கனமாக செய்யலாமே என்று நீங்கள் நினைப்பீர்கள். வெளியில் எல்லாவற்றுக்கும் தாராளமாகச் செலவு செய்வார். வீட்டுக்கு கொடுக்க வேண்டுமென்றால் மனசும் வராது. கையும் நீளாது என்று அவர்கள் நினைப்பார்கள். இனி அந்தப் பிரச்சினைக்கு இடம் வராது. ஏனென்றால் பாக்யாதிபதி இரண்டாம் இடத்தைப் பார்க்கும்போது ஏராளமாகப் பணப்புழக்கம் இருக்கும். நீங்களும் தாராளமாக வீட்டுக்கு கொடுக்கலாம். அதற்குப் பாதை அமைப்பதுபோல தொழில் ஸ்தானாதிபதி சனி கர்மாதிபதி யோகமாக செயல்படுகிறாரே. (10-க்குடையவர் 9-ல் இருப்பது).

4-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பூமி, வீடு, மனை சம்பந்தப்பட்ட வகையில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் தன யோகத்தையும் எதிர்பார்க்கலாம். ஜாதகத்திலும் அப்படிப்பட்ட அதிர்ஷ்டமான அமைப்பும் இருக்க வேண்டும். ஒரு பணக்காரர் குறைந்த விலையில் ஊருக்கு வெளியில் (புறநகர் பகுதியில்) பத்து ஏக்கர் காலி நிலத்தைப் பல வருடத்திற்கு முன்பு வாங்கிப் போட்டிருந்தார். இப்போது அந்தப் பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் வந்து விட்டது. விலை எக்குத்தப்பாக ஏறி லட்சக்கணக்கில் மதிப்பு வந்துவிட்டது.

4-10-2018 முதல் 21-10-2018 முடிய விசாக நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

விசாகம், குருவின் நட்சத்திரம். குரு உங்கள் ராசிக்கு, 9, 12-க்குடையவர். அவருடைய சுய சாரத்தில் குரு சஞ்சாரம். இக்காலம் தகப்பனார் அல்லது பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளும் சுபச் செலவுகளும் உருவாகும். சில ஆகாத போகாத சொத்துகளை- காலி இடங்களை லாபத்துக்கு விற்று பயனுள்ள இடத்தில் பலன் தரும்படி முதலீடு செய்யலாம். தெய்வ வழிபாடு, ஆலயத் தீர்த்த யாத்திரை, குலதெய்வப் பிரார்த்தனை முதலிய பலன்கள் கிடைக்கும். வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி, சுண்டல் கடலை வைத்து வழிபடவும்.

21-10-2018 முதல் 20-12-2018 முடிய அனுஷ நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

அனுஷம் சனியின் நட்சத்திரம். சனி மேஷ ராசிக்கு 10, 11-க்குடையவர்; 9-ல் குரு வீட்டில் தனுசு ராசியில் இருக்கிறார்.தொழில் துறையில் முன்னேற்றமும் லாபகரமான முயற்சிகளும் கைகூடும். வேலையில்லாதோருக்கு நல்ல வேலை அமையும். சிலர் படிப்புக்காக அல்லது வேலைக்காக மேற்கத்திய நாடுகளுக்கு- வெளிநாடுகளுக்குப் போகலாம். உள்ளூரில் பெற்றோரைவிட்டு வெளியில் தங்கும்படி யோகம் உண்டாகும். சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு 19 மிளகை சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி நெய்யில் நனைத்து தீபம் ஏற்றவும்.

20-12-2018 முதல் 13-3-2019 முடிய கேட்டை நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

கேட்டை புதன் நட்சத்திரம். மேஷ ராசிக்கு புதன் 3, 6-க்குடையவர். மேலும் குருவின் ராசியான மீனத்தில்தான் புதன் நீசம் அடைவார். இக்காலம் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கடன் வாங்கும் அவசியம் ஏற்படும். சிலர் ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்கலாம். 6-ஆம் இடம் என்பது 10-ஆம் இடம் தொழில் ஸ்தானத்துக்கு பாக்ய ஸ்தானம் ஆகும். வாழ்க்கை ஸ்தானமும் ஆகும். ஆகவே உபதொழில் யோகமும் அல்லது வேலையில் இருப்போர் சொந்தத் தொழில் அல்லது கூட்டுத் தொழில் ஆரம்பிக்கும் யோகமும் உண்டாகும். அதற்காகவும் கடன் வாங்கலாம். வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும்- குடும்ப உறுப்பினர்களின் அல்லது உறவினர்களின் விசேஷ விருந்து வைபவங்களுக்காகவும் சுபச்செலவுகள் உண்டாகும்.

இப்படி கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் குரு 13-03-2019-ல் மூல நட்சத்திரத்துக்கு மாறி 10-04-2019-ல் வக்ர கதியடைந்து 18-05-2019-ல் மறுபடி கேட்டையில் வக்ரமாகத் திரும்பி 28-10-2019 வரை 2-ஆவது முறையாக கேட்டையில் சஞ்சரிக்கிறார். கேட்டையில் குரு வக்ரமாக இருக்கும் காலம் அசுப பலன்கள் எல்லாம் சுபப் பலன்களாக மாறி நடக்கும். வாராக் கடன் வசூல் ஆகும். கடன் வாங்கிக் கடன் கொடுப்பதால் எதிர்பாராத நன்மைகளும் அனுகூலங்களும் உண்டாகும். இக்காலம் சுதர்ஸன சக்கரத்தாழ்வாரை புதன்கிழமை தோறும் வழிபடுவது நல்லது.

அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு

இந்த குருப்பெயர்ச்சி அற்புதக் கீர்த்தி தரும். ஆனந்த வாழ்வு தரும். நற்பொருள் குவியும். ஆன்மீக ஈடுபாடும், தெய்வ வழிபாடும் சிறக்கும். சில சமயம் மலைபோல சங்கடங்கள் வந்தாலும் பனிபோல விலகிவிடும். குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். சிலர் ஜோதிடம் பயிலலாம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபடவேண்டும்.

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு

இந்த குருப்பெயர்ச்சி மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரும். குடும்பத்தில் மங்கள சுப காரியங்கள் நடக்கும். திருமணம் ஆக வேண்டி எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். கடந்த அட்டமச் சனியால் பிரிந்திருந்த தம்பதிகள் இணைந்து வாழலாம். அல்லது மனைவியைப் பிரிந்து வேலை, தொழில் சம்பந்தமாக வெளிநாடு கடல் கடந்து போயிருந்தவர்கள் தான் இருக்கும் இடத்துக்கு மனைவி, குடும்பத்தையும் அழைத்துக் கொள்ளலாம். அல்லது வெளிநாட்டு வாழ்க்கை போதும் என்று கையிருப்பை மிச்சப்படுத்தி சொந்த ஊருக்கு திரும்பி வீடு, வாசல், வாகனம் என்று மனைவி மக்களோடு சந்தோஷமாக வாழலாம். கும்பகோணம் அருகில் கஞ்சனூர் சென்று (சுக்கிரன் தலம்) வெள்ளிக்கிழமை வழிபடவும்.

கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு

இந்த குருப்பெயர்ச்சி உங்களின் நீண்ட காலத் திட்டங்களையும் கனவுகளையும் நிறைவேற்றித் தரும். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு கிடைக்கும். பெற்ற பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலப் பலன்கள் நல்ல முறையாக செயல்படும். படிப்பு, திருமணம், வாரிசு, வேலை, உயர்வு போன்ற அற்புதப் பலன்கள் நடக்கும். கும்பகோணம் அருகில் சூரியனார் கோயில் சென்று வழிபடவும். அப்படியே அதன் அருகில் திருமங்கலக்குடி சென்று பிராணநாதேஸ்வரரையும் மாங்கல்யம் காத்த மங்கள நாயகியையும் வழிபடவும்.


ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிடம் 2-ஆம் பாதம் முடிய)


ரிஷப ராசி அன்பர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் இருந்த குரு இப்போது 7-ஆம் இடமான விருச்சிகத்துக்கு வந்திருக்கிறார். உங்கள் ஜென்ம ராசியைப் பார்க்கிறார். பொதுவாக குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் யோகமான இடங்களாகும்.ரிஷப ராசிக்கு 8-க்குடையவர் 7-ல் வருவது நல்லதா, கெட்டதா என்று ஒரு சர்ச்சை ஏற்படலாம். குரு 8, 11-க்குடையவர். 8-ஆமிடத்துக்கு 12-ல் மறைந்து 11-ஆம் இடத்துக்கு 9-ல் திரிகோணம் ஏறுதல் நல்லது. குரு சுபகிரகம். 5, 9 என்ற திரிகோணம்தான் அவருக்குப் பலம். அட்டமத்துச் சனி ஒருபுறம் நடந்தாலும் சனி ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதி. எனவே குருப்பெயர்ச்சி உங்களுக்கு நன்மையைத் தரும் என்று நம்பலாம்.

கடந்த காலத்தில் 8, 11-க்குரிய குரு 6-ல் மறைந்து தொழில் ஸ்தானமாக 10-ஆம் இடத்தையும், விரயஸ்தானமான 12-ஆம் இடத்தையும், தன ஸ்தானமான 2-ஆம் இடத்தையும் பார்த்தார்.

சிலருக்கு தொழில்துறையில் பாதிப்பு, உத்தியோகம், வேலையில் சங்கடம், தேவையில்லாத இடப்பெயர்ச்சி, பதவி இறக்கம், தவிர்க்க முடியாத விரயம், வெட்டிச் செலவு, போட்டி, பொறாமை, கடன்- வட்டி நட்டம், வைத்தியச் செலவு, சிலருக்கு கோர்ட் கேஸ், போலீஸ் ஸ்டேஷன் என்று அலைச்சல், சிலருக்கு பழகிய நட்பு வட்டாரங்களில் மனச்சங்கடம், பிரிவு, பூர்வீகச் சொத்தில் பிரச்சினை, பங்காளிப்பகை, வழக்கு வில்லங்க விவகாரம் போன்ற துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது.

தனகாரகன் குரு 2-ஆம் இடத்தைப் பார்த்த காரணத்தால் பணப்புழக்கம் மட்டும் தாராளமாக இருந்தது என்றும் சொல்லலாம். அதை லாபம், சேமிப்பு என்று சொல்ல முடியாது. கடனுக்கு மேல் கடனாக வாங்கி செலவு செய்தீர்கள். கடனை வாங்கி கடனை அடைத்தீர்கள். கையில் காசு, பணம் புரண்ட காரணத்தால் எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு சந்தித்தீர்கள். குடும்பத்தில் குழப்பம், பிரிவு ஆகிய சங்கடங்களையும் சந்தித்தவர்களும் உண்டு.

10-ஆம் இடத்தைப் பார்த்த பலனாக வேலை, உத்தியோகத்தைக் காப்பாற்றிக் கொண்டாலும் 12-ஆம் இடத்தைப் பார்த்ததாலும் 6-ல் இருந்ததாலும் மேலதிகாரிகளுக்கும் தனக்கும் பிடிக்காமல், பழி வாங்கும் நடவடிக்கையாக டிரான்ஸ்பர் அல்லது அதிக பளு அல்லது வசவு, திட்டு போன்றவற்றை தாங்கிக்கொண்டு, வேறு வழியே தெரியாமல் விதியே என்று சகித்துப் போனவர்களும் உண்டு.

இப்போது 7-ஆம் இடத்துக்கு வந்துள்ள குரு இவற்றுக்கெல்லாம் பரிகாரம் செய்வது மாதிரி 7-ஆம் பார்வையாக உங்கள் ராசியையும், 5-ம் பார்வையாக 11-ஆம் இடத்தையும், 9-ஆம் பார்வையாக 3-ஆம் இடத்தையும் பார்க்கப் போகிறார். குருவுக்கு 5, 7, 9-ஆம் பார்வை என்று ஏற்கெனவே குறிப்பிட்டோம்.

ராசியை குரு பார்ப்பதால் உங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். ஆற்றல், திறமை, செயல்பாடு இவற்றில் ஆர்வம், அக்கறை உருவாகும். திறமையை வெளிப்படுத்தி பெருமை அடைவீர்கள். கௌரவம், மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும். கடந்த காலத்தில் உங்களை ஓரம்கட்டியவர்களும், உதவாக்கரை என்று ஒதுக்கியவர்களும், கறிவேப்பிலை மாதிரி காரியத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டு தூக்கியெறிந்தவர்களும் இனிமேல் உங்கள் அருமை பெருமைகளை உணர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தலைமைப் பொறுப்பில் அமர்த்துவார்கள்.

கடந்த காலத்தில் குரு 6-ல் இருந்தபோது சில அத்தியாவசியத் தேவைகளுக்காக தவிர்க்க முடியாமல் கடன்பட்டவர்கள் இப்போது குர 7-ல் இருக்கும் காலத்தில் எல்லா கடன்களையும் அடைத்துவிடலாம். அதற்கு மனைவி மக்களின் ஆதரவும் உதவியும் அமையலாம். 7-ஆம் இடம் என்பது கணவன் அல்லது மனைவி ஸ்தானம் எனப்படும். அங்கு குரு வந்து இருப்பதால் திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆண்-பெண்களுக்குத் திருமணம் நிறைவேறிவிடும். ஏற்கெனவே பிரிந்திருந்த தம்பதிகள் இனி ஒன்று சேர்ந்து இணைந்து வாழும் முயற்சிகளை மேற்கொண்டு வாழலாம்.

11-ஆம் இடத்தை குரு பார்க்கிறார். 11-ஆம் இடம் ஜெய ஸ்தானம். மூத்த சகோதரஸ்தானம். உபய களஸ்திரஸ்தானம்.

அதனால் உங்களோடு உடன்பிறந்தவர்கள் வகையிலும் லாபம், வெற்றி உண்டாகலாம். 11-க்குடையவரே 11-ஆம் இடத்தைப் பார்ப்பதால் அதுவும் ஒரு தனிச்சிறப்பு. சிலருக்கு மறுமணம் நடைபெறலாம். தொழில்துறையில் வெற்றியும் அனுகூலமும் உண்டாகலாம்.

3-ஆம் இடமான சகோதர ஸ்தானத்தையும் சகாய ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் சகோதர வகையில் இருந்த சச்சரவுகளும் மாறும். பங்காளிப்பகை தீரும். அன்னியர்களின் விரோதம் விலகும். அவர்களால் உங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும் விலகும். உங்களைப் புரிந்துகொண்டு உங்களோடு ஆதரவாக இணைந்து செயல்படுவார்கள். பிரபல்யம் அடைய வேண்டுமென்று உங்களிடம் வந்து உறவாடிய சிலர், ஏறியதும் ஏணியை எட்டி உதைத்த மாதிரி உங்களை ஒதுக்கிவிட்டார்கள். இனி அவர்களுக்கு பாடம் புகட்டும்படி உங்களது வளர்ச்சி அமையப்போகிறது. ஆறுதலையும் மாறுதலையும் ஏற்படுத்தும்.

4-10-2018 முதல் 21-10-2018 வரை விசாக நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

விசாகம் குருவின் நட்சத்திரம். குரு ரிஷப ராசிக்கு 8, 11-க்குடையவர் என்றாலும் தனது சொந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம். தன் கையால் தானே அடித்துக்கொண்டால் அடி பலமாக விழாது. உறுத்து வலிக்காது என்பதுபோல குரு சுயசாரம் என்பதால் 8-க்குடைய கெடுதல் பாதிக்காது. 8-ஆம் இடம் விபரீதபலன்- எதிர்பாராத பலன்- விபத்து- கண்டம்- ஏமாற்றம்- இழப்பு இவைகளைக் குறிக்கும் இடம் என்றாலும் 2, 11, 9-ஆம் இடங்களோடு தொடர்பு ஏற்படும்போது 8-ஆம் இடம் அதிர்ஷ்டஸ்தானம் ஆகிவிடும். அதிலும் குரு சுயசாரம் என்பதால் கண்டிப்பாக எட்டாமிடத்தின் கெட்ட பலன் பாதிக்காது. 11-ஆம் இடத்துப் பலன் லாபம்- வெற்றி- முன்னேற்றம் நடக்கும். மேலும் 11-ஆம் இடத்துக்கு 9-ல் குரு நிற்பது விசேஷம்- சிறப்பு. 8-ஆம் இடத்துக்கு 12-ல் குரு மறைவதும் நல்லது. திருவாரூரில் மடப்புரம் என்ற பகுதியில் குரு தட்சிணா மூர்த்தி மடம் (ஜீவசமாதி) சென்று வழிபடவும்.

21-10-2018 முதல் 20-12-2018 வரை அனுஷ நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

அனுஷம் சனியின் நட்சத்திரம். ரிஷபராசிக்கு சனி ராஜயோகாதிபதி- தர்மகர்மாதிபதி. அவருடைய சாரத்தில் 11-க்குரியவர் சஞ்சரிப்பது ராஜயோகம்- தொழில் யோகம்- வாழ்க்கையில் நிம்மதி- ஆனந்தம் வசதி வாய்ப்புகள் கிடைப்பதால் திருப்தி, வேலையில் உற்சாகம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, புதிய தொழில் வாய்ப்பு போன்ற நன்மைகள் உண்டாகும். தொட்டது துலங்கும். விட்டது கிடைக்கும். கெட்டது விலகும். தாம்பத்ய ஒற்றுமையும் அன்யோன்யமும் உருவாகும். தஞ்சாவூரிலிருந்து (திருவாரூர் பாதை) சாலியமங்களம் வழி- ஆவூர் சிவாலயத்தில் பஞ்சபைரவர் பூஜை அஷ்டமியில் நடைபெறும். கலந்துகொள்ளவும்.

20-12-2018 முதல் 13-3-2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

கேட்டை புதன் நட்சத்திரம். புதன் ரிஷப ராசிக்கு 2, 5-க்குடையவர். எனவே இக்காலம் குடும்பத்தில் அமைதி, ஆனந்தம் பெருகும். அன்புமழை பொழியும். தாராளமான வரவு செலவும், பொருள் வரத்தும் உண்டாகும். வரவேண்டிய பாக்கிசாக்கிகள் வந்துசேரும். "பையிலே எட்டணா இருந்தால் என் பாட்டு எட்டு ஊருக்கு கேட்கும்' என்று வடிவேலு பாடிய மாதிரி உங்களுக்கு உற்சாகம் பொங்கும். துள்ளாத மனமும் துள்ளும். பாத்ரூம் பாடகராக இருந்தவர் பப்ளிக் பாடகராக மாறி பாராட்டுப் பெறலாம். கேட்டையில் 18-5-2019 முதல் 7-8-2019 வரை குரு வக்ரகதியாக இருப்பார். விக்ரத்தில் வக்ரபலன் என்ற விதிப்படி 7-ல் உள்ள குரு வக்ரமாக சஞ்சரிப்பது நன்மைதான். திருமணம்- வாரிசு போன்ற யோகம் தரும். நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் லட்சுமி நாராயணர் கோவில் சென்று புதன்கிழமை வழிபடவும்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு

குருப் பெயர்ச்சி தேக ஆரோக்கியம், சௌக்கியம், உடல் சுகம், மன சுகம், சந்தோஷத்தை வழங்கும். சிலர் பூமி, வீடு, வாகன யோகம் அடையலாம். தாய்வழி உறவு பலப்படும். தாய்மாமன் உறவும் பலப்படும். பழைய பகை மாறி நேசம் கூடும். தஞ்சை அருகில் பரிதியப்பர் கோவில் சென்று பாஸ்கரேஸ்வர சுவாமியை ஞாயிறு அன்று வழிபடவும்.

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு

உடன்பிறப்புகள் வகையில் நிலவிய தொல்லைகள் மறைந்து எல்லையில்லா அன்பும் ஆதரவும் பெருகும். ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற நிலை மாறி ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பெருமை உண்டாகும். இணைந்த கைகள் கனிந்த வெற்றிக்கு காரணமாகும். கும்பகோணம் அருகில் திங்களூர் சென்று வழிபடவும்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு

மிருகசீரிடம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் 7, 12-க்குடையவர். திருமணம், மகப்பேறு, பூப்புனித நீராட்டு விழா போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் குடும்பத்தில் இடம்பெறும். படிப்பு- தொழில் சம்பந்தமாக சிலர் வெளியூர் போகலாம். சகோதர சகாயமும் நட்பும் உண்டாகும். பொன்னமராவதி அருகில் தேனீமலை சென்று ஆறுமுகப்பெருமானை வழிபடலாம்.


மிதுனம்
(மிருகசீரிடம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)


மிதுன ராசி அன்பர்களே!

கடந்த ஓராண்டு காலம் மிதுன ராசிக்கு 5-ல் இருந்த குரு இப்போது 6-ஆம் இடமான விருச்சிகத்திற்கு மாறுகிறார். ஏற்கெனவே குரு இருந்த இடம் 5-ஆமிடம் நல்ல யோகமான இடம். இப்போது மாறியுள்ள இடம் மோசமான இடம்தான். அதாவது குரு ஒரு சுபகிரகம். அவர் எந்த ஸ்தானத்தில் இருக்கிறாரோ அந்த ஸ்தான பலனை அதிகப்படுத்தச் செய்வார். 5-ஆமிடமானது மக்கள், திட்டம், யோகஸ்தானம் ஆகும். அங்கு குரு இருந்தால் அவை எல்லாம் சிறக்கச் செய்வார். 6-ஆமிடம் என்பது ரோகம், ருணம், சத்ருஸ்தானம். அதில் குரு இருந்தால் அவற்றைப் பெருக்கிப் பலன் செய்வார். வியாதி அதிகமாகும். கடன் அதிகமாகும். போட்டி பொறாமைகளும் சங்கடங்களும் அதிகமாகும்.

எதிரிகள் அதிகமாவார்கள் என்பது பொதுவிதி! 5-ஆமிடத்து குரு முழுமையான நல்ல பலனை செய்தாரா என்பது கேள்விக்குறிதான்! எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்காத மாதிரி! கல்யாண விருந்தில் கூட்டம் அதிகமானால் கடைசிப் பந்தியில் உட்கார்ந்தால் எல்லா அயிட்டமும் இருக்காது.

சில அயிட்டம்- அப்பளம், வடை அல்லது ஒருசில காய்கறிகள் தீர்ந்துவிடும். கூட்டம் அதிகமானால் சாம்பார் ரசமாகிவிடும். அதுமாதிரி குரு 5-ஆமிடத்தில் இருந்தபோது எல்லாருக்கும் யோகம் செய்யாமல் போனார்.

சர ராசிக்கு 11-க்குடையவரும், ஸ்திர ராசிக்கு 9-க்குடையவரும், உபய ராசிக்கு 7-க்குடையவரும் பாதகாதிபதி ஆவார்கள். அந்த வகையில் மிதுன ராசி உபயராசி. அதற்கு 7-க்குடைய குரு பாதகாதிபதியாவார். அவர் 5-ல் நின்றதால் அந்த ஸ்தானத்துப் பலன் பாதகம் அடையும் என்பது பொதுவிதி.

துலா குரு ஜென்ம ராசியான மிதுனத்தைப் பார்த்த காரணத்தால் எப்படியோ வாழ்க்கைப் பிரச்சினைக்கு வறுமை, தரித்திரம் இல்லாமல்- அளந்து படி போட்டது மாதிரி தேவைகளைப் பூர்த்தி செய்தது. வீட்டுக்குள் வேதனையும் சோதனையும் இருந்தாலும் வெளியுலகத்தில் வரவேற்பும் மரியாதையும் இருந்தது. கடன்காரர்களும் உங்களைக் கழுத்தில் துண்டைப்போட்டு நெருக்காமல் சீக்கிரம் பார்த்து செட்டில் செய்யுங்கள் என்று வேண்டுதலோடு விட்டுவிட்டார்கள்.

5-ஆமிடம் புத்திரஸ்தானம். அதில் நின்ற குரு பிள்ளைகள் வகையில் சில நன்மைகளைக் கொடுத்தார். அவர்களின் சுபகாரிய நிகழ்வுகளை நடத்தி முடிக்க வைத்தார் எனலாம். சிலர் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி முடித்திருக்கலாம். ஆலயப்பணி, தெய்வீக யாத்திரை போன்றவற்றில் மன நிறைவைச் சந்தித்து இருக்கலாம்.ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தவர்களுக்கு கடந்த காலத்தில் நடந்துவந்த பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்களை எதிர்கொண்டு சமூக கைங்கர்யங்களுக்கு பயன்படுத்தி இருக்கலாம்.

குருவுக்கு 6-ஆமிடம் கெடுதல்தான் என்றாலும் அவர் பார்க்கும் இடங்கள் 10-ஆம் இடம், 12-ஆம் இடம், 2-ஆம் இடம் ஆகும்! இதில் 10- என்பது தொழில் ஸ்தானம். அந்த வீட்டுக்குடையவரே குருதான்! அவர் அந்த தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்துக்கு 9-ல் நின்று தன் வீட்டைத் தானே பார்ப்பது சிறப்பு! கடந்த காலத்தில் தொழில்துறையில் ஏற்பட்ட தொய்வை சரிக்கட்டி நஷ்டத்தையும் சமாளித்து லாபமும் மேன்மையும் அடையலாம். இன்னும் சிலர் கௌரவப் பிரச்சினையால் தான் பார்த்த வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறினார்கள். சிலருக்கு வேலையில் விரும்பத்தகாத மாற்றமும் பதவி இறக்கமும் ஏற்பட்டது. அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் இந்த குருப்பெயர்ச்சி நல்ல திருப்பத்தையும் முன்னேற்றத்தையும் தரும். வேலையைத் தூக்கி எறிந்து வெளியேறியவர்களுக்கு வேறு நல்ல வேலை தேடிவரும். அல்லது புதிய தொழில் ஆரம்பிக்கும் யோகம் வரும். அதற்குத் தேவையான முதலீடும் கடனாக அமையும். அதேசமயம் தொழில்துறையில் போட்டியும் பொறாமையும் எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும் குரு சம்பந்தம் இருப்பதால் உங்களுடைய தெய்வ பக்தியால் அவற்றை சமாளித்துவிடலாம். குருவருளும் திருவருளும் இருந்தால் எவ்வளவு சங்கடங்கள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடலாம்.தொழில் அல்லது வேலை, உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் விமோசனம் ஏற்பட்டுவிடும். பரீக்கல், சேலத்திலிலிருந்து மேட்டூர் போகும் பாதையில் நங்கவள்ளி, பூவரசன் குப்பம், சோளிங்கர் போன்ற தலங்களில் லட்சுமி நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. அங்கு சென்று வழிபட்டால் வேலை இல்லாதோருக்கு வேலை அமையும். தொழில் இல்லாதவர்களுக்கு தொழில் உண்டாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய டிரான்ஸ்பர் ஆகிய நன்மைகளும் உண்டாகும்.

அடுத்து குரு 12-ஆம் இடத்தையும், 2-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 12-ஆம் இடம் வெளியூர்ப் பயணம், வெளிநாட்டு வேலை இவற்றைக் குறிக்கும். அதனால் ஊரைவிட்டு ஊர்மாறுவதால் சில நன்மைகளும் நல்ல முன்னேற்றங்களும் உண்டாகும். சிலர் வெளியூர் அல்லது வெளிநாட்டில் போய் சம்பாதிக்கலாம். வீண் விரயங்களைத் தவிர்க்க அதை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது புத்திசாலிலித்தனம்! சிலர் கம்ப்யூட்டர் சம்பந்தமான முயற்சிகளில் இறங்கலாம்.

குரு 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார்.

2-ஆமிடம் வாக்கு, தனம், குடும்பம், கண் பார்வை, வித்தை முதலிலியவற்றைக் குறிக்கும் இடம்! குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் விலகி ஒற்றுமை உண்டாகும். பொருளாதாரத்தில் பற்றாக்குறைக்கு இடமில்லை என்றாலும் அவ்வப்போது உள்ள தேவைகள் பூர்த்தியாகுமே தவிர, முன்கூட்டியே அந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கு இடமில்லாமல் செய்யும். 2-ஆம் இடத்தை குரு பார்ப்பதோடு அங்கு ராகு நிற்க, கேதுவும் 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார். யாருக்கும் வாக்குறுதி கொடுப்பதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. "ஆகட்டும் பார்க்கலாம்' என்ற பாணியில் பதில் சொல்லிலி வைப்பதே சாலச் சிறந்தது. கொடுக்கல்- வாங்கலில் ஜாமின் பொறுப்பு ஏற்க வேண்டாம். ஜாதக தசாபுக்திகள் மோசமாக இருந்தால் 6-ஆம் பாவக் கெடுபலனை அதிகப்படுத்தும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் மலைபோல வரும் துன்பம் பனிபோல விலகிவிடும்!

4-10-2018 முதல் 21-10-2018 வரை விசாக நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

மிதுன ராசிக்கு 7, 10-க்குடைய குரு சாரத்தில் (விசாகம்) குரு சஞ்சாரம். தனது சொந்த சாரம்! எனவே இக்காலம் திருமணத் தடை, தாமதம் விலகும். பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் இணைந்து வாழலாம். 7-க்கு பன்னிரண்டிலும்- 10-க்கு ஒன்பதிலும் குரு நிற்கிறார். மனைவி அல்லது கணவர் வகையில் சுபச்செலவுகள் உண்டாகும். ஆடை, ஆபரண அணிகலன்கள் வாங்கலாம். வீடு, மனை, வாகன ஏற்பாடுகளும் செய்யலாம். கூட்டுத்தொழில் செய்ய முதலீடு பண்ணலாம். செங்கோட்டையை அடுத்து புளியû என்ற ஊரில் சிவாலயத்தில் தட்சிணாமூர்த்திக்கு தனி சந்நிதி உண்டு. வலம் வந்து தரிசிக்கலாம் வியாழக்கிழமை சென்று வழிபடவும்.

21-10-2018 முதல் 20-12-2018 வரை அனுஷ நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

அனுஷம் சனியின் நட்சத்திரம். சனி மிதுன ராசிக்கு 8, 9-க்குடையவர். 7-ல் இருக்கிறார். அது குருவின் வீடு. சனிக்கு 12-ல் குரு நிற்கிறார். மனைவி (கணவர்) வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். மொய்ச் செலவுகளும் ஏற்படலாம். சிலருக்கு அவரவர் பிறந்த இடத்தில் இருந்து வரவேண்டிய பங்கு பாகங்கள் வந்துசேரும். கோர்ட்டு கேஸ் என்று அலையாமல் விவகாரம் செய்யாமல் சுமுகமாகப் பேசி முடிவெடுக்கலாம் சென்னையில் பல்லாவரம் அருகில் பொழிச்சலூரில் அகத்தீஸ்வரர் கோவில் சனி பகவானுக்கு உரிய கோவில் சென்று வழிபடவும்.

20-12-2018 முதல் 13-3-2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

புதன் உங்கள் ராசிநாதன் 1, 4-க்குடையவர். செல்வாக்கு, புகழ், பெருமை, திறமைக்கேற்ற பலன், பதவி, பாராட்டு எல்லாம் உங்களை தேடிவரும். சொந்த வீடு, கார், பங்களா போன்ற பாக்கியம் பெருகும் காலம்! தாயின் அரவணைப்பும் அன்பும் பராமரிப்பும் உங்களுக்கு ஆறுதலைத்தரும். தாயைக் காத்த தனயன் என்ற மரியாதைக்கு ஆளாகலாம். அரசியல், சமுதாயப் பணி, ஜாதிச்சங்கத்தில் பொறுப்புள்ள பதவிகள் கிடைக்கும். போட்டி பொறாமைகளை தவிடு பொடியாக்கிச் சேவை புரியலாம், முன்னேறலாம். திருவண்ணாமலை அருகில் ஆதிதிருவரங்கம் சென்று பள்ளிகொண்ட பெருமாளை வழிபடவும். மிகப்பெரிய நீளமான அனந்த சயன சேவை ஆனந்தம் தரும். அர்ச்சகர் ரெங்கநாதபட்டர் பொறுமையாக விளக்கம் கூறுவார்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு

மிருகசீரிடம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் உங்கள் ராசிக்கு 6, 11-க்குடையவர். செவ்வாய் வீட்டில்தான் குரு நிற்கிறார். 6-ஆம் இடம் கடன் ஸ்தானம் என்றாலும் சுபக்கடன் உருவாகும். திருமணம், மகப்பேறு, ருதுமங்களம், கட்டிட சம்பந்தமான சுபசெலவு, வண்டி வாகனம், பூமி, மனை முதலிலியவைக்காக கடன் வாங்கலாம். போட்டி பொறாமை விலகும். வைத்தியச் செலவு அகலும். சகோதர- சகோதரி வகையில் சஞ்சலம் நீங்கி சமரசம் ஏற்பட்டு சந்தோஷம் உண்டாகும். புதுக்கோட்டை அருகில் குமரமலை என்ற சிறுகுன்றில் தண்டபாணியை வழிபடவும். ராமு குருக்கள் செல்: 98424 83217-ல் தொடர்பு கொள்ளவும்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு

திருவாதிரை ராகுவின் சாரம். ராகு கடகத்தில் சந்திரன் ராசியில் இருக்கிறார். கடகம் உங்கள் ராசிக்கு 2-ஆம் இடம். வாக்கு, தனம், குடும்பம் இவற்றைக் குறிக்கும் இடம். அந்த இடம் கடகத்தையும் அங்குள்ள ராகுவையும் விருச்சிக குரு பார்க்கிறார். மகிழ்ச்சி, மனநிறைவு, குடும்பத்தில் ஒற்றுமை அன்யோன்யம், தாம்பத்ய திருப்தி ஆகிய நற்பலன்கள் நிறைவாக நடக்கும். வரவேண்டிய பாக்கி சாக்கி வசூல் ஆகும். அதன் மூலமாக கொடுக்க வேண்டிய பாக்கி சாக்கிகளை கொடுத்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். திண்டிவனம்- பாண்டிச்சேரி பாதையில் மயிலம் அடுத்து திருவக்கரை என்ற ஊரில் சந்திரமௌலீஸ்வரர், வக்கிரகாளி, குண்டலினிலி முனிவர் ஜீவ சமாதி, வரதராஜ பெருமாள், அம்பாள் போன்ற சந்நிதிகள் உண்டு. வணங்கி வளமும் நலமும் பெறலாம்.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு

புனர்பூசம் குருவின் நட்சத்திரம். குரு உங்கள் ராசிக்கு 6-ல் மறைந்தாலும் சுயசாரம் என்பதால் பாதிப்பு இல்லை. 7, 10-க்குடையவர். 7-க்கு 12-ல், 10-க்கு 9-ல் இருந்து 10-ஆம் இடத்தையே பார்க்கிறார். எனவே குருவருளும் திருவரும் உங்களை வழிநடத்தும். முயற்சிகளில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். புதிய தொழில் தொடங்கலாம். பழைய தொழிலை விரிவுபடுத்தலாம். வெளியூரில் கிளைகளை உருவாக்கலாம். சிலர் கடல் கடந்து வேலைக்குப் போகலாம் அல்லது வெளிமாநிலங்களுக்குப் போகலாம். பெற்றோரை திருப்திப்படுத்தி அவர்களின் வாழ்த்துகளை பெறலாம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தெய்வம் கடைசியில்! மாதாவும் பிதாவும்தான் முதலிலிடம். வயதான பெற்றோரை வருத்தம் அடையாமல் பராமரித்தாலே உங்களுக்கு எல்லா வளமும் உண்டாகும். தஞ்சை அருகில் தென்குடித் திட்டை குருஸ்தலம் சென்று வழிபடவும்.


கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)


டக ராசி அன்பர்களே!

இதுவரை 4-ல் அர்த்தாஷ்டம குருவாக செயல்பட்டு வந்த குரு பகவான் இப்போது 5-ஆம் இடமான விருச்சிக ராசிக்கு மாறியிருக்கிறார். இந்த குருப்பெயர்ச்சி யோகமான குருப்பெயர்ச்சிதான்! ஏற்கெனவே கூறியபடி குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் யோகமான இடங்கள். அந்த வகையில் யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் இந்த பெயர்ச்சியின் மூலம் நீங்கள் அடையலாம்.

4-ல் இருந்த துலா குரு 8-ஆமிடம், 10-ஆமிடம், 12-ஆமிடங்களைப் பார்த்தார். அத்தோடு ஜென்ம ராகுவும் நடந்துகொண்டிருக்கிறது. 7-ல் கேதுவும், ஜென்மத்தில் ராகுவும் சம சப்தமப் பார்வை!8-ஆமிடத்தை குரு பார்த்ததன் விளைவாக சிலர் அபகீர்த்தி, கௌரவபங்கம், விபத்து, இழப்பீடு ஆகியவற்றை சந்தித்து இருக்கலாம். உறவினர்களிடையே வருத்தம், சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினையில் பிரச்சினைகள், வழக்கு வியாஜ்ஜியங்களில் இழுபறியான நிலை போன்ற பலன்கள் நேர்ந்தன.

10-ஆம் இடத்தைப் பார்த்த குரு சிலருக்கு புதிய தொழில் அமைப்புகளை உருவாக்கித் தந்தார். ஒருசிலருக்கு சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்த இடத்தில் தனியாக ஒரு கிளையை நிறுவச் செய்து அதை கவனிக்கும் பொறுப்புகளை கொடுத்ததோடு நாளடைவில் அதற்கு உரிமையாளராகவும் ஆக்கினார். அப்படி கம்பெனியை எடுத்து நடத்துவதற்கு கடன் வாங்குதல், வங்கிக் கடன் பெறுதல் போன்ற பலன்களையும் சந்திக்க வேண்டிய நிலையும் இருந்தது. சிலருக்கு (ஜாதக தசாபுக்திகள் மோசமாக இருந்தவர்களுக்கு) அதில் விரயங்களும் உண்டானது.

5-ஆமிடம் புத்திரஸ்தானம், மகிழ்ச்சி, திட்டம், எண்ணம், உபதேசம், பக்தி, பூர்வ புண்ணியம், பாட்டனார், தாய்மாமன் இவற்றைக் குறிக்கும் இடம். புத்திரகாரகனும், தனகாரகனும், மாங்கல்யகாரகனுமான குரு அங்கு வந்திருப்பது மிக அற்புதம்! மக்கள்பேறு, மகிழ்ச்சி, உண்மையான வேலையாட்கள் அமைதல், சகலவிதமான சம்பத்து, செல்வம், அஷ்டலட்சுமி கடாட்சம், மந்திர உபதேசம் கிடைக்கப்பெறுதல், பக்தி வழிபாடு, இஷ்டதெய்வ- குலதெய்வ வழிபாடு, தாய்மாமன் உதவி, பாட்டனார் அல்லது பிதுரார்ஜித சொத்துகள் கிடைத்தல் ஆகிய நற்பலன்கள் நடக்கும். உங்களுடைய நீண்டகாலத் திட்டங்களும் ஆசைகளும் கனவுகளும் நிறைவேறும்.

விருச்சிக ராசிக்கு வந்திருக்கும் குரு 5-ஆம் பார்வையாக கடக ராசிக்கு 9-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 11-ஆம் இடத்தையும், 9-ஆம் பார்வையாக ஜென்ம ராசியையும் பார்க்கிறார். ஜென்மத்தில் ராகு நிற்கிறார்.

9-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்யஸ்தானம், தகப்பனார் ஸ்தானம். பூர்வீகச் சொத்துகள் அல்லது தன் சுயசம்பாத்திய சொத்துகள் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை இனி மாறிவிடும். பெரியோர்களாலும் பிள்ளைகளாலும் உங்கள் கருத்துக்கு ஆதரவு இல்லாத வகையில் சொத்துகளை அனுபவிக்க முடியாமலும் விற்க முடியாமலும், கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக இதுவரை அவதிப்பட்டவர்களின் அந்த அவல நிலைக்கு குருப்பெயர்ச்சி முற்றுப்புள்ளி வைக்கும். இனி நல்ல திருப்பத்தையும் அனுகூலத்தையும் உருவாக்கித்தரும். தெய்வத் திருவருளினால் எல்லாவிதமான சௌபாக்கியங்களும் வசதிகளும் உண்டாகும். ஆலய வழிபாடு, ஆன்மிகத் தொடர்பு, மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றலாம். குலதெய்வத்தின் அருளுக்குப் பாத்திரமாகலாம். சிலருக்கு அருள்நிலை ஏற்பட்டு அருள்வாக்குச் சொல்லும் சிறப்பும் உண்டாகும்.

11-ஆம் இடத்தையும் குரு பார்க்கிறார். கடக ராசிக்கு குரு 6, 9-க்குடையவர். அவர் 11-ஆம் இடம் என்ற வெற்றி ஸ்தானத்தைப் பார்ப்பதால் சத்ரு ஜெயம் உண்டாகும். 6-ஆம் இடம் எதிரி- அதற்கு எதிரி 6-ஆம் இடமான 11-ஆம் இடம். எதிரிக்கு எதிரி ஸ்தானம். அதனால்தான் அதை ஜெயஸ்தானம் என்றார்கள். எனவே உங்கள் எதிரி அழிந்து விடுவார்கள். தொட்டதெல்லாம் தோல்விக்கு இடமில்லாமல் ஜெயிக்கலாம். 6-ல் இருக்கும் சனியும் அதற்கு துணை செய்வார். 11-ஆம் இடம் என்பது மூத்த சகோதர ஸ்தானத்தையும் குறிக்கும். உபய களஸ்திர ஸ்தானத்தையும் குறிக்கும். எனவே மூத்த சகோதர சகோதரி வகையில் அனுகூலமும் ஆதரவும் உண்டாகும். மூத்த சகோதரர் மூலமாக எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். அவருடன் இணைந்து நடத்த முற்பட்ட தொழில்துறையும் கைகொடுக்கும். செய்தொழிலில் லாபமும் ஏற்படும். ஜென்ம ராசியை குருவும் பார்க்கிறார். 7-ல் உள்ள கேதுவும் பார்க்கிறார். குரு புகழையும் போற்றுதலையும் தருவார். கேது தூற்றுதலைத் தருவார். ஜென்மத்தில் ராகு வேறு அமர்ந்திருக்கிறார். தன் ஒழுக்கத்தினாலும் செயல்களினாலும்தான் கேவலத்தை விரட்ட முடியும். இதுதான் சத்திய சோதனை எனப்படும். சத்தியத்துக்குத்தான் சோதனை வைக்க முடியும். அசத்தியத்துக்கு சோதனை தேவையில்லை. படிக்கும் மாணவனுக்குத்தான் பரீட்சை வைக்க முடியும்! பள்ளிக்குப் போகாதவனுக்குப் பரீட்சை அவசியமில்லையே! அதாவது வாழ்வதற்கு பந்தயம் கட்டலாம். வீழ்வதற்கு அவசியமில்லை! ஜென்மத்தைப் பார்க்கும் குருவால் உங்களுடைய செயல்பாடு, திறமை, ஆற்றல் எல்லாம் சிறப்பாகும். இதுவரையிலும் ஏலக்காய் இருந்த டப்பா சரக்கு இல்லாவிட்டாலும் மணக்கும் என்பதுபோல வறட்டுக் கௌரவமாகத்தான் வாழ்ந்திருக்கிறீர்களே தவிர, வாழ்க்கையில் இன்னும் செட்டில் ஆகவில்லையே! யாரோ சில வி.ஐ.பி.க்கள் உங்களைத் தேடி வந்து ஏ.சி. காரில் ஓசியாக அழைத்துப் போய் ஸ்டார் ஹோட்டலில் உபச்சாரம் செய்து அனுப்பி வைத்த நிலை! இனிமேல் அன்ன ஆடை தரித்திரம் இல்லை! குடி இருக்கும் இடத்துக்கும் பஞ்சமில்லை. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று ஒரு மகான் கூறியதுபோல் நீங்கள் தானும் நன்றாக இருக்கவேண்டும், தன்னுடன் இருப்பவர்களையும் நன்றாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணம் உங்களின் விருப்பம் போல் அமைய இந்த குரு பகவான் துணைபுரிவார். திட்டங்களும் செயலாகும். வெற்றியடையும்.

4-10-2018 முதல் 21-10-2018 வரை விசாக நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

கடக ராசிக்கு குரு 6, 9-க்குடையவர். மேலும் கடக ராசி குருவின் உச்ச ராசி! அதனால் கடகத்துக்கு எப்போதும் குரு மிகமிக நல்லவர். 6-க்குடையவர் என்றாலும் 6-ஆம் இடத்து கெடுபலனை கண்டிப்பாகச் செய்யமாட்டார். கத்தி பழத்தையும் நறுக்கும். கையையும் நறுக்கும். அரிவாள் இளநீரையும் சீவும், ஆள் தலையையும் சீவும். குரு 9-க்குடையவர் என்பதால் கெட்டதைத் தவிர்த்து நல்லதையே செய்வார். அப்படி 6-ஆம் இடத்துப் பலனாகிய நோய், வைத்திய செலவைச் செய்தாலும் புரையோடி சீழ் வைத்த புண்ணை அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்துவது போலத்தான் போட்டி- திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற வைக்கும்! கடன்- சுபக்கடனாக விருத்திக் கடனாகும்! 9-ஆம் இடம் ஆன்மிக ஈடுபாடு- தெய்வப் பிரார்த்தனை நிறைவேற்றம்- குரு உபதேசம்- தெய்வஸ்தல சுற்றுலா- பிதுரார்ஜித சொத்து பங்கு பாகங்களில் வரவேண்டிய பங்கு இவைகளில் நற்பலனைத் தரும் இடம். பூர்வீகச் சொத்தை விருத்தி பண்ணுவதற்காகவும் கடன் வாங்கலாம். 5-ல் இருக்கும் குரு சுயசாரம் பெற்று 9-ஆம் இடம், 11-ஆம் இடம், ஜென்ம ராசியைப் பார்ப்பதால் பாக்கியம், லாபம், செல்வாக்கு, அந்தஸ்து, பெருமை ஆகிய பலன்களே நடக்கும். நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் (சாமியார் கரடு ஸ்டாப்) சின்ன குன்றின்மேல் தத்தாத்ரேயர் சந்நிதியில், அதன் கீழ் ஸ்வயம் பிரகாச சுவாமிகளின் (அவதூதர்) ஜீவ சமாதி உள்ளது. சபா மண்டபத்தில் அய்யப்பன், தட்சிணாமூர்த்தி, ஏழரை அடி உயர சனீஸ்வர பகவான், துர்க்கை சந்நிதிகளும் உண்டு. வழிபடவும். சுவாமிகள் தவம் இருந்த சுரங்க குகை இருக்கிறது.

21-10-2018 முதல் 20-12-2018 வரை அனுஷ நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

அனுஷம் சனியின் நட்சத்திரம். சனி குருவின் வீடான தனுசு ராசியில் இருப்பதால் குருவுக்கும் சனிக்கும் தற்காலிலிக நட்புக் கூட்டணி ஏற்படுகிறது. தேர்தல் காலங்களில் கொள்கை வேறுபட்ட கட்சிகள் கூட்டணி வைத்துக்கொள்வதுபோல! கடக ராசிக்கு 7, 8-க்குடையவர் சனி. குரு 9-க்குடையவர். எனவே இக்காலம் பொதுவாக திருப்தியான காலமாகவே அமையும். திட்டங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். அதற்கு மனைவி மக்கள், குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் இருக்கும்- உதவியும் கிடைக்கும். சனிக்கு 12-ல் குரு இருப்பதால் இடம் மாற்றம், குடியிருப்பு மாற்றம், வெளியூர் வாசம், வெளிநாட்டு முயற்சி போன்ற பலன்களையும் சந்திக்கலாம். மதுரை அருகில் திருவாதவூர்- மாணிக்கவாசகர் பிறந்த ஊர். திருமறைநாதர் கோவிலிலில் சனி பகவானுக்கும் அவர் குருநாதர் காலபைரவருக்கும் தனி சந்நிதி (பக்கத்து பக்கத்தில்) இருப்பதால் அங்கு சென்று வழிபடலாம்.

20-12-2018 முதல் 13-3-2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

கேட்டை புதனின் நட்சத்திரம். உங்கள் ராசிக்கு 3, 12-க்குடையவர். குரு ராசிக்கு 6, 9-க்குடையவர். சகோதரி- சகோதரர் வகையில் அல்லது நண்பர்கள் வகையில் சுபச்செலவு ஏற்படும். அவர்களுடைய காரியங்களை நீங்கள் உங்கள் கை முதலீடை செலவு செய்துவிட்டு, பிறகு அவர்களிடம் வாங்கி நிறைவு செய்வீர்கள். சிலர் நட்புக் கருதியும் பாசத்துக்காகவும் பெருந்தன்மையாக செலவு செய்யலாம். அதனால் அவர்களின் அன்புக்குப் பாத்திரமாகலாம். ஔவைப் பிராட்டி அபூர்வமான நெல்லிலிக்கனியை அதியமான் மன்னனிடம் சமர்ப்பித்தது போல! கும்பகோணம் அருகில் குடவாசலிலில் பழமையான சிவன்கோவில், கீழே அம்பாள் சந்நிதி. (தெற்கு பார்த்தது). படியேறிப் போனால் சுவாமி மேற்கு நோக்கிய சந்நிதி! கருட பகவான் இந்த சிவபெருமானை உபதேசம் பெற்று வழிபட்டார். ஜென்ம ராகுவின் தோஷம் விலக இங்கு செல்வது அவசியம்! வழியில் நாச்சியார் கோவில் கல்கருடனும் மிகச்சிறப்பு.புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்குகுருப்பெயர்ச்சியால் வேண்டியதெல்லாம் கிடைக்கும். விரும்பியதெல்லாம் வந்துசேரும். தொல்லை கொடுத்தோர் தூர விலகிப் போவார்கள். நல்லவர்கள் தாமே வந்து தழுவி வாழ்த்துவார்கள். கெட்டது விட்டு விலகும். நல்லது வந்து ஒட்டிக்கொள்ளும். கடன்கள் அடைபடும். வரவுகள் மேலோங்கும். விரயங்கள் குறையும். சீரும் சிறப்புமாக வாழலாம். மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியையும், சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதியையும் வழிபடவும்.

பூச நட்சத்திரத்திரக்காரர்களுக்கு

திருமணத்தடை விலகும். தொழில் சிக்கல் அகலும். உறவினர்களின் பகைமாறும். கவலைகள் தீரும். கடன்கள் குறையும். குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். தன்னம்பிக்கையும் தைரியமும் பிறக்கும். விடாமுயற்சி வெற்றிபெறும். நீங்கள் கஷ்டப்பட்ட காலத்தில் உங்களுக்கு கைகொடுத்தவர்கள் இப்போது கால மாறுபாட்டில் வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், அவர்களுக்கு கேட்காமலேயே முன்வந்து உதவி செய்து அவர்களை உச்சத்துக்கு அழைத்துப் போவீர்கள். ராமநாதபுரம் அருகில் தேவிபட்டினம் சென்று மொட்டையர் மகன் சக்தி சீனிவாச சாஸ்திரியைப் பார்த்து நவகிரக சாந்தி செய்து கொள்ளவும். செல்: 99435 46667.

ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு

ஆயில்யம் ஆதிசேஷன் நட்சத்திரம். இப்போது உங்கள் ஜென்ம ராசியில் ராகு இருக்கிறார். கோபமும் தாபமும் மாறிமாறி வரும். அன்பும் பாசமும் உள்ள நெஞ்சில் கண்டிப்பும் வைராக்கியமும் குடிகொள்ளும். அடிப்பீர்கள்; அடுத்து அணைப்பீர்கள். மறப்போம் மன்னிப்போம் என்று பெருந்தன்மையாக நடந்துகொண்டால் எல்லாருக்கும் இனியவராக ஏற்றம் பெறலாம். நாகர்கோவில் ஆதிசேஷன் கோவில் சென்று வழிபடுவது உத்தமம்.

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)


சிம்ம ராசி அன்பர்களே!

இதுவரை சிம்ம ராசிக்கு 3-ல் இருந்த குரு இப்போது 4-ஆம் இடமான விருச்சிகத்துக்கு மாறுகிறார். ஏற்கெனவே இருந்த இடமும் சரியல்ல! இப்போது மாறியிருக்கும் இடமும் சரியல்ல! அப்படி என்றால் இனியும் கஷ்டம் தொடருமா என்ற சந்தேகம் எழுகிறது!3-ல் குரு இருந்தாலும் அவர் பார்த்த இடங்கள் நல்ல இடங்கள்தானே! 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடம் ஆகும். எனவேதான் சிலருக்குத் திருமணம் நடந்தது. உபதொழில் கைகூடியது. பூர்வீகச் சொத்து சம்பந்தமான வில்லங்கம், விவகாரங்களில் சாதகமான பலனும் அமைந்தது. சில காரியங்களில் வெற்றியும் அனுகூலமும் உண்டானது. 5-ல் உள்ள சனி சிலருக்கு பிள்ளைகளைப் பற்றிய கவலையையும் சங்கடத்தையும் தந்தார். சிலர் பிள்ளைகளுக்கு வைத்தியச் செலவு, ஆபரேஷன் போன்றவற்றை சந்தித்த நிலை. வேறுசிலர் சொந்த வீட்டிலேயே ஒத்தியோ அல்லது வாடகையோ கொடுத்து குடியிருக்கும் சூழ்நிலை. வெளியூர் அல்லது வெளிமாநில வேலைக்குச் சென்றவர்கள் சில நாட்களிலேயே வீடு திரும்பினார்கள்.குரு 4-ஆமிடத்துக்கு 12-ல் மறைந்த காரணத்தால் பூமி, வீடு, மனை, தாய், தன் சுகம் என்ற 4-ஆமிடத்துப் பலன்களில் எதிர்பாராத செலவினங்களையும் பாதிப்புகளையும் தந்திருக்கலாம்.

7-ஆம் இடத்துக்குத் திரிகோணமாக இருந்து 7-ஆமிடத்தைப் பார்த்ததால் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்வுகளும், சிலருக்கு மனைவி பேரில் தொழில் வருமான யோகமும், கணவன்- மனைவி தாம்பத்ய வாழ்க்கையில் ஒற்றுமையும் உண்டானது. 10-ஆம் இடமான தொழில் ஸ்தானத்துக்கு (ரிஷபம்) 6-ல் மறைவு (துலாம்) என்பதால் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையும் சம்பாத்தியமும் அமையவில்லை. இருந்தாலும் நர்சரி பள்ளியில் இரண்டாயிரம் ரூபாய்க்கு வவுச்சரில் கையெழுத்திட்டு ஆயிரம் வாங்கியவர்களும் உண்டு. உள்ளூரில் சொந்தத் தொழில் செய்தவர்களும் வரவு- செலவு திருப்தியாக இருந்தும் வாடகை இடத்தை கிரயம் முடிக்க முடியாமல் அலட்சியமாக இருந்த காரணத்தால் வேறு நபர்கள் விலை கொடுத்து தொழில் இடத்தை கிரயம் வாங்கிய நிலை! இன்னும் சிலர் லாபத்தை எல்லாம் வட்டிக்கும் தவணைக்கும் கட்டி மிச்சமில்லாமல் கவலைப்பட்டார்கள். இவையெல்லாம் சிம்ம ராசிக்காரர்களின் கடந்தகால அனுபவங்கள்!விருச்சிக ராசிக்கு வந்துள்ள குரு 5-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 10-ஆம் இடத்தையும், 9-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 8-ஆம் இடத்தைப் பார்ப்பதால் மனக்குழப்பமும் வேதனையும் கற்பனை பயமும் இருக்கும். தன் ஸ்தானத்தைத் தானே பார்க்கிறார். அதனால் நீங்கள் யாருக்கு நல்லது செய்தாலும் அது கெடுதலாகவே முடியும். வேண்டாத விவகாரங்களிலும் தேவையற்ற பிரச்சினைகளிலும் தலையிட்டு அலட்டிக்கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்திலும் கவுரவப் போராட்டம் நீடிக்கும்.

12-ஆம் இடத்தை குரு பார்த்ததன் பலனாக சுப விரயச் செலவுகளும் வரும். விபரீத செலவுகளும் வரும். 4-ஆமிடத்தில் நிற்பதால் பூமி, வீடு, சம்பந்தமான செலவும் அல்லது வாகன சம்பந்தமான செலவும் வரலாம். சிலருக்குத் தன் தேக சுகத்திற்காகச் செலவு செய்யும் அவசியமும் உண்டாகும். சந்திர தசாபுக்தி நடந்தால் தாயின் சுகம் பாதிக்கப்படலாம். குரு புத்திரகாரகன் என்பதால் பிள்ளைகள் வகையில் எதிர்பாராத செலவுகளோ, தவிர்க்கமுடியாத செலவுகளோ வரலாம். மக்கள் வகையில் மங்களச் செலவுகளும் எதிர்பார்க்கலாம். 4-ஆமிடம் என்பது பூமி, வீடு என்று முன்னமே கூறியிருக்கிறோம். இடம், மனை, வாகனம் சம்பந்தமாக வீண் விரயமும் செலவும் ஏற்படலாம். முழுப்பணமும் செலுத்திய பிறகு முறையாக பதிவு செய்யாமல் இடத்தை விற்றவர் இழுத்தடிப்பார். பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம். .ஒரு அன்பர் ஹவுசிங் யூனிட்டில் தவணை முறையில் வீடு வாங்கினார். அதை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். பாக்கித் தவணையை கொடுத்து முடித்த பிறகுதான் பெயர் மாற்றம் செய்யமுடியும். மூன்று வருடங்களில் வாங்கியவர் முழுத் தவணையும் கொடுத்துவிட்டார். விற்றவர் அன்றைய மார்க்கெட் நிலவரப்படி உள்ள கூடுதல் தொகையைக் கொடுத்தால்தான் பெயர் மாற்றம் செய்து தருவேன் என்று பல்டி அடித்துவிட்டார். ஆக, குரு 8, 12-ஆம் இடங்களைப் பார்ப்பது நல்லதல்ல. என்றாலும் 10-ஆம் இடத்தைப் பார்ப்பது நல்லது. அதிலும் சிம்ம ராசிக்கு 5-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் யோகம்! தொழில் ஸ்தானத்தில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளித்துத் தொழில் நடத்தி வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவீர்கள்.

பொதுவாக 3-ஆமிடத்தில் நின்ற குருவின் பலனைவிட, 4-ஆம் இடத்துக்கு மாறியிருக்கும் குரு பலன் பரவாயில்லை என்றபடி அமையும். துலாத்தில் குரு இருந்தபோது தொழில் ஸ்தானத்திற்கு 6-ல் மறைந்துவிட்டார். அதனால் தொழில் இயக்கமே இல்லாமல் ஸ்தம்பித்துவிட்டது எனலாம். மீறி இயங் கினால் அதற்குண்டான வருமானம் கிடைக்காமல் இழுபறியாக இருந்த நிலை. இப்போது விருச்சிகத்திற்கு வந்திருக்கும் குரு தொழில் நடக்காவிட்டாலும் தொழிலைக் காரணம் காட்டி வெளியில் கடன் வாங்கி உங்கள் சொந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். ரொக்கக் கடன் கிடைக்காவிட்டாலும் சரக்குகளை கடனாக வாங்கி விற்று உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வீர்கள். வாங்கிய சரக்குக் கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைப்பீர்கள். இதுதான் 8-க்கு உடையவர் 10-ஆம் இடத்தைப் பார்த்த பலன் ஆகும்!

6-ல் கேது இருக்கும் காலம் சத்ருக்களினால் தொல்லைகள் எதுவும் இருக்காது.

4-10-2018 முதல் 21-10-2018 வரை விசாக நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

சிம்மராசிக்கு 5, 8-க்குடைய குரு தனது சுயசாரத்தில் சஞ்சரிப்பதால் வீண் சஞ்சலம்- அவப்பெயர்-பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்று குற்றம் புரியாமல் குற்றவாளிகூண்டில் ஏற்றி விசாரணைக்கு ஆளானாலும்-8-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் நிவர்த்தி உண்டாகும். பொய்சாட்சிகள் பொடிப் பொடியாகும். தர்மமிகு வாழ்வுதனை சூது கவ்வும் -ஆனாலும் தர்மமே வெல்லும் என்றமாதிரி உண்மை ஜெயிக்கும். 5-ல் சனி இருப்பதால் உங்கள் மனம் அலைபாய்ந்து கொண்டேயிருக்கும். மதில்மேல் பூனையாக தீர்க்கமான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். ""எண்ணித் துணிக் கருமம்''-என்ற வள்ளுவரின் வாக்கை வேத வாக்காக கடைப்பிடிக்க வேண்டும். கும்கோணம் அருகில் ஆலங்குடி சென்று தட்சிணாமூர்த்தியை வழிபடவேண்டும்.

21-10-2018 முதல் 20-12-2018 வரை அனுஷ நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

சிம்மராசிக்கு 6, 7-க்குடைய சனி 5-ல் நிற்க அவருக்கு 12-ல் குரு நிற்கிறார். தவிர்க்கமுடியாத செலவுகள் அடுத்தடுத்து அலையென வந்து அரவணைக்கும். அதைச் சமாளிக்க கேட்காதவரிடம் எல்லாம் கை நீட்டி கடன் கேட்பீர்கள். சமயத்தில் மனைவியின் நகைகளையும் அடகு வைத்து சமாளிப்பீர்கள். என்றாலும் உங்கள் பிரச்சினைகளும் கவலைகளும் வெளியுலகத்துக்கு தெரியாது. கௌரவம், மதிப்பு, மரியாதை, பாதிக்காது. அதேசமயம் கடன் வாங்குவதற்கும் ஒரு இலக்கணம் உண்டு. தரமானவர்களிடமும் மனிதாபிமானம் உள்ளவர்களிடம்தான் கடன் வாங்கவேண்டும். நமது கஷ்டம் தீரவேண்டுமென்று மனசாட்சியில்லாதவர்களிடமும் ஈவு இரக்கம் இல்லாதவர்களிடமும் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு கடன் வாங்கக் கூடாது. அது யானை தன் தலையில் தானே குப்பையை வாரிக்கொட்டுவதற்குச் சமம்! இப்படி வாங்கக் கூடாத இடத்தில் கடன் வாங்கித்தான் திரையுலகத் தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். கும்பகோணம் அருகில் திருச்சேறை கடன் நிவர்த்திஸ்தலம் -சென்று 11 திங்கள்கிழமை திங்கட்கிழமை தொடர் அர்ச்சனைக்குப் பணம் அனுப்பலாம். சுந்தரமூர்த்தி குருக்கள், செல்: 9443737759.

20-12-2018 முதல் 13-3-2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

சிம்மராசிக்கு 2,11-க்குடைய புதன் சாரத்தில் குரு சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு தன வரவு, தன லாபம், வாக்குமேன்மை, குடும்பத்தில் குதூகலம், வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசுயோகம், பிள்ளைகளால் பெருமை- பெற்றோர்-பிறப்புகளிடையே சிறப்பான பலன்கள் நடக்கும். எந்தக் காரியத்தை எடுத்தாலும் எளிதான வெற்றி-எதிலும் லாபம் ஆகிய பலன்களை அனுபவிக்கலாம். சிலர் பல ஆண்டுகளுக்கு முன்பாக வேண்டாவெறுப்பாக ஊருக்கு வெளியே வாங்கிப் போட்ட காலி இடம் இப்போது ஒன்னுக்கு பத்தாக விலை ஏறியதால் அதை கொள்ளை விலைக்கு விற்று லாபம் பார்க்கலாம். அதை அவரவர் திட்டப்படி பயனுள்ள அயிட்டங்களில் முதலீடு செய்யலாம். பொன்னமராவதி அருகில் செவலுர் சென்று பூமிநாதசுவாமி யையும் ஆரணவல்லியம்மனையும் வழிபடவும்.

மக நட்சத்திரக்காரர்களுக்கு

இந்த குருபெயர்ச்சி பொதுவாக ஏற்ற தாழ்வான பலன்களைத் தந்தாலும் -சிங்கிள்நோட்டுப் பாதையில் ஸ்பீடுபிரேக்கைத் தாண்டிபோகும் பயணம் போல- பயணம் தடைப்படாது-கிளச்சை மாற்றி வேகத்தடைகளை தாண்டிப் போக வேண்டிய நிலையாக இருக்கும். 6-ல் கேது, 2-ல் ராகு. இந்த இரண்டும் பாவஸ்தானங்கள். அதில் பாவ கிரகம் இருப்பது சிறப்புதான். நல்ல இடங்களில் சுபகிரகங்களும் கெட்ட இடங்களில் அசுபகிரகங்களும் இருக்கவேண்டும். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபட வேண்டும்.

பூர நட்சத்திரக்காரர்களுக்கு

பூரம் சுக்கிரனின் நட்சத்திரம். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 3, 10-க்குடையவர். குரு 4-ல் நின்று 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். எனவே தொழில் மேன்மையடையும், வளர்ச்சியாகும். அரசு வேலைக்கு இடமுண்டாகும். ஏற்கெனவே பதவியில் இருப்போருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு எதிர்பார்க்கலாம். விரும்பிய இடம் மாறுதலும் ஏற்படலாம். தனியார் பள்ளிகளில் பணிபுரிவோருக்கு அரசு பள்ளி அல்லது கல்லூரிகளில் பணி கிடைக்கும். ஸ்ரீரங்கம் சுக்கிரன் ஸ்தலம். அங்கு சென்று வெள்ளிக்கிழமை தரிசிக்கலாம்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு

உத்திரம் உங்கள் ஜென்ம ராசிநாதன் ஆன சூரியன் நட்சத்திரம். ராசிக்கு 5-க்குடைய குரு உங்கள் எண்ணங்களை ஈடேற்றுவார். திட்டங்களை நிறைவேற்றுவார். குரு 8-க்குடையவரும் ஆவார். சில குறுக்கீடுகளும் தடைகளும் இடையூறுகளும் ஏற்பட்டாலும் உங்கள் விடாமுயற்சியால் வெற்றி பெறலாம். ""தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்'' என்பது வள்ளுவரின் வாக்கு. அரசியல் கட்சிகளில் ஈடுபாடாக இருப்போருக்கு இக்காலம் ஏற்றமான காலம். எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்ற தத்துவப்படி கூட்டணி வைத்துக்கொள்ளலாம். கும்பகோணம்- ஆடுதுறை அருகில் சூரியனார்கோவில் சென்று நவகிரக வழிபாடு செய்வதுடன் அருகில் திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரரையும் மாங்கல்யம் காத்த மங்களநாயகியையும் வழிபடவும்.

கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)


ன்னி ராசி அன்பர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு கடந்த ஒரு வருட காலமாக 2-ஆம் இடத்திலிருந்த குரு இப்போது 3-ஆம் இடத்துக்கு மாறுகிறார். 4, 7க்குரிய குரு 2-ல் இருந்தபோது 6-ஆமிடம், 8-ஆமிடம் 10-ஆமிடங்களைப் பார்த்தார். 2-ல் குரு இருந்தகாலம் கையில் பணம் புரண்டது என்றாலும் தொழில் வளர்ச்சிக்காக கடனும் வாங்க நேரிட்டது.6-ஆமிடத்தை குரு பார்த்த காரணத்தால் சிலருக்கு கடனும் வளர்ந்தது. நோய் நொடி வைத்தியச் செலவுகளும் உண்டானது. அதாவது குரு சுபகிரம் ஆதலால் அவர் பார்க்கும் இடத்தின் பலனைப் பெருக்குவார் என்பது பொது விதி. இது உங்களுக்கே தெரியும். சிலர் (பெண்கள்) கணவன் வாங்கிய கடனுக்காக தானும் வேலைக்குப்போய் அந்தக் கடனுக்கு வட்டி கட்டிய நிலையும் உண்டு. இன்னும் சிலர் உள்ளூரில் இருந்து வெளியூருக்குச் சென்று வேலை பார்த்துக் கடனை அடைத்தார்கள்.தொழில்துறையில் இருந்தவர்கள் தொழில் விருத்திக்காக வங்கிக் கடனோ அல்லது தனியார் கடனோ வாங்கி தொழிலை நடத்தினார்கள். அப்படி நடத்தும் போது தொழில் போட்டியின் காரணமாக சத்ருக்களையும் சந்தித்தார்கள்.வாகன வகையில் பழுது செலவுகளும், சிலர் விபத்து போன்ற கண்டங்களையும் கடந்து வந்த நிலை. பொருளாதாரத்தில் உங்களது சொந்த பணமாக இல்லையென்றாலும் அன்னியர் பணம் உங்கள் கையில் புரண்டது. ஜாதக தசாபுத்திகள் பாதகமாக இருந்தவர்கள் ஏமாற்றம், இழப்புகளை சந்தித்திருக்கலாம்.

இப்போது 3-ஆமிடத்தில் குரு வந்திருப்பதால் எதிர்மறையான பலன் நடக்கும் என்றாலும் 3-ஆமிடம் தைரிய, வீர்ய, பராக்கிரம, சகோதர ஸ்தானமாகும். எனவே உங்களுக்கு முதலில் ஒரு நம்பிக்கையையும் தருவார் என்பது உறுதி. அது இருந்தால் மற்ற எல்லா நன்மைகளையும் யோகங்களையும் அடையலாம்.போஜ மகாராஜனின் கதையைப் பலமுறை எழுதியிருந்தாலும் மீண்டும் நினைவுபடுத்தி உங்களுக்கு விளக்குகிறேன். போஜன் தினசரி பூஜையில் அஷ்டலட்சுமிகளையும் ஆராதனை செய்து செல்வ கடாட்சத்தோடு விளங்கினான். ஒருசமயம் அவனுக்கு ஏழரைச்சனி ஆரம்பித்தது. தசாபுக்திகளும் மோசமாக இருந்தது. அப்போது ஆதிலட்சுமி அவன்முன் தோன்றி, ""உனக்கு நல்ல நேரம் முடிந்து கெட்டநேரம் ஆரம்பிக்கப்போகிறது. அதனால் அஷ்டலட்சுமிகளாகிய நாங்களும் உன்னைவிட்டு விலகும் நேரம் வந்துவிட்டது என்றாலும் இத்தனை ஆண்டுக்காலம் எங்களை ஆத்மார்த்தமாக பூஜை செய்ததால் உன் தவப்பயனுக்குப் பலனாக எங்கள் எட்டுபேரில் ஒருவரை மட்டும் உன்னிடம் வாசம் பண்ணும்படி விட்டுவிட்டு மற்ற ஏழுபேரும் விலகிக்கொள்ள நினைக்கிறோம். யார் வேண்டும் என்று நீயே முடிவெடுத்துக்கொள்'' என்றாள்.

"அஷ்டலட்சுமிகளில் யார் என்னை விட்டுப் போனாலும் சரி... தைரியலட்சுமி மட்டும் என்னைவிட்டு விலகாமல் இருந்தால் போதும்'' என்றான். மகாலட்சுமியும் அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதித்து மறைந்தாள். மறுநாள் காலை போஜன் பூஜை அறைக்குப் போனதும் ஒரு ஆச்சரியம். அங்கு அஷ்டலட்சுமிகளும் காட்சியளித்தார்கள். போஜனுக்குப் புரியவில்லை. அப்போது ஆதிலட்சுமியான மகாலட்சுமி, ""ஹே போஜன், எங்கள் எட்டு பேருக்குள்ளும் ஒரு உடன்படிக்கை உண்டு. அதாவது தைரியலட்சுமி எங்கு இருக்கிறாளோ அவளுக்குத் துணையாக மற்ற ஏழுபேரும் அங்கே நித்தியவாசமாக இருப்போம். நீ அவளையே கேட்டுவிட்டதால் எல்லாருமே உன்னிடத்தில் இருந்து உன்னைக் காப்பாற்றுவோம்'' என்றாள். தைரியம் புருஷ லட்சணம் என்பார்கள். அதனால் தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.3-ல் உள்ள குரு 5-ஆம் பார்வையாக 7-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 9-ஆம் இடத்தையும் 9-ஆம் பார்வையாக 11-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 7-ஆம் இடத்தை 7-க்குடைய குருவே பார்க்கிறார். அது நன்மைதான். அதனால் திருமணத் தடை விலகும். "எத்தனையோ பெண்கள் பார்த்தாச்சு. எத்தனையோ வரன்களைப் பார்த்தாச்சு. வயது ஏறிக்கொண்டே போகிறது. இன்னும் கல்யாணம் கூடமாட்டேங்குது' என்று பெண்ணைப் பெற்றவர்களும் ஆணைப் பெற்றவர்களும் கலங்கி நின்ற நிலையை இந்த குருப்பெயர்ச்சி மாற்றியமைத்து திருமணத்தை கைகூட வைக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக வெறுத்து விலகியிருந்த தம்பதிகள் அல்லது நித்தமும் சண்டை சச்சரவுகள் செய்துகொண்ட தம்பதிகளுக்கு இப்போது 7-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நடக்கும் சூழல்களை உருவாக்கித் தருவார். 9-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தெய்வ அனுகூலமும் தகப்பனார் வர்க்கத்தில் ஆசியும், பண உதவியும் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளை மாற்றியமைத்து புதுமைப்படைப்பு ஆக்கலாம்.

3-ஆமிடம் சகோதரஸ்தானம் என்பதால் உடன்பிறந்தவர்கள் வகையில் நிலவிய சொத்துப் பிரச்சினைகள் நீங்கி சமரச உடன்பாடு ஏற்படும். குலதெய்வ வழிபாடு, இஷ்டதெய்வ வழிபாடு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். 11-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் காரிய வெற்றி உண்டாகும். தெய்வ அனுகூலமும் பரிபூரணமாகக் கிடைக்கும். கண்ணபரமாத்மா பாண்டவர்களுக்கு பக்கத்துணையாக இருந்தும் அவர்களைப் பதினான்கு வருடம் வனவாசம் போகாமல் தடுத்து நிறுத்திக் காப்பாற்ற முடியவில்லை. தர்மர் செய்த தவறின் காரணமாக அவர்கள் கஷ்டத்தை அனுபவிக்க நேரிடுகிறது. காலம் மாறும்போது அவர்கள் கஷ்டமும் தீர்ந்தது. வெற்றியும் கிடைத்தது. ராஜ்ஜியமும் கைக்குக் கிடைத்தது. தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்.குரு இருக்கும் இடம் 3-ஆமிடம் மத்திமப் பலனைத் தரும் இடம் என்றாலும் பார்வை பலத்தால் யோகம் தரும் நற்பலனாக மாறும். இயற்கை தத்துவத்தில் எதுவுமே முழுக்க முழுக்க நல்லதும் இல்லை. முழுக்க முழுக்க கெடுதலும் இல்லை. நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு. நல்லது செய்யும் கிரகங்களே கெடுதலையும் செய்துவிடும். கெடுபலன் செய்யும் கிரகங்களே நல்லதையும் செய்துவிடும். இதுதான் காலத்தின் தீர்ப்பு.

4-10-2018 முதல் 21-10-2018 வரை விசாக நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

கன்னி ராசிக்கு 4, 7-க்குடைய குரு தனது சுய சாரத்தில் சஞ்சரிக்கிறார். கன்னி உபயராசி. அதற்கு 7-க்குடையவர் பாதகாதிபதி என்றாலும் -சுயசாரம் பெறுவதால் பாதகாதிபத்தியம் தோஷம் விலகும். 4, 7 என்ற பாவ பலன்களைப் பொறுத்த நற்பலன்களே நடக்கும். தேக சுகம், ஆரோக்கியம் தெளிவாக அமையும். தாய்- சேய் உறவு பலப்படும். ஒருசில குடும்பத்தில் பிள்ளைகளின் தொல்லைகளால் வெறுத்துப்போய் முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்த பெற்றோரை தவறை உணர்ந்த பிள்ளைகள் மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு அழைத்து வரலாம். ""மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு கிளை பாரமா?'' என்பதை சிந்தித்து செயல்பட்டால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். சென்னையில் திருவலிதாயம் (பாடி) என்ற இடத்தில் தட்சிணாமூர்த்திக்கு முக்கியத்துவம் உண்டு. அங்கு வியாழக்கிழமை சென்று வழிபட உத்தமம்.

21-10-2018 முதல் 20-12-2018 வரை அனுஷ நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

கன்னி ராசிக்கு சனி 5, 7-க்குடையவர். அவர் சாரத்தில் 4, 8-க்குடைய குரு சஞ்சரிப்பது சிறப்பு. அதாவது 5-க்குடையவர் சாரத்தில் 4-க்குடையவர் சஞ்சரிப்பது விசேஷம். அதேபோல 6-க்குடையவர் சாரத்தில் 8-க்குடையவர் சஞ்சரிப்பதும் டபுள் மைனஸ்= பிளஸ் என்ற அடிப்படையில் நெகட்டிவ் ஷ் நெகட்டிவ்= பாசிட்டிவ் என்ற முறையிலும் கெடுதல்கள் நல்லதாக மாறும். ஒரு அரசியல்வாதிக்கு இரு அடியாட்கள். அவர்களுக்குள் தனிப்பட்ட பிரச்சினைகள். ஒரு ரௌடியை இன்னொரு ரௌடி வெட்டிக் கொலை செய்துவிட்டார். அரசியல்வாதி யாருக்காக சாட்சி சொல்லுவார்? கேஸ் எப்படியாவது போகட்டும் என்று ரகசியமாக வெளிநாடு போய் தங்கிவிட்டார். அதாவது பாம்பும் சாக வேண்டும். கம்பும் ஒடியக்கூடாது என்ற ராஜ தந்திரம். ஒரு கோடு- அதை சிறிதாக்க வேண்டுமானால் பக்கத்தில் அதை விட பெரிய கோடு போட்டால் போதும். முதலில் போட்ட கோடு சிறியதாகிவிடும். அதுபோல ஒரு தவறு அதை விடப் பெரிய தவறு செய்யும் போது முதல் தவறு சிறிதாகிவிடும். அதேபோல ஒரு குடும்பத்தில் பொறுப்பாக இருந்த ஒரு தாயார் திடீர் என்று இறந்து விட்டார். அதை அடுத்து ஒரு மாதத்தில் அந்தப் பாட்டியின் இளைய மகன் விபத்தில் இறந்து விட்டார். தாய்க்காக அழுவதா- மகனுக்காக அழுவதா? அறந்தாங்கி அருகில் எட்டியத்தளி என்ற ஊரில் உள்ள சிவாலயத்தில் சனீஸ்வரருக்கு முக்கியத்துவம் உண்டு. சனிக்கிழமை சென்று வழிபடவும். குருக்கள் சந்திரசேகர் செல்: 95664-99415).

20-10-2018 முதல் 13-3-2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

கன்னி ராசிநாதனே புதன்தான். அத்துடன் 10-க்கும் உடையவர். அவருடைய நட்சத்திரமான கேட்டையில் குரு சஞ்சரிக்கும் இக்காலம் தொழில், வாழ்க்கை எல்லாவற்றிலும் சிறப்பான பலன்களையும் யோகத்தையும் அடையலாம். பொதுப்பணியிலும் ஜாதி சங்க அமைப்புகளிலும், அரசியல் கட்சி போன்றவைகளிலும் முக்கிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். ஏற்கெனவே நிலவிய போட்டி பொறாமைகளும், பனிப்போர் கருத்துகளும் சூரியனைக்கண்ட பனிபோல விலகிவிடும். பகைவர்களும் மனம் மாறி உங்களுக்கு ஆதரவு காட்டலாம். தமிழக அரசில் போர்க்கொடி தூக்கியவர்களுக்கும் மந்திரி பதவி கொடுத்து வாயடைத்து தன் பக்கம் இழுத்துக் கொண்டது போல நண்பர்கள், உறவினர்கள் வகையிலும் வேண்டாதவர்களையும் தனக்கு வேண்டியவர்களாக ஆக்கிக் கொள்ளலாம். மேட்டூர் அருகில் நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மரை வழிபடவும். பாலாஜி பட்டர் செல்: 94435 15904, 94439 41014.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு

கன்னி ராசிக்கு விரயாதிபதியான சூரியன் சாரத்தில் குரு சஞ்சரிப்பதால் ஜாதக தசாபுத்திகள் சாதகமாக இருந்தால் நற்பலன்களும்- பாதகமாக இருந்தால் துர்ப்பலன்களும் நடக்கும். கும்பகோணம்- ஆடுதுறை வழி சூரியனார் கோவில் சென்று நவகிரகங்களையும் அருகில் திருமங்கலக்குடி மாங்கல்யம் காத்த மங்களநாயகி- பிராணனை காத்த பிராணநாதேஸ்வரரையும் ஞாயிற்றுக்கிழமை வழிபடவும். நவகிரகமும் தமது பாவத்தைப் போக்கியருளிய திருத்தலம்.

அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு

குருப்பெயர்ச்சி வெற்றியையும் லாபத்தையும் தரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மூத்த சகோதரர்களால் முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். சிலர் ஜாதக அமைப்புப்படி மறுமணம் அல்லது உபய களஸ்திரயோகம் அமைய வாய்ப்புண்டு. அதனால் அவப்பேருக்கும் ஆளாகலாம். ""ஒழுக்கம் விழுப்பம் தருவதால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்'' என்பது குறள் கூறும் நீதி. திருவையாறு அருகில் திங்களூர் சென்று வழிபட வேண்டும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு

3, 8-க்குடைய செவ்வாயின் நட்சத்திரத்தில் குரு சஞ்சரிப்பதால் ஏமாற்றம், இழப்பு, விபத்து, வேதனை போன்ற பலன்களை சந்திக்கக்கூடும். பங்காளி வகையிலும் பிரச்சினைகள் உருவாகலாம். எச்சரிக்கையும் நிதானமும் அவசியம். அறுவை சிகிச்சைக்கு இடம் ஏற்படலாம். பொன்னமராவதி அருகில் தேனீமலை சென்று ஆறுமுகப் பெருமானை வழிபட வேண்டும்.

துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)


துலா ராசி அன்பர்களே!

இதுவரை உங்கள் ஜென்ம ராசியில் இருந்த குரு இப்போது 2-ஆம் இடத்துக்கு மாறியுள்ளார். பொதுவாக குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் யோகமான இடங்கள்.ஏற்கெனவே குரு இருந்த இடம் ஜென்மம். ""ஜென்ம ராசியில் ராமர் சீதையைச் சிறை கொடுத்தது போல, வேலை, வருமானம் இல்லாமல் சிலரை வீட்டிலேயே முடக்கி வைத்தது. வேலை, தொழில், சம்பாத்தியம் இருந்தும் கழுத்துக்கு மேல் வெள்ளம் போல வரவுக்கு மேல் செலவும் குடும்பச் சுமையும் என தாங்க முடியாத தலைவலியை அனுபவித்தவர்கள் சிலர். குடும்பம் ஓரிடம் தான் ஓரிடம் என்று சிலரை வாட வைத்து சிந்திக்க வைத்தது. இவை சிலரது சொந்த அனுபவம்.இப்போது குரு 2-ஆம் இடத்துக்கு நல்ல இடத்தில் மாறியிருப்பதோடு கடந்த சனிப்பெயர்ச்சியோடு ஏழரைச் சனியும் முடிவடைந்து 3-ஆமிடத்தில் சனி இருக்கிறார்.

பொதுவாக குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள்போல சனிக்கு 3, 6, 10, 11-ஆம் இடங்கள் யோகமான இடங்கள். இவர்களின் இந்த ஸ்தான பலத்தால் கேது, ராகு தோஷங்களும் கெடுதல் பண்ணாது என்று நம்பலாம்.கடந்த காலத்தில் குடும்ப ஸ்தானமான 2-ஆம் இடத்துக்கு குரு 12-ல் மறைவு. குடும்பத்தில் கணவன்- மனைவி சலசலப்பு, சச்சரவு, ஒற்றுமைக் குறைவு போன்ற பலன்களை சந்தித்து இருக்கலாம். சிலர் பிரிவுகளையும் எதிர்கொண்டு இருக்கலாம். ஜென்மத்தில் குரு இருந்தாலும் அவர் பார்த்த 5, 7, 9-ஆம் இடங்கள் நல்ல இடங்கள்தான். உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் செயல்பாடாக அமைந்தாலும் அதிலும் ஏதாவது ஒரு முட்டுக்கட்டை இருக்கத்தான் செய்தது. சிலருக்கு உபதொழிலில் நன்மை ஏற்படுத்தியது. சிலருக்கு கூட்டுத் தொழிலில் இருந்து தனியாக தொழில் ஆரம்பிக்க வைத்தது. இவையெல்லாம் நடந்தாலும் அது முழுமையான நன்மையைத் தரவில்லை என்றே சொல்லலாம். இப்போது 2-ஆம் இடத்துக்குரிய வாக்கு, வித்தை, தனம், குடும்பம் ஆகிய சிறப்புகளை சீராகச் செய்வார். திருமணம் நடக்கும். குடும்பம் அமையும். பொறுப்புகளும் கடமைகளும் உண்டாகும். உயர் படிப்பில் ஆர்வம், அக்கறை ஏற்படும். வாக்கு மேன்மையாலும் வாக்கு சாதுரியத்தாலும் நன்மைகள் உண்டாகும். 2-ஆம் இடத்தில் இருக்கும் குரு 6-ஆம் இடத்தையும், 8-ஆம் இடத்தையும், 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார். துலா ராசிக்கு குரு 3, 6-க்கு உடையவர்.

6-ஆம் இடம் என்பது கடன், எதிரி வைத்தியச் செலவு, நோய் இவற்றைக் குறிக்கும் இடம். இதை சுபகிரகம் குரு பார்த்தால் விருத்தி பண்ணுவார். ஒரு இடத்தை பாவக் கிரகம் பார்த்தால் அதை அழிக்கும். சுபகிரகம் பார்த்தால் செழிக்கும். அந்த விதிப்படி குரு 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் கடன் அதிகரிக்கும். நோய் அதிகரிக்கும். போட்டி, பொறாமை அதிகமாகும் என்பது பலன். 6-ஆம் இடம் என்பது தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்துக்கு பாக்கியஸ்தானம் என்பதால் தொழில் வகைக்காகவும் கடன் வாங்கலாம். அல்லது போட்டி, பொறாமை களைச் சந்தித்து சமாளிக்கலாம். 3, 6-க்குடையவர் 8-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 8-ஆம் இடம் என்பது விபத்து, விசனம், சஞ்சலம், கவலை, இழப்பு, ஏமாற்றம் என்பது தெரிந்ததே. அதனால் தாயார் அல்லது மனைவி வகையால் கவலை, வருத்தம், சஞ்சலம் ஆகியவற்றை சந்திக்க நேரலாம். எனினும், 4-க்கு 11-ல் குரு பலம் பெறுவார். எனவே ஒருவகையில் தாயார், தன் சுகம், பூமி, வீடு, வாகனம் ஆகிய 4-ஆம் பாவப் பலன்களைப் பொருத்து முழு கெடுதலாக நடக்காது.

நெல்லிக்காய் துவர்ப்பு ருசியானாலும் தண்ணீர்ப் பட்டவுடன் இனிப்புச் சுவையாக மாறுவதுபோல 4-ஆம் பாவப் பலனில் கெடுதலும் நன்மையாக மாறிவிடும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் மனைவி அல்லது தொழில் கூட்டாளி வகையில் வருத்தம், சங்கடம் போன்றவை நிகழும். 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் யோகமான இடங்கள் என்று கூறுகிறீர்கள். ஆனால் 2-ல் குரு வந்தும் மேற்படி கஷ்டமான பலன்களையே எழுதுகிறீர்களே என்ற சந்தேகம் எழலாம். குரு நின்ற இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கே பலன் அதிகம். அதனால்தான் குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்லுவார்கள். இவ்வளவு கடின பலன்களுக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக குரு 10-ஆம் இடத்தைப் பார்க்கும் பலன் அமையும். ஒரு ஹோட்டலில் போய் சாப்பிடும் போது சிற்றுண்டி அயிட்டமும் சாம்பார், சட்னி எல்லாம் வாய்க்கு ருசியாக அமையாவிட்டாலும், கடைசியில் காபி மட்டும் டிகிரி காப்பியாக நாக்கில் கொஞ்ச நேரம் சுவை ஒட்டிக் கொண்டிருக்கும்படி அமைந்துவிட்டால் மனதுக்குத் திருப்தி ஏற்படுவதுபோல குரு பார்வை 10-ஆம் இடத்துக்குக் கிடைப்பதால் அற்புத நிறைவை ஏற்படுத்தும். கடக ராசிக்குத் திரிகோணத்தில் நின்று தொழில் செய்யும் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில் வருமானம் மிகச்சிறப்பாக அமையும்.

பொது "பந்த்' (அர்த்தால்) நடக்கும் சமயத்தில் எங்கேயாவது ஒரு சந்துக்கடை திறந்து இருந்தால் அங்கு வியாபாரம் குவியும் அல்லவா. அப்படி உங்கள் தொழிலும் மேன்மையாக நடந்து கைநிறைய காசை அள்ளி முடிப்பீர்கள். அந்தத் தெம்பும் மனநிறைவும் மற்ற இடத்துக்கு குரு பார்வையால் ஏற்பட்ட கெட்ட பலனை மறக்கச் செய்துவிடும். கையில் காசு, பணம் சரளமாகப் புரண்டால் மனதுக்கும் உற்சாகம் வந்துவிடும். மனுஷனுக்கும் ஒரு கிளுகிளுப்பு வந்துவிடும். பையில் கத்தை கத்தையாக நோட்டுகளை வைத்துக் கொண்டு பஜார் பக்கம் போனாலே குஜாலாகிவிடும். துலா ராசிக்கு 3, 6-க்குடையவர் குரு. அவர் 2-ல் நிற்பது எதிர்பாராத தனயோகத்தையும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தரும். அதுமட்டுமல்ல; 6-க்கு உடையவர் 2-ல் இருந்தால் அன்னியரின் தனம் உங்கள் கையில் புரளும். 2-க்கு உடையவர் 6-ல் மறைந்தால் உங்களுடைய தனம் அன்னியரிடம் போய்ச் சேரும். தெளிவாகச் சொன்னால் நாளைக்கே தருகிறேன் என்று பணம் வாங்கிப் போனவர்கள் மாதக் கணக்கானாலும் வாயைத் திறக்கவே மாட்டார்கள். சிலருக்கு வாங்கியதை நினைப்பூட்டினாலும் திருப்பித் தந்துவிடுகிறேன் என்ற வார்த்தையை எதிர்பார்க்க முடியாது. அதுபோலத்தான்.

4-10-2018 முதல் 21-10-2018 வரை விசாக நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

துலா ராசிக்கு 3, 6-க்குடைய குரு தனது சுய சாரத்தில் சஞ்சாரம். 3, 6 என்பது கெட்ட ஆதிபத்தியம் என்றாலும் சஞ்சாரம் என்பதால் கெடுதல் விலகும். நெல்லிக்காய் துவர்ப்பு சுவை என்றாலும் உமிழ்நீர் பட்டதும் இனிப்புச் சுவையாக மாறுவதில்லையா? காமவெறியனான அருணகிரிநாதர் முருகன் அடியாராக மாறி திருப்புகழ் பாடவில்லையா? கொடுங்கொள்ளைக்காரன் ரட்சகன்- வால்மீகி முனிவராகி இராமாயணம் பாடவில்லையா? திருடனாக இருந்தவர் திருமங்கையாழ்வாராக மாறவில்லையா? ஆக காலமும் நேரமும் கிரகங்களும் கெட்டவர்களையும் நல்லவர்களாக்கிவிடும். நல்லவர்களையும் கெட்டவர்களாக்கிவிடும். அதே சமயம் நல்லதே நினை, நல்லதே நடக்கும் என்பதுதான் கருத்து.

21-10-2018 முதல் 20-12-2018 வரை அனுஷ நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

துலா ராசிக்கு ராஜ யோகாதிபதிதான் சனி. அவர் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் இக்காலம் உங்களுக்கு தங்கு தடையற்ற மங்களம் பொங்கும் பலன்கள் நடக்கும். குடிசையும் கோபுரமாகும் அளவு வசதி வாய்ப்புகள் பெருகும். சனி 4, 5-க்குடையவர். பூமி, வீடு, நிலம், மனை பாக்கியம் பெருகும். தாய் தந்தையரின் அன்பும் ஆசியும் உங்களை வழிநடத்தும். அதற்கும் மேலாக குருவருளும் திருவருளும் உங்களுக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும். அரசியலில் ""சொன்னதைச் செய்வோம் செய்வதைத்தான் சொல்லுவோம்'' என்பது போல நீங்கள் நடப்பதையே சொல்வீர்கள்; செய்வதையே சொல்வீர்கள். அதனால் மற்றவர்களிடம் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். நடந்து சென்றாலே எதிரில் வருபவர் உங்களை கையெடுத்துக் கும்பிடு போடுவார்கள். திருவண்ணாமலை பாதையில் போளூர் அருகில் ஏரிக்குப்பம் என்ற ஊரில் சனீஸ்வர பகவானுக்கு (பொங்கு சனி) தனி சந்நிதி உண்டு. சனிக்கிழமை சென்று தரிசனம் செய்யலாம்.

20-12-2018 முதல் 13-3-2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

கேட்டை புதனின் நட்சத்திரம். புதன் துலா ராசிக்கு 9, 12-க்குடையவர். தெய்வபக்தி மேலோங்கும். ஜோதிடம்- வைத்தியம்- ஆன்மிகம் இவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகமாகும். சிலர் சீரடி பாபாவின் பக்தராக மாறி வழிபாடு செய்யலாம். சிலர் சிவ தீட்சை பெற்று உபாசனை செய்யலாம். சிலர் வீர வைஷ்ணவராக முத்திரை குத்தி பெருமாளை வழிபடலாம். திருப்பதி பாலாஜியை தரிசனம் செய்யலாம். ஆன்மிகச் சுற்றுலா போகலாம். தகப்பனார் வழி பூர்வீகச் சொத்து வகையறாவில் சீர்திருத்தம் மேற்கொள்ளலாம். தாய்மாமன் வகையில் நன்மைகள் உண்டாகும். நீங்கள் மாமனாக இருந்தால் உங்கள் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காதணி விழா- மொட்டை போடுதல் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். மதுரை அருகில் திருமோகூர் சென்று காளமேகப் பெருமாளை வழிபடலாம்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு

துலா ராசிக்கு செவ்வாய் 2, 7-க்குடையவர். (அவருடைய நட்சத்திரம் சித்திரை). செவ்வாய் வீட்டில் விருச்சிக ராசியில் நிற்கும் குரு மீனம் (5-ஆம் இடம்), ரிஷபம் (7-ஆம் இடம்), கடகம் (9-ஆம் இடம்) இவற்றைப் பார்க்கிறார். எனவே திருமணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் கைகூடும். ஜாதகத்தில் செவ்வாய், சனி சம்பந்தம் இருந்தால் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் கைகூடும். பெரியவர்களுக்குப் பிடிக்காத திருமணமாக இருந்தால் காமோகர்க்ஷண ஹோமம் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு கலச அபிஷேகம் செய்யலாம். காரைக்குடி சுந்தரம் குருக்கள் இதை முறைப்படி செய்வதுடன் நல்ல இடத்து சம்பந்தம் நிறைவேற ஆண்களுக்கு கந்தர்வ ராஜ ஹோமமும் பெண்களுக்கு பார்வதி சுயவம்வர கலா ஹோமமும், செய்யப்படும். எனது ஆன்மிக ஞானகுரு பள்ளத்தூர் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரிடம் பயிற்சி பெற்றவர். (செல்: 99942-74067). மேலூர் அருகில் ஏரியூர் சிவன் கோயிலில் தண்டபாணி சந்நிதி உண்டு. சென்று வழிபடவும். சிறு குன்று. கோவில்வரை வண்டி போகும்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு

சுவாதி ராகுவின் நட்சத்திரம். ராகு துலா ராசிக்கு 10-ல் இருக்கிறார். 10-ஆம் இடம் வாழ்க்கை, தொழில், உத்தியோகம் இவற்றில் பிரச்சினைகள் உருவாகும் என்றாலும், அவரை விருச்சிக குரு பார்ப்பதால் கோடி தோஷம் விலகும். கோடி நன்மை பெருகும். பொதுவாக பிரச்சினை இல்லாதவர்களே யாரும் இல்லை. கெட்ட நேரத்துக்கு பிரச்சினைகள் பெரிதாக வெடிக்கும். நல்ல நேரத்துக்கு பிரச்சினைகளே நல்ல தீர்வாக அமையும். உங்களுக்கு எல்லாமே நல்லபடியாக அமையும். அரசுப் பணியில் இருப்போருக்கு குடைச்சல் கொடுத்த மேலதிகாரிகள் விலகிப் போவதால் உத்தியோகத்தில் நிம்மதி உண்டாகும். போட்டியாளர்கள் வேறு சிக்கலில் மாட்டிக் கொண்டு பூட்டிவிட்டுப் போவதால் உங்கள் தொழில் துறை எழில் பெற்று ஏற்றம் பெறும். உத்தமபாளையத்தில் (தென் காளஹஸ்தி) ராகு- கேதுவுக்கு தனி சந்நிதி உண்டு. ஞாயிறுதோறும் ராகு காலத்தில் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளலாம். நீலகண்ட சிவாச்சாரியார். (செல்: 93629 93967).

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு

விசாகம் குருவின் நட்சத்திரம்தான். அவர் 2-ல் நின்று பலன் தருவதால் தனம், வாக்கு, குடும்பம் எல்லாவற்றிலும் மனம் விரும்பிய பலன்கள் நடக்கும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்றுசேரும். புதிய குடும்ப வாழ்க்கை அமையும். அருளும் பெருகும். பொருளும் சேரும். பனிப்போர் செய்த உறவினர்கள் இனி இனிமையாக ஒத்துழைப்பார்கள். ஒதுங்கிப் போன உறவினர் விரும்பி வந்து உதவுவார்கள். சரளமான பணப்புழக்கம் காணப்படும். நண்பர்களிடம் கொடுத்த பணம் வந்து சேரும். கும்பகோணம்- குடவாசல் அருகில் சேங்காலிபுரத்தில் குரு தத்தாத்ரேயர் கோவில் சென்று குருவாரம் வழிபடவும். டிரஸ்டி: நாகசுப்பிரமணியம், (செல்: 94872 92481).

விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)


விருச்சிக ராசி அன்பர்களே!

வரை உங்கள் ராசிக்கு 12-ல் இருந்த குரு இப்போது ஜென்ம ராசிக்கு மாறியிருக்கிறார்.ஏற்கெனவே 12-ல் இருந்து 4-ஆமிடம், 6-ஆமிடம், 8-ஆமிடங்களைப் பார்த்தார். 2-க்குடைய குரு 12-ல் மறைந்து காணப்பட்டதால் பொருளாதாரத்தில் சிக்கல், குடும்பத்தில் அமைதியின்மை, சச்சரவு, குழப்பம் உண்டானது. சிலருக்கு வேலை பார்த்துவந்த இடத்திலிருந்து வேலையே மாற்றமானது. சிலருக்கு வேலையும் பறிபோனது. விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனி நடந்துகொண்டிருப்பதால் அதில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தவர்களுக்கு உயிர்ச்சேதம், பொருட்சேதம், இழப்பு, நஷ்டம் போன்றவற்றை சந்தித்திருக்கக்கூடும். சிலரது அனுபவத்தில் இடமாற்றம், குடியிருப்பு மாற்றம், ஊர் மாற்றம், வேலையில் டென்ஷன், நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற அலைக்கழிப்பு நிலைகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. பூமி, வீடு, வாகன வகையில் கடன்களை உண்டாக்கியது. எதிர்பாராத ஏமற்றம் விரயச்செலவு, சங்கடம் ஆகியவற்றையும் ஒருபுறம் தந்தது.இப்போது ஜென்ம ராசிக்கு வந்திருக்கும் குரு நன்மையைச் செய்வாரா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் ஜென்ம குரு எல்லாருக்கும் கெடுதல் பண்ணாது.ஜென்ம ராசிக்கு வந்திருக்கும் குரு 5-ஆமிடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களைப் பார்க்கிறார்.

ஜென்மத்தில் வந்த குரு உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகளை உருவாக்குவார். புற்றில் உறங்கிக்கிடக்கும் பாம்பு சீறி வருவதுபோல உங்களுக்குள் புதைந்துகிடக்கும் அறிவாற்றலும் சாமர்த்தியமும் வெளிப்படும். குரு புத்திரகாரகன். புத்திர ஸ்தானமாகிய 5-ஆம் இடத்தைப் பார்ப்பதால் நீண்ட காலமாக வாரிசு கிடைக்காமல் வருத்தப்பட்ட தம்பதிகளுக்கு இனி வாரிசு யோகம் உருவாகும். எண்ணம், திட்டம், மகிழ்ச்சி, குரு உபதேசம் ஆகியவற்றை 5-ஆம் இடம் குறிக்கும். உங்கள் நீண்டகாலத் திட்டங்கள் நிறைவேறும். எண்ணங்கள் ஈடேறும். மனதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் குரு உபதேசம் கிடைக்கும். அதன்மூலம் ஆன்மிகத்தில் ஈடுபாடும், ஜோதிடம், மாந்திரீகம் போன்றவற்றில் தேர்ந்த ஞானமும் தெளிவும் உண்டாகும்.

7-ஆம் இடத்தை குரு பார்ப்பதன் காரணமாகத் திருமணத்தடை விலகும். திருமணமானவர்களுக்கு மனைவியின் பெயரில் தொழில் அமையும். அல்லது மனைவிக்கு வேலை கிடைத்து சம்பாத்தியம் செய்து கொடுப்பார். கூட்டுத்தொழில் அல்லது சைடு பிஸினஸ் உருவாகும். 7- என்பது மனைவி ஸ்தானம். அதனால் திருமணமாகியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல் பிரிந்து வாழும் தம்பதிகள் குரு பார்வையின் பலனாக இணைந்து வாழ வழிபிறக்கும். விருச்சிக ராசிக்கு குரு 2, 5-க்குடையவர். 3-ல் உள்ள கேது சகோதர வகையில் சங்கடங்கள் நீக்கி நன்மை தருவார். கூடப்பிறந்தவர்கள் அல்லது பெற்றோர்களின் நிர்பந்தத்தால் கணவரோடு சேர்ந்து வாழமுடியாத மனைவிக்கும் அல்லது கணவருக்கும் துணிவும் தைரியமும் ஏற்பட்டு தடைகளை உடைத்து சேர்ந்து வாழ முடிவெடுப்பார்கள். ராகு- கேதுவுக்கு 3, 6, 11 நல்ல இடங்களாகும். 2-ல் உள்ள சனி பொருளாதாரத்தில் சிறுசிறு சங்கடங்களை ஏற்படுத்துவார்.

2-க்குடைய குருவும் 2-ஆமிடத்துக்கு 12-ல் மறைந்ததும் ஒரு காரணம். சனி பொய்மைக் கிரகம். பொய்மையினால் பொருள் சேரும் என்பது ஜோதிட விதி. வக்கீல் தொழிலுக்கு சனி வலுப்பெற்றிருக்க வேண்டும். நன்றாகப் பொய் சொல்லி வாதிட்டால்தான் கேஸ் நிறைய கிடைக்கும். வருமானம் பெருகும். வக்கீல் தொழிலைக் குறை கூறவில்லை. இன்றைய நடைமுறையைச் சொல்லுகிறேன். அதேபோல ஜோதிடம், நியூமராலஜி, வாஸ்து, ஜெம்ஸ், அருள்வாக்கு என்பதும் புனிதமான கலை. வீழ்ந்தவர்களுக்கும் வாழ்ந்துகாட்ட வழிசொல்லும் கலை. அதை ஒருசிலர் வியாபார நோக்கத்தோடு தொழிலாக்கி சம்பாதிக்கிற நிலையை மறுக்கமுடியுமா? 9-ஆம் இடத்தை குரு பார்த்த பெருமையால் பூர்வீகச் சொத்துகளில் உள்ள பிரச்சினைகள் விலகும். சிக்கல்களும் தெளிவாகும். பங்கு பாகங்கள் முறையாகப் பிரிக்கப்படும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த (வேலையில் இருந்து ஓய்வு பெற்ற நபர்களுக்கு) பி.எப். மற்றும் நிலுவையில் இருந்த ஓய்வூதியத் தொகையும் வந்து சேரும். 9-ஆம் இடம் தெய்வ ஸ்தானம் குலதெய்வமும் அதன் எல்லையும் தெரியாமல் திண்டாடித் திரிந்தவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சிக்குப் பிறகு 5, 9-ஆம் இடங்களை குரு பார்ப்பதால் குலதெய்வப் பெயரும் இருப்பிடமும் தெரிந்து பங்காளிகளுடன் சேர்ந்துபோய் பூஜை போடலாம்.

இஷ்ட தெய்வ வழிபாட்டு முறைக்கு தீட்சையும் குரு உபதேசமும் கிடைக்கும். சிலர் தெய்வத்திருப்பணி- ஆலயத்திருப்பணிகளில் பங்கேற்கலாம். எனவே குரு பார்வைக்கு உள்ள சிறப்பு- குரு நின்ற இடத்துக்கும் உண்டு. ஜென்மம் என்பது கௌரவம், புகழ், கீர்த்தி, செல்வாக்கு, ஆற்றல், திறமை, பெருமை, ஆயுள் இவற்றைக் குறிக்கும் இடம். அதனால் அங்கு வந்திருக்கும் குருவால்- ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருந்த உங்கள் திறமை, ஆற்றல் எல்லாம் இனி ஊரறியத் தெரிந்து புகழையும் பெருமையையும் பெறும். என்றாலும் இந்த ஏழரைச்சனியின் கடைசிக்கட்டம் பாதச்சனி. இதில் ஏற்கெனவே கூறியபடி சந்திர தசையோ சந்திர புக்தியோ நடப்பவர்கள் மிக மிகக் கவனமுடன் செயலாற்றுவது அவசியம். அப்படிப்பட்டவர்கள் திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும். வசதி படைத்தவர்கள் ஒருமுறை ருத்ரஹோமம் செய்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு செல்லும்.

4-10-2018 முதல் 21-10-2018 வரை விசாக நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

விசாகம் குருவின் நட்சத்திரம். உங்கள் ராசிக்கு 2, 5க்குடையவர். ஜென்ம குரு சீதையைச் சிறை வைத்தது என்ற பழமொழி இருந்தாலும் அது உங்களுக்குப் பொருந்தாது. ராசிக்கு நல்ல ஆதிபத்தியம் பெற்றவர் என்பதோடு 5, 7, 9 எனும் நல்ல இடங்களைப் பார்க்கிறார். பொதுவாக குருவுக்கு ஸ்தானபலத்தை விட பார்வை பலம் சிறப்பு. எனவே வாரிசு இல்லாதோருக்கு வாரிசுயோகம் அமையும். பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெரியோருக்கு அவர்களின் தொல்லைகளினால் முதியோர் இல்லம் போகலாமா என்ற குழப்பம் நீங்கி அவர்களின் அன்பும் ஆதரவும் அனுசரணையும் எதிர்பார்க்கலாம். பிள்ளைகளுக்கு நற்காரியம் செய்து வைக்கலாம். வசதியுடையவர்கள் பிள்ளைகளுக்கு இன்சூரன்ஸ் பாலிஸி கூட்டுவது, அவர்கள் பேரில் பிக்ஸட் டெபாசிட் செய்வது -அவர்களுக்காக கார், டூவீலர் வாங்கித்தருவது போன்ற செயல்களினால் அவர்கள் மனம் குளிரும், திருப்தியடையும். நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று குருதத்தாத்ரேயரை வழிபடவும். அர்ச்சகர் செல்: 9345438950.

21-10-2018 முதல் 20-12-2018 வரை அனுஷ நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

அனுஷம் சனியின் நட்சத்திரம். சனி விருச்சிக ராசிக்கு 3, 4-க்குடையவர். 2-ல் குரு வீட்டில் (தனுசு ராசியில்) இருக்கிறார். எனவே சகோதர சகோதரி ஒற்றுமை, உடன்பிறப்புகளின் விசேஷம், விருந்து விழாக்களில் பங்கு பெறுதல், நண்பர்களின் சகாயம்- நல்லவர்களின் நட்பு- வல்லவர்களின் இணைப்பு-உற்றார் உறவினர்களின் சந்திப்பு- உதவி ஒத்தாசை போன்ற திருப்தியான பலன்களை சந்திக்கலாம். சிலர் பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனங்களை வாங்கலாம். அதற்கு இ.எம்.ஐ. கட்டும்படி கடன் வசதியும் கிடைக்கும். சிலர் சொந்த வீடு, பிளாட், அபார்ட்மென்ட் குடியிருப்பு ஏற்பாடு செய்யலாம். ஏழரைச்சனியால் நொந்து நூலாகி வைத்தியம் பார்த்தவர்களுக்கு இனி விமோசனமும் விடிவும் பிறக்கும். முழுமையான தேக சுகம் ஏற்படும். சிலர் ஆங்கில வைத்திய முறையை நீக்கி இயற்கை வைத்தியம் அல்லது ஆயுர்வேதம் -ஹோமியோபதி சிகிச்சை போன்றவைகளை ஏற்றுக்கொள்ளலாம். அலோபதி என்பது கெமிக்கல் -பக்கவிளைவுகளைத்தான் உண்டுபண்ணும். வேறு சிலர் மருந்தில்லா மருத்துவம் - யோகா -தியானம் போன்றவைகளில் ஈடுபடலாம். பேராவூரணி அருகில் மருந்துப்பள்ளம் என்ற ஊரில் மருந்தீஸ்வரர் கோவில் இருக்கிறது. தேவலோகத்து வைத்தியர்கள் அஸ்வினிகுமாரர்களால் ஸ்தாபிக்கப்பட்ட கோவில். அற்புதத்தலம். சிவமணி குருக்கள் செல்:9445152424.

20-12-2018 முதல் 13-3-2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் கேட்டை

புதன் நட்சத்திரம். புதன் விருச்சிக ராசிக்கு 8, 11-க்குடையவர். மேலும் குருவின் வீடான மீனத்தில்தான் புதன் நீசம் அடைவார். எனவே இக்காலம் முற்பகுதியில் அட்டமாதிபத்திய பலனும், பிற்பகுதியில் லாபாதிபத்திய பலனும் நடக்கும் எனலாம். இடப்பெயர்ச்சி, அக்கம் பக்கத்து குடியிருப்போரால் பிரச்சினை -வம்பு வழக்கு- துன்பம், துயரம், அவமானம், அபகீர்த்தி, எதிர்பாராத இழப்பு, விபத்து போன்ற எட்டாமிடத்துப் பலன்கள் நடக்கும். சிலசமயம் சொல்லாததை சொன்னதாக வீண் பழியும் வந்து சேரும். பிற்பகுதியில் இவைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு அவதூறு கூறியவர்களே தம்மை உணர்ந்து திருந்தி மன்னிப்புக் கோரலாம். நீங்களும் பெருந்தன்மையாக மறப்போம் மன்னிப்போம் என்று ஏற்றுக்கொள்ளலாம். மறப்பவன் மனிதன் -மன்னிப்பவன் தேவன். வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல் என்ற பகுதியில் பெருமாளை வழிபடலாம்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு

குருவின் சொந்த நட்சத்திரம் விசாகம். எனவே குருபெயர்ச்சி உங்களுக்கு எல்லா வகையிலும் ஏற்றம் தரும். ஏழரைச்சனி ஒருபுறம் (கடைக்கூறு) நடந்தாலும் குருபெயர்ச்சியால் பொங்குசனியாக பொலிவு ஏற்படும். குருவின் மனைவி தாரா. அவர் ஒருசமயம் சந்திரன்மேல் ஆசை கொண்டு குடும்ப உறவு ஏற்படுத்தி புதன் என்ற மகனைப் பெற்றெடுத்ததாக புராணம் சொல்லும். அந்த மகனை (புதனை) பிரகஸ்பதி குரு -தன் மகனாக ஏற்றுக்கொண்டாராம். அதுபோல உங்கள் வாழ்க்கையிலும் சில அனுபவம் ஏற்படலாம். இன்னொருவருக்குப் பிறந்த பிள்ளையோடு தாராவையும் ஏற்றுக்கொண்டு குடும்பம் நடத்தும் சூழ்நிலை வரலாம். அது முறையான திருமணமா அல்லது சின்ன வீடு செட்டப்பா என்பது அவரவர் ஜாதக பலனைப் பொருத்த சமாச்சாரம். ஊத்துக்கோட்டை அருகில் சுருட்டப்பள்ளி என்ற ஊரில் பள்ளிகொண்ட ஈசுவரர் கோவிலில் தாம்பத்ய தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார், வழிபடவும்.

அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு

குருபெயர்ச்சி அற்புதப் பலன்களைத் தரும். அனுஷம் சனியின் நட்சத்திரம். சனி, குருவின் வீடான தனுசு ராசியில் இருக்கிறார். குருவின் ராசியான மீனத்தில் சனியின் நட்சத்திரமான உத்திராட்டாதியும், குருவின் உச்ச ராசியான கடகத்தில் சனியின் மற்றொரு நட்சத்திரமான பூசமும் அமைந்துள்ளது. எனவே குருவுக்கும் சனிக்கும் ஒரு நல்ல உடன்பாடும் கூட்டணியும் உண்டு என்பதால் இக்காலம் உங்களுக்கு எதிர்பாராத யோகங்களையும் நற்பலன்களையும் தருவது உறுதி. பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். விலகிப்போன உறவு தேடிவந்து ஒட்டிக்கொள்ளும். உங்களை ஏமாற்றியவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்துவிடுவார்கள். பிள்ளையார்பட்டி அருகில் வயிரவன்பட்டி சென்று வழிபடவும்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு

கேட்டை புதனின் நட்சத்திரம். உங்கள் ராசிக்கு 8, 11-க்குடையவர். ஏற்கெனவே எழுதியபடி ஒருபாதி கெடுதலாகவும் மறுபாதி நல்லதாகவும் நடக்கும். ஜாதக தசாபுத்தி யோகமாக அமைந்துவிட்டால் கெடுதல் எல்லாம் நல்லதாக மாறிவிடும். மாறாக இருந்தால் பலனும் வேறாகிவிடும். நல்லதும் கெடுதலாகிவிடும். அதற்கு உதாரணம் மறைந்த ஜெயலலிதா. சசிகலாவை தேர்ந்தெடுத்தார். அவரே வினையாக மாறினார். சசிகலா எடப்பாடியை முதல்வராக்கினார். அவரே எதிரியானார். சசிகலாவின் செல்வத்தை இன்று தினகரன் அனுபவிக்கிறார். இப்படி பல குடும்பங்களில் தனிப்பட்ட முறையிலும் மாறுபாடான பலன்கள் நடக்கின்றன. வேலைக்கு இருந்தவரை தொழில் கூட்டாக சேர்ந்துக்கொண்ட பிறகு அவர் வளர்ச்சியடைந்து தீட்டிய மரத்தில் பதம் பார்த்த அனுபவம் நிறைய உண்டு. முதலாளி குடும்பத்தாரை ஓரம் கட்டியதுண்டு. திருநெல்வேலி மாவட்டத்தில் நவதிருப்பதி என்று ஒன்பது பெருமாள் ஸ்தலம் உண்டு. ஒரேநாளில் தரிசனம் செய்யலாம்.

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)


னுசு ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு இதுவரை 11-ஆம் இடத்திலிருந்த குரு இப்போது 12-ஆம் இடத்துக்கு மாறியிருக்கிறார். ஏற்கெனவே இருந்த 11-ஆம் இடம் அற்புதமான இடம். லாபஸ்தானம். வெற்றி ஸ்தானம். இப்போது வந்துள்ள இடம் விரய ஸ்தானம்- செலவு ஸ்தானம். கடந்த காலத்தில் 11-ஆம் இடத்தில் லாப ஸ்தானத்தில் இருந்த குரு எல்லாருக்கும் லாபத்தை அள்ளிக்கொடுத்தாரா? வெற்றிமேல் வெற்றிகளை வாரி வழங்கினாரா என்று கணக்கெடுப்பு நடத்தினால் 25 சதவிகித ஜாதகர்களுக்குத்தான் முழுமையான யோகத்தைக் கொடுத்தார். மீதி 25 சதவிகித ஜாதகர்களுக்கு பாதி யோகத்தைச் செய்தார். மற்ற 50 சதவிகித ஜாதகர்களுக்கு 11-ஆம் இடத்து குரு கெடுதலையே கொடுத்தார். எந்த யோகத்தையும் செய்யவில்லை.காரணம் என்னவென்று தெரியுமா? குரு 11-ல் நின்ற காலம் தனுசு ராசிக்கு ஏழரைச்சனி- யோகத்தைத் தட்டிப்பறித்துவிட்டார்.

பொதுவாக ஜாதகத்தில் சாதகமான யோகமான தசாபுக்தி நடந்தவர்களுக்கு மட்டுமே 11-ஆம் இடத்துகுருவால் யோகமும் முன்னேற்றமும் நடந்தது எனலாம். மற்றவர்களுக்கெல்லாம் சர்வ சாதாரணமான பலன்களாகத்தான் நடந்தது.தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்த சிலரை அரசியல் அல்லது பொதுப்பணி அல்லது சங்க நடவடிக்கைகள் அல்லது கோவில் திருப்பணி போன்ற பொதுக்காரியங்களில் இறங்கச் செய்து முக்கியமான செயல்களில் இழுத்துவிட்டு பொறுப்பான பதவிகளையும் கொடுத்து பெருமை தேடித் தந்தது. அப்படிப் பொறுப்பில் வைத்த நிலையில் யார் பெரியவர் என்ற "ஈகோ' பிரச்சினையையும் உருவாக்கி நீயா? நானா? பார்த்துவிடுவோம் என்று சண்டைபோட வைத்தது. நடுநிலை வகித்த உங்களை இரண்டு பார்ட்டியும் குற்றவாளி என முத்திரை குத்தி நடுரோட்டில் திரிசங்கு சொர்க்கம் போல விட்டுவிட்டது. 11-ல் குரு இருந்த காலம் 3-ஆம் இடம், 5-ஆமிடம், 7-ஆம் இடங்களைப் பார்த்தார். சகோதர- சகோதரிகள் வகையில் நன்மையும் அனுகூலமும் நடந்தது எனலாம். தைரியமாக சில முடிவுகளை எடுத்தீர்கள். பிள்ளைகளுக்கு நற்காரியங்கள் எல்லாம் நடந்தேறியது எனலாம். திருமண முயற்சிகளும் கைகூடியது. எனினும் ஏழரைச்சனி நடந்து கொண்டிருப்பதால் இவை எல்லாம் மந்தமாகவே செயல்பட்டன.

இப்போது உங்கள் ராசிக்கு 12-ல் நிற்கும் குரு 5-ஆம் பார்வையாக 4-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 6-ஆம் இடத்தையும், 9-ஆம் பார்வையாக 8-ஆமிடத்தையும் பார்க்கிறார். 4-ஆம் இடம், பூமி, வீடு, மனை, வாகனம், சுகம், கல்வி முதலியவற்றைக் குறிக்கும். குரு அதற்கு திரிகோணம் பெறுவதால் மேற்கண்ட பூமி, வீடு, வாகன சம்பந்தமான சுபச்செலவுகள் ஏற்படலாம். தேக சௌக்கியத்தில் இருந்துவந்த நோய்- எந்த வைத்தியராலும் கண்டுபிடிக்க முடியாதபடி வாட்டி வதைத்த நோய் விலகி சௌக்கியத்தில் தெளிவு ஏற்படும். மேற்படிப்பு சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். படிப்பில் நிலவிய தடை விலகி பூர்த்தியடையும். தாய் வகையிலும் ஆரோக்கியம் முன்னேற்றம் உண்டாகும். தாய்ப்பாசம் விலை மதிப்பற்ற பாசம் என்பதை உணரும் காலம். இரும்பு, யந்திரம், மிஷினரி சம்பந்தமான தொழில் திட்டங்கள் கைகூடும்.குரு 12-ல் இருப்பதால் விரயச்செலவுகள் தவிர்க்க முடியாதவையாகத்தான் அமையும். அப்படிப்பட்டவர்கள் அந்த விரயச்செலவை சுபவிரயச் செலவாக மாற்றியமைக்கும் வழிமுறைகளையும் கையாளலாம். செலவு வந்தால் வரவும் வரும். இறைக்கின்ற கிணறுதானே ஊறும். அந்த செலவு நல்ல வகைக்கான செலவாக அமையவேண்டும். சிலர் பங்கு பாகப்பிரிவினையின் பிரச்சினைகளால் புதிய வீடு கட்டலாம். அல்லது கட்டிய பழைய வீட்டை வாங்கி சீர்திருத்தம் செய்யலாம். அவ்வாறு செயல்படும்போது அந்த வீட்டிற்குத் தேவையான பணத்தை கடனாக வங்கி மூலமாகவோ அல்லது தனியார் கடனாகவோ செயல்பட்டு நிறைவேற்றலாம்.

சிலர் புதிய வாகனம் வாங்கலாம். அதற்குண்டான பைனான்ஸும் கிடைக்கலாம். போட்டி, பொறாமை அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லைகள் தொடரும். நண்பர்கள் வகையில் மனவருத்தமும் பகையையும் சந்திக்க நேரும். 6-ஆமிடத்துக் கெடுதல்கள் இயற்கையாக வருவது ஒருவிதம். தானாகத் தேடிக்கொள்வது ஒருவிதம். கல்யாணம் காட்சி, வீட்டுச்செலவு, ஆடம்பர அத்தியாவசியப் பொருட்சேர்க்கை, வண்டி வாகனம், நிலம் இவற்றுக்காகக் கடன் வாங்குவது இயற்கையான செலவு. அடுத்தவருக்காக ஜாமீன் பொறுப்பேற்று அவர் பட்ட கடனை நீங்கள் அடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், அதற்காக நீங்கள் கடன் வாங்கினாலும் அது தானாகத் தேடிக்கொள்வது. இதேமாதிரி 8-ஆம் இடத்தையும் குரு பார்க்கிறார். அது விபத்து, மரணம், கேவலம், அவமானம் இவற்றைக் குறிக்கும் ஸ்தானம். இதிலும் இயற்கையாக வருவதும்; தானே தேடிக்கொள்வதும் என்று இரண்டு விதம் உண்டு. பஸ்ஸில் பயணம் செய்யும்போது ஏற்படும் விபத்து இயற்கையாக நடப்பது.

இரண்டுபேர் சண்டை போட்டுக்கொள்ள அவர்களை விலக்கிவிடப் போன மூன்றாவது நபருக்குக் கத்திக்குத்து காயம்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது தானாகத் தேடிக்கொள்வது.தனுசு ராசிக்கு 12-ல் வந்துள்ள குரு விரயச் செலவுகளை உண்டாக்கினாலும் அவை சுபவிரயமாக அமையும். குருப்பெயர்ச்சி உங்கள் எண்ணங்களைப் பொருத்து நல்லது- கெட்டது செய்யும். அது பூர்வ புண்ணியம். மனம்போல் வாழ்வு என்பதன் ரகசியமும் அதுதான்! நல்லது செய்தால் நல்லதே நடக்கும் என்பதன் தத்துவமும் அதுதான்!வாரியார் சுவாமிகள் சொன்னது- வருவதுதானே வரும்- வருவது தானே வரும். அதனால் போகும் காலம் கதவை அடைக்க வேண்டாம். ஆகும் காலம் மெய்வருந்த வேண்டாம். நல்லது நடக்க வேண்டும் என்று இருந்தால் கஷ்டப்படவேண்டாம். யார் தடுத்தாலும் நிற்காது. நல்லது நம்மை வந்தடையும்.

4-10-2018 முதல் 21-10-2018 வரை விசாக நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

விசாகம் குருவின் நட்சத்திரம். குரு உங்கள் ராசிநாதன். அவர் 1, 4-க்குடையவர். தனது சொந்த நட்சத்திரத்தில் சுயசாரம் பெறுகிறார். எனவே எல்லா வகையிலும் உங்களுக்கு நல்லதாகவே நடக்கும். ராசிநாதன் குரு தன் ராசிக்கு 12-ல் மறைவதால் சில சமயங்களில் தடைகளையும் குறுக்கீடுகளையும் சந்திக்கும் நிலையும் இருக்கும். அது வேகத்தடை போல. அப்படி இருப்பதும் நல்லதுதானே. அதிவேகம் ஆபத்து- மிதவேகம் மேன்மை. உங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு செயல்படலாம் அல்லவா. வேலையில் மதிப்பும் மரியாதையும் கூடும். சிலருக்கு வெறும் பதவி உயர்வுதான் கிடைக்கும். சம்பள உயர்வு இருக்காது. அதற்காக வருத்தப்படாமல் கடமையைச் செய்தால் அதற்குரிய பலாபலன் பின்னால் கிடைப்பது உறுதி. ராஜபாளையம் சாலையில் வாசுதேவநல்லூர் அருகில் தாருகாபுரம் என்ற ஊரில் மத்தியஸ்தநாதர் கோவில் உண்டு. அங்கு நவகிரக தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. வியாழக்கிழமை சென்று வழிபடலாம். அம்பாள் அகிலாண்டேஸ்வரி. தற்போது திருப்பணி வேலை நடக்கிறது. டிரஸ்டி ரமேஷ், செல்: 9976649098, அர்ச்சர்: குப்புசாமி, சீனிவாசன். ஒருகாலத்தில் சேரனுக்கும் பாண்டியனுக்கும் நடந்த விவகாரத்தில் சுவாமியே வந்து மத்தியஸ்தம் செய்ததாக ஸ்தல வரலாறு. இப்போதும் வழக்கு வியாஜ்ஜியங்களில் இருப்பவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அதேபோல காஞ்சிபுரத்திலும் வழக்கறுத்த ஈஸ்வரர்கோவில் இருக்கிறது. முன்னொரு சமயம் ஜெயலலிதா சிறைக்குப் போனபோது அவர் சார்பாக இங்கு சிறப்புப் பூஜைகள் செய்து விடுதலை ஆனதாக சொல்வார்கள்.

21-10-2018 முதல் 20-12-2018 வரை அனுஷ நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 2, 3-க்குடைய சனிபகவான் உங்கள் ராசியிலேயே ஜென்மச் சனியாக விளங்குகிறார். சனி நிற்பதும் குரு வீடு. எனவே கொள்கை வேறுபட்ட கட்சிகள் தேர்தலில் தற்காலிக கூட்டணி சேர்ந்த மாதிரி, ஒரு சட்டசபைத் தேர்தலில் ஆளுங்கட்சியோடு ஒரு நடிகர் கூட்டணி வைத்து மெஜாரிட்டி சீட் வாங்கினார். பிறகு ஆளும் கட்சிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு உண்டாகி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றார். ஆக தெற்கே வீசுகிற காற்று வடக்கேயும் மாறி வீசும். அரசியலில் நிரந்தர பகையும் இல்லை... நிரந்தர நட்பும் இல்லை. அதேபோல வாழ்க்கையிலும் நிலையான உறவுமில்லை -பகையுமில்லை. இன்றைய உலகத்தில் கொடுத்தால் -கொடுத்துக்கொண்டே இருந்தால் நல்லவர்கள். கொடுத்ததை நிறுத்தினாலும் கொடுக்காவிட்டாலும் கெட்டவர்கள். திருக்கொள்ளிக்காடு சென்று கலப்பை ஏந்திய சனீஸ்வர் பகவானை வழிபடவும்.

20-12-2018 முதல் 13-3-2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குருசஞ்சாரம்

தனுசு ராசிக்கு 7, 10-க்குடையவர் புதன். அவருடைய நட்சத்திரம் கேட்டை. அதில் சஞ்சரிக்கும் குரு திருமணத் தடைகளை விலக்கி நல்ல மணவாழ்க்கையைத் தருவார். மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். அதேபோல வேலையில்லாத பட்டதாரிகளுக்கு நல்ல வேலை அமையும். தொழில் இல்லாத நல்லோருக்கு நல்ல தொழில் அமையும். கூட்டுக்குடும்பத்தில் பெற்றவர்களுக்காகவும் பிறந்தவர்களுக்காகவும் பாடுபட்டு மாடாய் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்தவர்களுக்கு இனி மறுமலர்ச்சியும் புது வாழ்வும் பிறக்கும். உங்களுக்கு ஓய்வு கொடுத்து எல்லா பொறுப்புகளையும் மற்றவர்கள் ஏற்றுக்கொண்டு உங்கள் சுமையைக் குறைக்கலாம். கும்பகோணம் வழி எண்கண் ஸ்ரீஆதிநாராயணப் பெருமாளை வழிபடவும்.

மூல நட்சத்திரக்காரர்களுக்கு

இந்த குருபெயர்ச்சி வாழ்க்கையில் வசந்தம் தவழச் செய்யும். பிறந்த ஊரில் சொந்த வீடு இருந்தும் பிழைப்புக்காக வெளியூரில் வாடகை வீட்டில் இருப்போரும் தான் வாழும் ஊரிலும் சொந்த வீடு வாங்கும் யோகமுண்டாகும். தன் சேமிப்பு அல்லது மனைவியின் நகைகள் அல்லது இன்சூரன்ஸ் கடன் அல்லது வங்கிக் கடன் என்று அதற்கான முதலீடு கிடைக்கும். ஒருசிலருக்கு பெற்றோரின் உதவியும் அமையும். சிலர் பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்கலாம். தேக ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். நல்லமனைவி -நல்ல மக்கள் -நல்ல உடன்பிறப்பு -நல்ல பெற்றோர் -நல்ல வேலை -நல்ல சம்பாத்தியம் என்று எல்லாம் நல்லதாகவே அமையும். திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டியில் ஜோதி மௌன குரு ஜீவசமாதி சென்று வழிபடவும். (மூலம் நட்சத்திரத்தன்று குருபூஜை)

பூராட நட்சத்திரக்காரர்களுக்கு

பூராடம் சுக்கிரனின் நட்சத்திரம். சுக்கிரன் குருவின் வீடான மீனத்தில்தான் உச்சம். நட்சத்திர நாதன் ஆன சுக்கிரனின் உச்சராசிநாதன் குரு. எனவே குருபெயர்ச்சி உங்களுக்கு முழுமையான யோகத்தைச் செய்யும். கடந்த சில மாதம் எந்த டாக்டராலும் கண்டுபிடிக்க முடியாத- குணப்படுத்த முடியாத- எல்லா நோயும் இந்த குருபெயர்ச்சி பலனாக முழுகுணமாகும். பார்க்காத வைத்தியமில்லை -போகாத கோவில் இல்லை- செய்யாத பரிகாரம் இல்லை. எல்லாவற்றுக்கும் இனிமேல்தான் கைமேல் பலன் கிடைக்கும். வீடு, வாசல் சேமிப்பும் உண்டாகும். திருத்தணி பாதையில் ஆற்காடுகுப்பம் சென்று அனுமந்தசாமி ஜெய்ராம்சாமி ஜீவசமாதியை வழிபடவும்.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு

தனுசு ராசிக்கு 9-க்குடையவர் சூரியன். அவரது நட்சத்திரம் உத்திராடம். அதில் ராசிநாதன் சஞ்சரிப்பது சிறப்பு. தகப்பனார் வழியில் சொத்து சுகங்கள் வந்துசேரும். அதைப் பராமரித்துச் சொந்தக் குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். ஒருசிலருக்கு உடன்பிறந்தவர்களின் போட்டியும் பொறாமையும் இடையூறுகளும் ஏற்படலாம். அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். யானைமேல் அம்பாரி செல்பவனை நோக்கி தரையில் நடக்கும் சிறுவன் கல்லை எறிந்த கதைதான். உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்று இருப்பதை வேறு யாரும் கெடுக்க முடியாது- தடுக்க முடியாது. ஒருவன் சாப்பிடுகிற ஒவ்வொரு அரிசியிலும் அல்லா அவன் பெயரை எழுதி வைத்திருப்பதாக குர்ரானில் ஒரு வாசகம் உண்டு. பேரளம் அருகில் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை வழிபடவும். சூரியபகவானுக்கு பதவி கிடைத்த தலம்.

மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)


கர ராசி அன்பர்களே!

இதுவரை மகர ராசிக்கு 10-ல் இருந்த குரு இப்போது 11-ஆம் இடத்துக்கு மாறுகிறார். ஏற்கெனவே இருந்த 10-ஆம் இடத்தைவிட 11-ஆம் இடம் மிக யோகமான இடம்தான்.11-ஆமிடம் லாப ஸ்தானம், ஜெய ஸ்தானம். மகர ராசிக்கு 3, 12-க்குடைய குரு 10-ல் இருந்த காலம் ஏழரைச்சனியும் ஆரம்பித்து. ஏழரைச்சனியில் விரயச்சனி நடந்து கொண்டிருக்கிறது. (கடந்த டிசம்பரில் இருந்து). எவ்வளவு சின்ஸியராக நீங்கள் பணியாற்றிய போதும், உழைப்பது நீங்கள், பேர் வாங்குவது வேறு ஒருவர் என்ற மாதிரி முதலாளியிடம் ஜால்ரா தட்டி உங்களைத் திரைமறைவில் மறையச் செய்துவிட்டார். "ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்ற ரீதியாக நீங்களும் மௌனமாக இருந்துவிட்டீர்கள். 10-ல் இருந்த குரு 2-ஆமிடம், 4-ஆம் இடம், 6-ஆம் இடம் ஆகியவற்றைப் பார்த்தார். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியானது. குடும்பத்தில் சில இடமாற்றங்கள் ஏற்பட்டாலும் அவை நல்ல மாற்றங்களாகவும் அமைந்தன. சிலர்ப் பணிமாற்றம் அல்லது ஊர் மாற்றம் போன்ற அலைக்கழிப்பையும் சந்தித்தனர். தாய் சுகம், தன் சுகம் தெளிவாக இருந்தாலும் செலவுகளுக்கும் பஞ்சமில்லாமல் காலம் ஓடியது. வாகன வகையில் அடிக்கடி செலவு, பூமி, வீடு சம்பந்தமான முயற்சிகளில் தேவையற்ற வீண் விரயங்களை சந்தித்த காலம் சிலரது அனுபவம். இன்னும் சிலர் பழைய வீட்டைப் புதுப்பிக்க வங்கிக்கடனை நாடி அலைந்தனர். மாணவர்கள் படிப்பிற்காக லோன் வாங்கி படித்தும் வருகின்றனர். தொழில்துறையில் போட்டி, பொறாமைகளும் உண்டானது. பணிபுரியுமிடத்தில் சக ஊழியர்களால் சங்கடங்களும், உங்களை மேலதிகாரிகளிடையே போட்டுக் கொடுத்து உங்களின் நன்மதிப்பை வேண்டுமென்றே இறக்க வைத்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.

சிலருக்கு 10-ஆமிடத்து குரு பதவியை குலையச் செய்யும் என்ற பழமொழிக்கேற்ப வேலையையும் இழக்கச் செய்தது. உறவினர்களால் ஆதரவு கிடைத்தது மனதுக்கு சற்று ஆறுதலாக அமைந்தது.இப்போது குரு 11-ல் அமர்ந்து 3-ஆமிடம், 5-ஆமிடம், 7-ஆமிடங்களை 5, 7, 9-ஆம் பார்வையாக பார்க்கிறார். 3-ஆமிடம் சகோதர சகாய ஸ்தானம், தைரிய ஸ்தானம். அந்த இடத்துக்குரிய ராசிநாதனே குரு. அவர் பார்ப்பதால் சகோதர- சகோதரி வகையில் சகாயமும் நன்மையும் உண்டாகும். ஐந்து வயது வரை அண்ணன்- தம்பி அதற்குமேல் பங்காளி என்ற பழமொழி பொய்த்துவிடும். "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என்ற பழமொழி இனிமேல்தான் நிஜமாகிவிடும். புது எதிரியை அல்லது பொது எதிரியைப் போராடி ஜெயிக்க சகோதரர்களின் ஆதரவும் அனுகூலமும் அமையும். தைரியமும் பிறக்கும். எல்லாருக்கும் தைரியம் உண்டு. ஆனால் அது அவரவர் செயல்படும் விதம்தான் சிலருக்கு வித்தியாசமாக இருக்கும். அநியாயத்தைக் கண்டு விலகிப்போனால் உடனே அவர்கள் கோழை என்று அர்த்தமல்ல. வம்பு எதற்கு என்று அமைதியாய் விட்டுவிடுபவர்களும் உண்டு. பொங்கி எழுபவர்களும் உண்டு. அப்படி அமைதியாய் இருந்தவர்களையும் 3-ஆமிடத்தை பார்க்கும் குரு நியாயத்திற்காக பொங்கி எழச் செய்வார். இது கலியுகம். இந்தக் காலத்தில் ஒன்று பணபலம் இருக்க வேண்டும். அல்லது படைபலம் இருக்க வேண்டும்.

கஞ்சி ஊற்ற ஆள் இல்லாவிட்டாலும் கச்சை கட்ட ஆளிருந்தால் போதும்- எதிரியோடு மோதி ஜெயிக்கலாம். 3-ஆமிடத்து குரு தன் ஸ்தானத்துக்கு 9-ல் இருப்பதால் ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால்தான் குரு பார்த்தாலும் பலன் இல்லாதபடி உடன்பிறந்தவர்களினாலேயே தொல்லைகளும் உருவாகலாம். பிரச்சினைகளும் செலவுகளும் ஏற்படலாம். சகோதர வர்க்கம் எதிரி வர்க்கமாக மாறலாம். அல்லது சகோதர வகையால் சஞ்சலமும் அவமானமும் அடையலாம். அடுத்து 5-ஆம் இடத்தையும், 7-ஆம் இடத்தையும் குரு பார்க்கிறார். நீண்ட காலமாகப் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு இனி புத்திர யோகம் உண்டாகும். பெண் குழந்தைகளையே வரிசையாகப் பெற்றெடுத்தவர்களுக்கும் இனி வம்சத்தின் பேர் சொல்ல ஆண் வாரிசும் கிடைக்கும். ஆண் குழந்தை மட்டுமே இருப்பவர்களுக்கு ஆசைக்கு ஒரு பெண் குழந்தையும் கிடைக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மனநிறைவாகச் செய்து முடிக்கலாம்.

பிள்ளைகளின் படிப்பு அல்லது திருமணம் அல்லது வெளிநாட்டு வேலை போன்ற முயற்சிகளுக்காக கடன் வாங்கி செலவு செய்யலாம். விரயத்தில் வீண் விரயம், சுபவிரயம் என்று இரண்டு உண்டு. நற்காரியங்களுக்காக செலவு செய்தால் அது சுபவிரயம். அநாவசியமாக செலவு செய்தால் அது வீண்விரயம் அல்லது ஒரு செயலை முடிக்க ஒருமுறைக்கு இருமுறை செலவு செய்தால் அது வீண்விரயம்.கடந்த காலத்தில் புத்திர ஸ்தானத்துக்கு 6-ல் குரு மறைந்திருந்த சமயம் யாருக்கும் தெரியாமல் ரகசியக் கல்யாணம் செய்து வீட்டைவிட்டு வெளியேறிய மகளையோ, மகனையோ உறவு வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தவர்கள் இந்த குருப்பெயர்ச்சிக்குப் பிறகு மனம் மாறி மகன் அல்லது மகளையும் அவர்களுக்குப் பிறந்த பேரன், பேத்திகளையும் விரும்பி ஏற்றுக்கொள்ளலாம். 7-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் இதுவரை தடைப்பட்டு வந்த திருமண முயற்சிகள் கைகூடும். மணமானவர்களுக்கு மனைவியால் யோகமும், வருமானமும் வரும். ஏற்கெனவே மனைவி கொண்டுவந்த சீர், சீதனம், நகைகளை எல்லாம் விற்றுச் செலவு செய்தவர்கள்- இனிமேல் இழந்த பொருட்களை அதிர்ஷ்டவசமாகத் திரும்பப் பெற்று மனைவியையும் மாமனார் வீட்டாரையும் மகிழ்ச்சிப்படுத்தலாம்.

இதுவரை மனைவியின் ஆரோக்கியத்துக்காக ஆயிரக்கணக்கில் வைத்தியச்செலவு செய்து, வெந்து வேதனைப்பட்டு நொந்து போனவர்களுக்கு மாபெரும் ஆறுதலாக மனைவிக்குப் பூரண ஆரோக்கியமும் சுகமும் உண்டாகும். அது வைத்தியச் சிகிச்சையாலா அல்லது கெட்ட நேரம் மாறி நல்ல நேரம் பிறந்துவிட்டது என்பதாலா அல்லது நீங்கள் கோவில் கோவிலாகப் படையெடுத்துச் சென்று கும்பிட்டதன் பலனா அல்லது பெரியோர்களின் குருவருளாலா என்பது புரியாத புதிராக இருந்தாலும் நல்லது நடந்தால் சரி என்று உள்ளம் திருப்தியடையும்.11-ஆம் இடம் உபயகளஸ்திர ஸ்தானத்தையும் குறிக்கும். எனவே பிறந்த ஜாதகத்தில் இருதார யோகம் அமைந்திருந்தால் அவர்களுக்கு மறுதார யோகமும் ஏற்படும்.நாட்டில் இன்று ரொம்பப் பேருக்கு மனைவி இருக்கும்போது இன்னொரு பெண்மீது சபலம் வருகிறது. சிலர் வெளியுலக மரியாதைக்குப் பயந்து ஒதுங்கிவிடுவார்கள். சிலர் பகிரங்கமாகவே தவறு செய்வார்கள். கண்ணகியை மறந்து மாதவியின் பின் சென்ற கோவலனும், மண்டோதரி இருக்கும்போதே சீதையைச் சிறையெடுத்த இராவணனும் முடிவில் என்ன ஆனார்கள் என்று சொல்லும் சிலப்பதிகாரமும் இராமாயணமும் ரசனைக்காக எழுதப்படவில்லை. மக்கள் அவர்களைப் பின்பற்றி நடக்கக்கூடாது என்று அறிவுறுத்தவே படைக்கப்பட்டது. குருப்பெயர்ச்சிப் பலனை எழுதச்சொன்னால் நீதி உபதேசம் எழுதுவதாக நினைக்க வேண்டாம். விட்டகுறை தொட்டகுறையாக விதி உங்களைத் தவறான வழிக்கு அழைத்துச் சென்றால் அதைத் தவிர்த்து சரியான வழிக்கு உங்களை அழைத்துச்செல்வதுதான் ஜோதிடம். அதுமட்டுமல்ல; உங்களுடைய வெற்றிகரமான வாழ்க்கையின் வழிகாட்டி.

4-10-2018 முதல் 21-10-2018 வரை விசாகம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

விசாகம் குழுவின் நட்சத்திரம். குரு உங்கள் ராசிக்கு விரயாதிபதி. இப்போது 11-ல் இருக்கிறார். 3-ஆம் இடம், 5-ஆம் இடம், 6-ஆம் இடங்களைப் பார்க்கிறார். எனவே உடன்பிறந்தவர்கள் வகையிலோ அல்லது பெற்ற பிள்ளைகள் வகையிலோ உங்களுக்கு தவிர்க்க முடியாத விரயச்செலவுகள் உண்டாகும். அவர்களுக்காக நீங்கள் கடன் வாங்கும் கட்டாயமும் உண்டாகும். சிலர் கூடப் பிறந்தவர்கள் - பெற்றவர்கள் பட்ட கடனை நீங்கள் அடைக்கும்படியான சூழ்நிலைக்கு ஆளாகலாம். இதுதான் 3, 5-ஆம் இடத்துக்கும் 6-ஆம் இடத்துக்குமான தொடர்பு. இப்படி பொருளாதார ரீதியாக பிரச்சினை எதுவும் இல்லாதவர்களுக்கு உடன்பிறந்தோர் அல்லது பிள்ளைகள் வகையில் பொல்லாப்பு, பகை, மனவருத்தங்களைச் சந்திக்கக் கூடும். பள்ளத்தூரில் அருள்நந்தி ஆஸ்ரமம் எனது குருநாதர் கட்டிக்காத்து வந்த திருத்தலம். அவர் வாழ்ந்த காலத்தில் விளக்குப் பூஜை-குருபூஜை- நித்தியப்படி சிவபூஜை-சிவராத்திரி பூஜை என்று விழாக்கோலமாக இருந்தது. அவருக்குப்பின் அவர் மூத்த மகன் அங்கேயே இருந்து பராமரித்து இரட்டை விநாயகருக்கு அபிஷேகம், பூஜையெல்லாம் நடந்தது. அவரும் காலமானபிறகு இப்போது பராமரிக்க ஆள் இல்லை. சொத்து பங்குப்பாகத்துக்கு கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. கலைஞருக்குப் பிறகு கட்சியைக் கட்டிக்காக்க பிள்ளைகளுக்குள் போராட்டம் நடக்கிறது. எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அ.தி.மு.க.-ஜெயலலிதா இருந்தவரை கட்டுக்கோப்பாக இருந்தது. அதன்பிறகு எடுப்பார் கைப்பிள்ளை-தடியெடுத்தார் எல்லாம் தண்டல்காரர் என்றநிலை. இதைத்தான் உடையவர் இல்லையென்றால் ஒருமுழம் கட்டை என்பார்கள்! மாயவரம் அருகில் வள்ளலார் கோவில் என்ற ஊரில் உள்ள சிவாலயத்தில் மேதா தட்சிணாமூர்த்தி சன்னதி சென்று வழிபடவும், தட்சிணாமூர்த்தி நந்திவாகனத்தில் இருப்பார்.

21-10-2018 முதல் 20-12-2018 வரை அனுஷ நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

அனுஷம் சனியின் நட்சத்திரம். சனி உங்கள் ராசி நாதன். அவர் குரு ராசியில் (தனுசு) இருக்கிறார். குரு அவருக்கு 12-லும் ராசிக்கு 11-லும் இருக்கிறார். இக்காலம் உங்களுக்கு லாப விரயமாகவும் அமையும். பழைய சொத்துகளை லாபத்துக்கு விற்று புதிய இடத்தில் பரிவர்த்தனை முதலீடு பண்ணலாம். சிலர் எப்போதோ வாங்கிப்போட்ட காலியிடம் இப்போது ""மெயின் இடமான தால்'' திருமண மண்டபம் கட்டலாம். அல்லது காம்ப்ளக்ஸ் கட்டி கடை களுக்கு வாடகைக்கு விடலாம். இதற்கெல்லாம் முதலீடு செய்ய உங்களுக்கு வேண்டிய வங்கி நிர்வாகம் முன்வரலாம். அதேபோல நகராட்சி - பஞ்சாயத்துகளில் பிளான் அப்ரூவல் செய்ய முக்கியமானவர்களும் வந்து சேரலாம். கொடுக்க வேண்டியதை கொடுத்து (விரயம்) முடிக்கவேண்டியதை முடிக்கலாம். பரமக்குடி வழி நயினார்கோவில் சென்று நாகநாதசுவாமியை வழிபடலாம். அங்கு சனிபகவானுக்கு தனி சன்னதி இருக்கிறது.

20-12-2018 முதல் 13-2-2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

மகர ராசிக்கு 6, 9-க்குடைய புதன் சாரத்தில் (கேட்டையில்) 3, 12-க்குடைய குரு சஞ்சாரம். 12-க்குடையவர் 6-க்குடைய சாரம் பெறுவது நன்மை. எனவே கடன்- நிவர்த்தி-நோய் நிவர்த்தி -சத்ரு ஜெயம் ஆகிய பலன்கள் நடக்கும். ஒரு கடன் வாங்கி இன்னொரு கடனை அடைத்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். ஆகாத போகாத சில சொத்துகளை விற்று கடனை அடைக்கலாம். அத்துடன் ஏற்கெனவே அதிகமாக வட்டிசெலுத்தியதால் வட்டியில் தள்ளுபடி செய்து பேரம் பேசலாம். ஒரு அன்பர் தன் நண்பர் மூலமாக கடன் வாங்கியிருந்தார். அவரிடம் பாக்கிக்கடனை கொடுத்து அடைக்கச் சொன்னார். நண்பர் அதை அடைக்காமல் தன் சொந்தச்செலவு செய்துவிட பஞ்சாயத்து ஆகிவிட்டது. நண்பர் பாதிப்பணமும் அன்பர் பாதிப் பணமும் கொடுத்து கடன் அடைபட்டது. நண்பர் மெதுவாக மீதியைத் தருவதாக ஒப்புக் கொண்டார். தஞ்சாவூர் - கும்பகோணம் பாதையில் பசுபதிகோயில் என்ற ஊரில் உள்ள வரதராஜப் பெருமாளை வழிபடவும்.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு

இந்த குருபெயர்ச்சி 8-க்குடைய சூரியன் சாரம் பெற்றதால் சில சோதனைகளையும் வேதனைகளையும் தரலாம். அதேசமயம் மகர ராசிக்கு 11-ல் குரு இருப்பதால் சிலசமயம் சாதனைகளையும் படைக்கலாம். எந்த வெற்றியும் எளிதாக அடையாது. கஷ்டபட்டால்தான் முன்னேற முடியும். சனி ராசிநாதன் என்பதால் உங்கள் செல்வாக்கு குறையாது. மதிப்பு, மரியாதை, கௌரவம் பாதிக்காது. ஒரு பொருளை தொலைத்தவன் அது தன்னுடையது என்று நிரூபித்தால்தானே அதை திரும்பப்பெற முடியும். கோர்ட்டில் நிரபராதி என்பதற்கும் சாட்சி வேண்டியுள்ளதே. (குற்றவாளி என்று எளிதாக கூறிவிடலாம்)

திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு

இந்த குருபெயர்ச்சி பெரும்பாலும் நன்மையாகவே அமையும். திருவோணம் சந்திரனின் நட்சத்திரம் அவர் மகர ராசிக்கு 7-க்குடையவர். குருவும் சந்திரனும் சேர்ந்தாலும் பார்த்தாலும் குருச்சந்திரயோகமும்- கேந்திரமாக இருப்பதால் கஜகேசரியோகமும் உண்டாகும். மேலும் சந்திரனின் வீடு கடக ராசியில் தான் குரு உச்சம். அத்துடன் அந்த கடகத்தையும் குரு விருச்சிகத்திலிருந்து பார்க்கிறார். மிக உற்சாகமாக செயல்படுவீர்கள். மனோதைரியம் உண்டாகும். பொன், பொருள்சேரும். புதிய வீட்டில் பால் காய்ச்சி கிரகப்பிரவேசம் செய்யலாம். சென்னை அடையாறு பெசன்ட் நகரில் அஷ்டலட்சுமியை வழிபடலாம்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு

அவிட்டம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் உங்கள் ராசியில்தான் (மகரத்தில்) உச்சம் அடைவார். ராசிக்கு 4, 11-க்குடையவர். பாதியில் நின்ற கட்டிட பணிகளை மீண்டும் தொடர்ந்து முடிக்கலாம். பெண்பிள்ளைகள் அல்லது மருமகள் பிரசவ ஏற்பாடுகளினால் சுபமங்கள விஷயம் உண்டாகும். பெண்கள் விரும்பிய ஆடம்பர பொருட்கள், ஆடை, அணிகலன்களை வாங்கலாம். அரசியல் அல்லது கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அனுகூல பலனும் ஆதாயமும் உண்டாகும். தேக சௌக்கியம் தெளிவாகும். வரவேண்டிய பாக்கிசாக்கி வசூலாகலாம். பங்கு வர்த்தகத்தொழில் லாபகரமாக அமையும். போட்டி பொறாமை, கண்திருஷ்டி தோஷம் எல்லாம் விலகும். கும்பகோணம் அருகில் பட்டீசுவரம் சென்று துர்க்கையம்மனை வழிபடலாம்.

கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)


கும்ப ராசி அன்பர்களே!

இதுவரை கும்ப ராசிக்கு 9-ஆம் இடத்தில் இருந்த குரு இப்போது 10-ஆம் இடத்துக்கு மாறியிருக்கிறார். ஏற்கெனவே குரு இருந்த 9-ஆம் இடத்தைவிட 10-ஆம் இடம் யோகமான இடம் என்று சொல்லமுடியாது. ""ஈசனார் தலை ஓட்டிலே இரந்துண்டது பத்தில் குரு வந்தபோது'' என்பது பாடல். 10-ஆம் இடத்து குரு பதவியை குலையச் செய்யும் என்பது பழமொழி. அதனால் கும்ப ராசிக்காரர்களுக்குத் தொழிலைக் கெடுக்குமோ, பதியை குலையச் செய்யுமோ, பிச்சை எடுக்க வைக்குமோ என்றெல்லாம் எண்ணி கவலைப்பட வேண்டாம். ஏற்கெனவே குரு இருந்த இடம் 9-ஆம் இடம் யோகமான இடமாக இருந்தும், தொழில் ஸ்தானமாகிய 10-ஆம் இடத்திற்கு 12-ஆகவும், சுகஸ்தானமான 4-ஆம் இடத்திற்கு 6-ஆகவும், தனஸ்தானமான 2-ஆம் இடத்திற்கு 8-ஆகவும் அமர்ந்த காரணத்தினால் 9-ஆமிடத்து குரு செய்ய வேண்டிய எந்த ஒரு நன்மையையும் கடந்த காலத்தில் 9-ல் இருந்த குரு முழுமையாக செய்யவில்லை.யாரோ ஒருசிலருக்கு பாக்யமும் சுகமும் கல்வி யோகமும் தன சம்பாத்தியமும் கிடைத்திருக்கலாம்.

சிலர் ஒரு இடத்தில் பார்த்து வந்த வேலையில் இருந்து விலகி வேறு வேலைக்குச் சென்றதோடு மட்டுமில்லாமல் பகுதி நேர வேலையிலும் சேர்ந்து சம்பாதித்தனர். ஆனால் பெரும்பான்மையானவர்களுக்கு பணக்கஷ்டமும். மனக்கஷ்டமும், தொழிலில் துறையில் தொய்வும், சௌக்கியக் குறைவும் வைத்தியச் செலவும் ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை! ஒருசிலருக்கு பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் நிவர்த்தியாகி வழக்குகளில் வெற்றி கிடைத்து "பொசிஷன்' கைக்கு வந்தது ஒரு யோகம்தான். என்றாலும் சொத்துகளை விற்று-"லாஸ்' ஆன கடன்களை அடைக்கலாம் என்ற ஆசை நிறைவேறாமல் நாளும் பொழுதும் காலமும் வீணாகவே ஓடிவிட்டது. இன்று அட்வான்ஸ் வாங்கிவிடலாம், நாளை வாங்கிவிடலாம் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமாகிவிட்டது!பெரும்பாலான கும்ப ராசிக்காரர் கடன், கோர்ட், கேஸ், ஜப்தி, வாரண்டு, பேங்க் கடனுக்கு நெருக்கடி இப்படிப் பல வகையிலும் தொந்தரவுதான் இருந்தது. கடனும் அடைக்கமுடியாமல் வட்டியும் கட்ட முடியாமல் கௌரவப் போராட்டமும் இருந்தது. கும்ப ராசிக்கு 2, 11-க்குடைய குரு விருச்சிகத்தில் 10-ல் அமர்ந்து 5-ஆம் பார்வையாக 2-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 4-ஆமிடத்தையும், 9-ஆம் பார்வையாக 6-ஆமிடத்தையும் பார்க்கிறார்.

2-ஆம் இடம் என்பது வாக்கு, தனம் குடும்பம் இவற்றைக் குறிக்கும்! குரு தனகாரகன், வாக்கு காரகன் என்பதால் குருபார்வையால் உங்கள் சொல்வாக்கு செல்வாக்கு பெறும். 2-க்குடையவர் 2-ஆம் இடத்தையே பார்ப்பதனால் தனவரவுக்குப் பஞ்சம் இருக்காது. சரளமான பணப்புழக்கம் இருக்கும். ஏற்கெனவே கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகப் பொருளாதார நெருக்கடியையும் பணப்பற்றாக்குறையையும் சந்தித்து அதை சமாளிக்க கந்துவட்டி என்றும் அதிக வட்டி என்றும் வாங்கி வாங்கி யானை வாயில் போன எறும்பு போல மீள முடியாமல் தவிக்கிறீர்கள். இந்த குருப்பெயர்ச்சி, முதலை உண்ட பாலகனை சுந்தரர் மீட்டுத் தந்தது போல உங்களை மீட்கும். ஜாதகக் கோளாறு காரணமாகப் பிரிவு பிளவை சந்தித்த கணவன், மனைவியும் இனி ஒன்றுசேர யோகம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை இருந்தும் அன்யோன்யம் இருந்தும் வேலை காரணமாக வெளிநாடு போனவர்கள் இனி சிறு மாற்றத்தைச் சந்திக்கக்கூடும். வெளிநாட்டிலேயே அந்த மாற்றம் ஏற்படலாம். அல்லது வெளிநாடு போதும் என்று முடிவு எடுத்து உள்ளூரில் வந்து சொந்த தொழில் தொடங்கி செட்டில் ஆகிவிடலாம். மேற்படிப்பு படிக்கத் தடைகளை சந்தித்த மாணவர்கள் இனிமேல் படிப்பைத் தொடரலாம். அல்லது விட்டுப்போன அரியர்ஸ் சப்ஜெக்டை மீண்டும் எழுதி பாஸ் பண்ணலாம்.

அடுத்து குரு 4-ஆம் இடத்தைப் பார்க்கிறார். அதன் பலன் சொந்த வீடு அல்லது பிளாட் அமையும் யோகமுண்டு. சிலருக்கு வாகன யோகங்களையும் கொடுக்கும். கடந்த காலத்தில் அடிக்கடி வீடு மாறியவர்கள் இனி அசையாமல் நிலையாகக் குடியமர ஒரு இடம் கிடைத்துவிடும். அது சொந்த வீடாகவும் இருக்கலாம். அல்லது ஒத்தி வீடாகவும் இருக்கலாம். ஒரு அன்பர் மாடியில் குடியிருந்தார். வீட்டு சொந்தக்காரர் கீழே குடியிருந்தார். வீட்டுக்காரர் வேறு புது பங்களா கட்டி குடிபோய்விட்டார். அப்போது மேலே மாடியில் குடியிருந்தவரை அதே வாடகையில் கீழ் வீட்டுக்குப் பாதுகாப்பாக மாறச் செய்து மாடிக்கு மட்டும் புதுக்குடியை வைத்துவிட்டார். இதை பதி (ஸ்தானம்) மாற்றம் என்று சொல்லலாம். லாபாதிபதியான குரு 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால் ஏற்கெனவே இருக்கும் வீடு, வாகனங்களை லாபத்தோடு விற்று புதிய வீடு, வாகனங்களை வாங்கும் திட்டம் நிறைவேறும். சிலர் தாய்க்காக வைத்தியச்செலவுகள் செய்ய நேரும்.

6-ஆமிடத்துக்கு குரு பார்வை கிடைப்பதால் மேற்கண்ட செலவுகளுக்காக கடன் வாங்கலாம். அனாவசியமாக ஆடம்பரத் தேவைக்காக வாங்கும் கடன் தேவையற்ற வீண்கடன் ஆகும். அத்தியாவசியத் தேவைக்காக வாங்குவது சுபக் கடன் ஆகும். தொழில் அபிவிருத்திக்கான திட்டங்களுக்காகவும் கடன் வாங்கலாம். பழைய கடன்கள் இருந்தாலும் புதிய கடனும் ஏற்படும். கடன் வாங்குவதற்கும் ஒரு வரைமுறை நியதி இருக்கிறது. கடன் கிடைக்கிறது என்பதற்காக எல்லாரிடமும் கடன் வாங்கிவிடக்கூடாது. தரமானவர்களிடம்தான் கடன் வாங்கவேண்டும், வரவு செலவு வைத்துக்கொள்ள வேண்டும். ஆத்திர அவசரத்துக்காக வெற்றுப் பேப்பரில் கையெழுத்துப் போடுவதோ தரங்கெட்டவர்களிடம் கடன் வாங்குவதோ மிகத் தவறு. சொந்த பந்தம், பங்காளி வர்க்கத்தில் போட்டி, பொறாமைகளும் உங்களைப் பற்றிப் புறம்பேசுகிறவர்களும் இருக்கலாம். அது லேசுபாசாக உங்கள் காதுக்கு எட்டலாம். ஆனால் அவை எதற்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. எதிர்ப்புகளும் எதிரிகளும், உங்களை எதுவும் செய்ய முடியாது, இயலாது. அவை எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு உங்கள் செயல்பாடுகளில் கவனம் வையுங்கள். அது உங்களை வழிநடத்தும்.

4-10-2018 முதல் 21-10-2018 வரை விசாக நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

விசாகம் குருவின் நட்சத்திரம். குரு கும்ப ராசிக்கு 2, 11-க்குடையவர். அத்துடன் கும்ப ராசிநாதன் சனி குருவின் வீட்டில் (தனுசு ராசியில்) இருக்கிறார். இது உங்களுக்கு ""பிளஸ் பாயிண்டுதான்''. உடல் நலத்தையும், மனநலத்தையும் தருவதோடு மகிழ்ச்சி, செல்வாக்கு, புகழ், கீர்த்தி ஆகியவற்றையும் தரும். குடும்பத்தில் உள்ள ஆண், பெண் மக்களுக்கு திருமணத் தடை விலகி மனம்போல மாங்கல்யம் நிறைவேறும். சொந்த பந்தம், உறவினர்கள் நெருக்கமாகி உற்சாகம் ஏற்படும். உல்லாச கேளிக்கை விருந்துகளும் செயல்படும். கைமாத்து கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். சரியான சமயத்தில் கிடைப்பதால் காரியங்கள் தடையின்றி நடைபெறும். பெண்களுக்குப் பிறந்த வீட்டிலிருந்து பெருமைப்படும்படி மகிழ்ச்சியான தகவல்கள் கிடைக்கும். திருச்சி- திருவெள்ளறை சென்று சிவப்பிரகாச சுவாமிகளின் ஜீவசமாதியை வழிபடவும். கார்த்திகை மாதம் கடைசி திங்கள்கிழமை வருட குரு பூஜை அன்ன விருந்து நடக்கும்.

21-10-2018 முதல் 20-12-2018 வரை அனுஷ நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

அனுஷம் சனியின் நட்சத்திரம். சனி உங்கள் ராசிநாதன். அதில் குரு சஞ்சரிப்பதால் தளர்வு இல்லாமல்- சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு சாதிக்க வேண்டியதை சாதிப்பீர்கள். முயற்சிகளில் வெற்றியும் முன்னேற்றமும் தெரியும். வேலை பார்ப்பவர்களில் உங்களின் விசுவாசத்துக்கும் உண்மைக்கும் மேலிடத்தாரின் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு இடமுண்டு. சிலருக்கு விரும்பிய இடப்பெயர்ச்சியுண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சீராக இருக்கும். பங்கு வர்த்தகத்தில் அதிர்ஷ்டக் காற்று வீசும். தனியார்துறையில் பணிபுரிகிறவர்களுக்கும் சந்தோஷமான செய்திகள். கிடைக்கும். ஒரு சிலருக்கு பிள்ளைகள் பற்றிய கவலைகள் இருந்தாலும் அவை களையெடுக்கப்பட்டு எல்லாம் நல்லபடியாக நிறைவேறும். அதேபோல நண்பர்களிடையே நிலவிய கசப்புணர்வுகளும் மாறிவிடும். எல்லாம் இனிமையாகும். மதுரை வாடிபட்டி பைபாஸ் ரோட்டில் நவ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அமாவாசையன்று சென்று வழிபடலாம். சனி இனியவராக பலன் செய்ய ஆஞ்சநேயரையும் வழிபடலாம். பைரவரையும் வழிபடலாம்.

20-12-2018 முதல் 13-3-2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம்

கும்ப ராசிக்கு புதன் 5, 8-க்குடையவர். அவரது நட்சத்திரம் கேட்டையில் சனி சஞ்சாரம். 8-ஆம் இடம் விபத்து, மாரகம், இழப்பு போன்ற பலனைத் தரும் இடம் என்றாலும் 2, 5, 9, 11-க்குடையவரின் சம்பந்தம் பெறும்போது அதிர்ஷ்ட ஸ்தானமாகிவிடும். அந்த விதிப்படி குரு உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும் யோகங்களும் தரக்கூடும். சிலசமயம் முடிவெடுக்க முடியாத குழப்ப நிலை உருவானாலும் அடுத்த நேரமே அதற்கான தீர்வை ஆய்வு செய்து புதிய தீர்க்கமான முடிவுக்கு வந்துவிடுவீர்கள். ""எண்ணித் துணிக்கருமம்'' என்ற குறளைப் பின்பற்றிவிடுவீர்கள். புதிய சிந்தனைகளும் திட்டங்களும் எதிர்கால இனிய வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமையும். ஒரு திரைப் படத்தில் வடிவேலு ""பில்டிங் ஸ்ட்ராங்க். ஆனால் போஸ்ண்ட் வீக்'' என்று நகைச்சுவையாக சொல்லுவார். அப்படியில்லாமல் பேஸ்மண்ட் - பில்டிங் இரண்டும் ஸ்ட்ராங்க் ஆகும். திருச்சி அருகில் குணசீலம் சென்று பெருமாளை வழிபடவும்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு

அவிட்டம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் உங்கள் கும்ப ராசிக்கு 3, 10-க்குடையவர். குரு 2, 11-க்குடையவர். லாபாதிபதி, தொழில் ஸ்தானாதிபதியின் சாரம் பெறுவது சிறப்புதான். தொழில் மேன்மை, வாழ்க்கையில் நிம்மதி, முயற்சிகளில் வெற்றி போன்ற உத்தம பலன்களுக்கு எந்தக்குறையும் வராது. செவ்வாய் சகோதரகாரகன், பூமிகாரகன், இரத்த காரகன் என்பதால் சகோதர வகையில் நன்மைகளும் திருப்தியான பலன்களும் எதிர்பார்க்கலாம். அதேபோல பூமி, வீடு, வாகனம் போன்ற வரிசையிலும் நல்ல பல திட்டங்களும் நற்பலன்களும் உண்டாகும். ஜாதக தசாபுக்திகள் சரியில்லையென்றாலும் ஆறாம் இடத்து ஆதிபத்திய சம்பந்தம் ஏற்பட்டாலும் சிலருக்கு ""இரத்தக் கொதிப்பு'' ஏற்படலாம். அறந்தாங்கி அருகில் ஆவுடையார் கோவில் சென்று (திருப்பெருந்துறை) வழிபடவும். சர்க்கரைச் சத்து, இரத்தக் கொதிப்பு நிவர்த்தியாகும்.

சதய நட்சத்திரக்காரர்களுக்கு

சதயம் ராகுவின் நட்சத்திரம். ராகு கும்ப ராசிக்கு ஆறிலும், கேது கும்ப ராசிக்கு பன்னிரண்டிலும் இருக்கிறார்கள். பாவஸ்தானங்களில் பாவகிரகங்கள் இருப்பது சிறப்பு, அந்த பாவத்தன்மை விலகும். மேலும் அந்த ராகுவை குருபார்க்கிறார். கேதுவுக்கு வீடுகொடுத்த சனி குருவீட்டில் (தனுசு ராசியில்) இருக்கிறார். எனவே குரு சம்பந்தம் பெற்ற ராகுவும் கேதுவும் உங்களுக்கு மறுவாழ்வு அருள்வர். சுபயோகத்தை தருவர். பல காரியங்களில் சுதந்திரமான முடிவு எடுப்பீர்கள் வெற்றியடைவீர்கள். கும்பகோணம்- திருநாகஸ்வரம் சென்று ராகு காலத்தில் ராகு பகவானுக்கு பூஜை செய்யலாம்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு

குருவின் நட்சத்திரம் பூரட்டாதி. உங்கள் ராசிநாதன் சனி, குரு வீட்டில் இருக்க குரு 2, 11-க்குடையவர் ஆகிறார். எனவே படித்த படிப்புக்கேற்ற உத்தியோகமும் சம்பாத்தியமும் அமையும். சிலர் உயர்கல்வி, டபுள்டிகிரி முடித்தும் வேலை வருமானம் இன்றி குடும்பப்பெண்ணாக காலத்தை ஓட்டினாலும் இந்த குருப்பெயர்ச்சி பயனுள்ள வழிகளில் பலனை தரும் வழிகளில் உங்களை நடத்திச் செல்லும். வெளியில் வேலைக்கும் போகலாம். அல்லது வீட்டிலிருந்தபடியே வருமானம் பார்க்கும் வாய்ப்பும் உருவாகும். திருப்பத்தூர் அருகில் பட்டமங்கலம் செல்லவும். கிழக்கு பார்த்த அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)


மீன ராசி அன்பர்களே!

கடந்த ஒரு வருட காலமாக மீன ராசிக்கு 8-ல் இருந்த குரு இப்போது 9-ஆம் இடத்துக்கு மாறியிருக்கிறார். "இன்மை எட்டினில் வாரி பட்டமிழந்தது' என்பது பாடல் 8-ல் குரு மறைவாக இருந்த காலத்தில் நீங்கள் அனுபவித்த வேதனைகளும் சோதனைகளும் எதிரிக்குக்கூட வரக்கூடாது என்று எண்ணத் தோன்றும். 8-ல் மறைந்த குரு மதிப்பு, மரியாதை, கவுரவம், கீர்த்தி, திறமை, செல்வாக்கு இவற்றில் எல்லாம் பாதிப்புகளை சந்திக்க வைத்தார். சிலருக்கு சுகத்தையும் ஆரோக்கியத்தையும் பாதித்தது. சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட பீடைகளையும், சிலருக்கு தலைச்சுற்று, சிலருக்கு காரணமே கண்டுபிடிக்க முடியாத மர்மநோயையும் ஏற்படுத்தியது. ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லாதவர்களுக்குப் பொருளாதாரத்தில் பெரும்பள்ளம் ஏற்படுத்தி, அதில் தள்ளி மண்ணைப் போட்டு மூடப் பார்த்தது. வட்டி செலவு, வைத்தியச் செலவு, விரயச் செலவு, வியாபாரத்தில் நஷ்டம், நாளுக்கு நாள் கடன் பெருக்கம், சிலருக்கு வியாபாரத்தை விட்டு வெளியேறுதல், மென்டல் டென்ஷன் இப்படி பல வகையிலும் உங்களை உயிரோடு சித்ரவதை செய்தது. அடுத்தவர்களுக்காகத் தன் தலையில் சுமைகளை அள்ளிப் போட்டுக்கொண்டுகூட இருப்பவர்களைக் குஷிப்படுத்த கைக்காசை அள்ளி வீசி கடனாளியானவர்கள் சிலர்.

எந்தத் தொழில் செய்தாலும் அது விருத்தியில்லை என புதுத்தொழில் ஆரம்பித்து அதுவும் நாளுக்கு நாள் நசிந்துபோய் விருத்தி இல்லாமல் பழைய கடனோடு புதுக்கடனும் சேர்ந்து விரட்டஓடி ஒளிய இடம் தெரியாமல் வாடி மயங்கிக் கிடப்பவர்கள் அநேகர். பதவிப் பெருமை, பாராட்டுக்கு மயங்கி தலைவர் வாழ்க என்ற வாழ்த்துக்காக மகிழ்ந்து பார்ட்டி வைத்து வாரி வழங்கி பணத்தைக் கரைப்பவர்கள் சிலர். காண்ட்ராக்ட் எடுத்து வாங்கும் பில் பணத்தையெல்லாம் வேலை செய்பவர்களுக்கு கூலியாகப் பகிர்ந்து கொடுத்துவிட்டு சொந்தச் செலவுக்கும் வீட்டுச் செலவுக்கும் கடன் வாங்கும் பரிதாப நிலையில் சில பாவப்பட்டவர்கள் ஏற்பட்டார்கள்.இப்படிப் பலரும் இதற்கு மேலும் ஒரு கஷ்டமில்லை என்று சொல்லும் அளவுக்கு உச்சகட்டத்தல் துவண்டுவிட்டீர்கள். கம்பெனியில் வேலைக்குச்சென்ற பிறகு முதலாளியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி நேர்மையாக உழைத்தவர்களுக்கு தனியாக ஒரு பொறுப்பை கொடுத்து அதில் பல கிளைகளை உருவாக்கிய பிறகு நாளடைவில் முதலாளியின் நம்பிக்கைக்கு மாறாக அவரின் சங்கடத்தையும் சந்தித்து முடிவில் அந்த கம்பெனியை விட்டே வெளியேறி தான் ஆரம்பித்த சிளைகளைத் தானே மூடவைத்த கதையாகவும் சிலருக்கு அனுபவங்கள் நடந்தன. இதுதான் கடந்தகால மலரும் நினைவுகள்.

இப்போது 9-ஆம் இடத்துக்கு வந்துள்ள குரு உங்கள் கஷ்டங்களைப் போக்கி கண்ணீரைத் துடைக்கப் போகிறார். அகப்பட்டவருக்கு அட்டமச்சனி, ஓடிப்போனவருக்கு 9-ஆம் இடத்துக்கு குரு என்ற வாசகம் இனிமேல்தான் பலிக்கப்போகிறது. பொதுவாக குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் யோகமான இடங்கள் அதிலும் இயற்கையில் சுபகிரகமான குருவுக்கு 5, 9 என்ற திரிகோண ஸ்தானங்கள் அதிர்ஷ்ட ஸ்தானங்கள். அதிலும் 9-ஆம் இட திரிகோணமே மிகச்சிறந்தது.ஒரு மலையை அண்டி வாழ வேண்டும் அல்லது ஒரு மனிதனை நம்பி வாழவேண்டும் என்று சொல்லுவார்கள். அந்த நம்பிக்கைக்கு உரியவராக 9-ஆம் இடத்து குரு உங்களை வழிநடத்திச் செல்லுவார். 9-ல் குரு இருப்போருக்கு குருவருள் தேடி வந்து அருள்பாலிக்கும். கும்பிடப்போன தெய்வம் எதிரே வந்தது என்பார்கள். குருவருள் இருந்தால் இறையருள் பரிபூரணமாக கிடைத்துவிடும். இதுவரை நீங்கள் செய்த வழிபாடு, பிரார்த்தனை, பூஜை எல்லாவற்றுக்கும் இனிமேல்தான் வட்டியும் முதலுமாகப் பலன் திரும்பக் கிடைக்கப்போகிறது.

9-ஆம் இடம் என்பது பாக்யஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம். அதில் நிற்கும் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். அத்துடன் 3-ஆம் இடத்தையும், 5-ஆம் இடத்தையும் பார்க்கிறார். எனவே, உங்கள் செல்வாக்கு உயரும். மதிப்பு, மரியாதை, கவுரவம் உயரும். உங்களைப் பார்த்து மீண்டும் இவர் அவ்வளவுதான் க்ளோஸ் ஆகிவிட்டது என்று ஏளனமாக எள்ளி நகையாடியவர்களும் கேவலமாகப் பேசியவர்களும் உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களுமே உங்கள்மீது அவநம்பிக்கையாக இருந்தவர் ஆச்சரியப்படும் அளவுக்கு உங்களது முன்னேற்றமும் யோகமும் அமையப் போகிறது. அதிர்ஷ்டம் வந்து அரவணைக்கப் போகிறது. கண்டபடி கடனை வாங்கி அசலும் அடைக்க முடியாமல் வட்டியும் கட்ட முடியாமல் ஊரை விட்டு ஓடிவிடுவதா? அல்லது மானத்துக்கு அஞ்சி உயிரை மாய்த்துக் கொள்வதா என்று எண்ணி மயங்கித் தயங்கியவர்களுக்குத் தன்னம் பிக்கையும் தைரியமும் உருவாகிவிடும். குருப்பெயர்ச்சியால் நல்ல காலம் உண்டு. பைசா பாக்கி இல்லாமல் கடன்களைப் பைசல் செய்து நாணயத்தைக் காப்பாற்றி நற்பெயர் எடுக்கலாம். அடுத்து குரு 3-ஆம் இடத்தைப் பார்க்கிறார்.

3-ஆமிடம் தைரிய, சகாய, சகோதர ஸ்தானம். உங்களுடைய பொருளாதார பலவீனத்தினாலோ வசதி குறைவினாலோ உங்களைப் புறக்கணித்த உடன்பிறப்புகளும் இனி சுப காரியத்துக்காக உங்களை நாடி வருவார்கள். அந்த அளவுக்கு வசதி வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். "இல்லானை இல்லாளும் வேண்டாள், மற்றும் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்.' செல்லாது அவன் வாய்ச் சொல். கைப்பொருள் உள்ளானை சுற்றம் நட்பு சொந்தம் எல்லாரும் சென்று ஏற்றுவர்'' என்று ஒரு பாடல் உண்டு. அது பலிக்கப் போகிறது.அடுத்து 1, 10-க்குடைய குரு 5-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 5-ஆம் இடம், மனது, திட்டம், மகிழ்ச்சி, தாய்மாமன், பாட்டனார், மந்திர உபதேசம், பிள்ளைகள் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அதனால் உங்களுடைய நீண்ட காலத் திட்டங்கள் நிறைவேறும். தொழில்துறையிலும் தொடங்கி பாதியிலேயே நின்று போன திட்டங்கள் செயல் வடிவம் பெறும். வெற்றியாகும்.

பாட்டனார், தகப்பனாரின் பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். சொத்து சுகங்கள் இருந்தும் விற்கவும் முடியாமல் சரியாக அனுபவிக்கவும் முடியாமல் தவித்து வந்த நிலை மாறி கஷ்டத்திற்கு கைகொடுக்கும் விதமாகப் பயன்படும். திருமணமாகி நீண்டநாள் வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை சரிவரச் செய்து மகிழலாம். இரு பிள்ளைகளைப் பெற்று சொத்தை அவர்களுக்கு சரி சமமாகப் பிரித்துக் கொடுக்க முடியாமல் இழுபறியாக இருந்து வந்த நிலை மாறும். அவர்களுக்குள்ளேயே அனுசரிப்புத்தன்மை உண்டாகி இருவருக்கும் சரிசமமாக சுமுகமாக பிரித்து கொடுக்கலாம். அதற்குண்டான வழிவகைகளும் அமையும். விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை என்ற கருத்தைப் புரிந்து கொண்டு பிள்ளைகளும் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு காலாகாலத்தில் அவர்களின் சடங்கு, கல்யாணம் முதலிய சுபகாரியங்களைச் செய்ய முடியாமல் வாடி வதங்கியவர்களின் வாட்டமும் வருத்தமும் விலகிவிடும். உங்களிடம் காசு, பணம் இல்லாவிட்டாலும் அவர்களின் எதிர்கால இனிய வாழ்வுக்கு குருபகவான் திருவருள் புரிவார்.

4-10-2018 முதல் 21-10-2018 வரை விசாக நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

குரு உங்கள் ராசிநாதன் என்பதோடு 1, 10-க்கு உடையவர். விசாகம் அவருடைய சொந்த நட்சத்திரம். குரு நிற்பது 9-ஆம் இடம். உங்கள் ராசியைப் பார்க்கிறார். அதிர்ஷ்டமும் யோகமும் அது இஷ்டமாக உங்களைத் தேடி வரும். குரு பார்க்க கோடி நன்மை என்பது உங்களுக்கே பொருந்தும். பிள்ளைகள் வழியில் நல்ல பலன்கள் நடக்கும். தொழில்-உத்தியோகம்-வாழ்க்கையில் முழு அளவில் மகிழ்ச்சியான பலன்கள் நடக்கும். வறட்சி நிலை மாறி பொருளாதாரத்தில் புரட்சி நிலை ஏற்பட்டு பூரிப்பு அடையலாம். கும்பகோணம் அருகில் ஆவூர் சென்று அஷ்டமியில் நடக்கும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். குபேரன் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்ற திருத்தலம்.

21-10-2018 முதல் 20-12-2018 வரை அனுஷ நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

இக்காலமும் உங்களுக்கு நற்காலமே. எல்லாக் காரியங்களும் உங்கள் மனம் போல், விருப்பம் போல் தடையின்றி நடக்கும். உங்கள் மனைவி மக்களும் நண்பர்களும் அதற்கு பக்க பலமாக, தக்க துணையாக இருப்பார்கள். வேலை, உத்தியோகத்தில் நிலவிய அலைச்சல், புகைச்சல், வேதனை எல்லாம் விரட்டியடிக்கப்படும்.

20-12-2018 முதல் 13-03-2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

மீன ராசிக்கு 4, 7-க்குடைய புதன் சாரத்தில் குரு சஞ்சாரம். செல்வாக்கு உயரும். தேக ஆரோக்கியம் தெளிவுபெறும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சிலருக்கு பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும். திருமண தடை விலகும். நல்ல இடத்து சம்பந்தம் கூடும். தாராளமான பணப்புழக்கமும் வரவு செலவும் இடம் பெறும். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் சாத்துக்கூடல் கிராமத்தில் ஸ்ரீஅகண்டபரிபூரண சச்சிதானந்த சபை 1961-ல் மோகனூர் சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்டு குருபூஜை வழிபாடு நடக்கிறது. கலந்து திருப்தியடையலாம்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு

பூரட்டாதி குருவின் நட்சத்திரம். குருவும் ராசிக்கு 9-ல் நின்று பார்க்கிறார். எல்லாம் நிறைவாகவே நிகழும். மனதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் உருவாகும். எதிர்பார்க்கும் காரியங்களில் இனிய வெற்றியும் ஏற்றமும் உண்டாகும். தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி ரெங்கநாதபுரம் சென்று திருஞானேஸ்வரனை வழிபடவும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு

எதிர்பார்ப்புகள் இனிமையாக ஈடேறும். குடும்பம், மனைவி, மக்கள், பேரன் பேத்திகள் வகையில் அன்பும் பாசமும் நிலவும். ஆனந்தம் உண்டாகும். பொருளாதாரமும் திருப்தியாக இருக்கும். திருப்புனல்வாசல் அருகில் தீயத்தூர் சென்று சஹஸ்ரலட்சுமியேஸ்வரரை வழிபடவும். உத்திரட்டாதியன்று காலையில் ஹோமம், அபிஷேகம், பூஜை, ஆராதனை, அன்னதானம் நடக்கும். கணேசன் செல்: 99652-11768.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு

ரேவதி புதன் நட்சத்திரம்- புதன் மீனத்தில் நீசம் என்றாலும் நீசபங்க ராஜயோக பலன்களை சந்திக்கலாம். தேக ஆரோக்கியம், தெளிவான வாழ்க்கை- திருமணம், மக்கள் செல்வம், தொழில் மேன்மை போன்ற எல்லா நலனும் உண்டாகும். சொந்த வீடு கனவு நனவாகும். திருச்சி- முசிறி வழி- காருகுடி சென்று கைலாசநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்யவும்.

 

 

Next Story

குரு பெயர்ச்சி... எடப்பாடி குடும்பம் பரிகார பூஜை...

Published on 14/02/2019 | Edited on 14/02/2019


 

temple

 

இன்று ராகு கேது குரு பெயர்ச்சி நாள் என்ற நம்பிக்கையால் கோயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஈரோடு காரை வாய்க்கால் சுயம்பு நாகர்கோயிலில் ஆண்கள், பெண்கள் அதிக அளவில் வந்தனர். ராகு கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு சென்றுள்ளார். அதேபோல் கேது மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்து போயுள்ளதாக ஜாதக,ஜோதிட நிபணர்கள் கூறியுள்ளார்கள். அதன்படி அந்த ராசியை சேர்ந்தவர்கள் சிறப்பு பரிகார பூஜைகளும் செய்தனர்.

 
குறிப்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினர் பலர் குரு பெயர்ச்சி பரிகார பூஜை செய்தனர். அமைச்சர் பவானி கருப்பணன் குடும்பத்தினர், குரு பெயர்ச்சிப்படி கருப்பனன் ராசிக்கு எதிராக உள்ளது என்று மூன்று கோயில்களில் பரிகார பூஜைகள் செய்துள்ளார்கள். இது பற்றி அ.தி.மு.க. ர.ர.க்கள் கூறும்போது அமைச்சர் கருப்பணனுக்கு கிரக நிலை சரியில்லை, பார்ப்போம் இந்த பரிகார பூஜையால் அமைச்சர் பதவி நீடிக்குமா என்பதை என்றனர். முதல்வர் எடப்பாடி குடும்பத்தினரும் எடப்பாடி ஊரை அடுத்துள்ள தேவூர் கிராமத்திற்கு அருகே உள்ள அவர்களது குடும்ப குலதெய்வ கோயிலில் சிறப்பு பரிகார பூஜைகள் செய்து வழிபட்டனர்.

 

 

Next Story

மந்திரியின் மஞ்சள் துண்டு மர்மம்! -குரு பெயர்ச்சியால் ஓஹோ வளர்ச்சி!

Published on 05/10/2018 | Edited on 05/10/2018

“இருந்தாலும் நீ ரொம்ப தைரியசாலிப்பா.. இந்த ஓட்ட கண்ணாடியைப் போட்டுக்கிட்டு எப்படி துணிஞ்சி முன்னால நிக்கிறியோ?”

மன்னன் திரைப்படத்தில்  தியேட்டர் காமெடி சீனில் கவுண்டமணி ரஜினியிடம் இப்படி கேட்பார்.  

 

அதேரீதியில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்த ஒரு காரியம் இன்று நகைப்புக்கு ஆளானது. 

 

rajendra balaji

 

விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 322 பதின்மப்பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் இன்று விருதுநகர் வந்தனர். 

 

முன்னதாக விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, உடன் இருந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மஞ்சள் துண்டு அணிந்திருந்தார். தமிழகத்தில் கலைஞரின் அடையாளமாக இருந்த மஞ்சள் துண்டை, அதிமுக அமைச்சராக இருந்துகொண்டு, பொது இடத்தில் அணிவது ஆச்சரியம்தான் என்று  அந்த இடத்தில் முணுமுணுப்பு கிளம்பியது. அங்கிருந்து நிகழ்ச்சி நடந்த கல்லூரிக்குச் செல்லும் வரையிலும் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக, அந்த மஞ்சள் துண்டு அவர் தோளிலேயே கிடந்தது. இதைப் பார்த்து அமைச்சர் செங்கோட்டையன்,   “என்னப்பா இது? விருதுநகர் மாவட்டத்துல உங்க அமைச்சர்ல இருந்து  நம்ம கட்சிக்காரங்க அத்தனை பேரும் மஞ்சள் மஞ்சளா தெரியுறீங்க?” என்று கேட்டே விட்டார். 

 

rajendra balaji

 

‘மஞ்சள் துண்டு போட்டால் பெரிய பதவியைப் பிடிக்கலாம்னு ஜோசியர் யாரும் அமைச்சர்கிட்ட சொல்லிட்டாங்களோ என்னமோ?’ என்று அங்கே ஒருவர் சத்தமில்லாமல் கமெண்ட் அடிக்க, அமைச்சர் தரப்பில் ஒருவர்,  மஞ்சள் துண்டு அணிந்ததற்கான காரணத்தை விளக்கினார். 

 

“பொதுவாக, அமைச்சரின் விசுவாசிகள் பலரும் வியாழக்கிழமை தோறும் மஞ்சள் சட்டை அணிவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஏனென்றால், வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள். குருவின் நற்பார்வை கிடைப்பதற்கு, மஞ்சள் நிற ஆடை அணிந்து, அவரை மகிமைப்படுத்துவார்கள். ஜோதிடம், மாந்திரீகம் போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. வீட்டில் இருக்கும்போது மஞ்சள் துண்டு இல்லாமல் அவரைப் பார்க்க முடியாது. அதுவும், இன்று குருப்பெயர்ச்சி என்பதால், அமைச்சர் செங்கோட்டையன் பக்கத்தில் இருந்தும்,  கட்சித் தொண்டர் ஒருவர் போட்ட மஞ்சள் துண்டு, அவர் தோளிலேயே கிடக்கும்படி பார்த்துக்கொண்டார்.” என்றார். 

 

அமைச்சர் மஞ்சள் துண்டு அணிந்ததில் மர்மம் எதுவும் இல்லையென்றால் சரிதான்!