Skip to main content

“ஆசையை ஒழி; பக்தியை செலுத்தி முக்தியைத் தேடு” - பகவத்கீதையில் கண்ணன்!

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

 Eliminate desire; Seek Salvation by Paying Bhakti 

 

மனிதன் பிறக்கும்போது ஆடையின்றிப் பிறக்கிறான்; ஆனால் ஆசையின்றிப் பிறப்பதில்லை. ஒரு வயதுக் குழந்தையொன்று தத்தித்தத்தி நகர்ந்து கொண்டிருக்கிறது. எதிரே ஒரு நாய் பொம்மை இருக்கிறது. அக்குழந்தைக்கு அதன் மேல் ஆசை. தவழ்ந்து போய் அதையெடுத்து, வாயில் வைத்து விளையாடுகிறது.

 

அடுத்து அக்குழந்தை வளர்ந்து ஏழெட்டு வயதாகிறது. அப்போது விளையாட்டின் மேல் ஆசை. இன்னும் வளர்ந்து வாலிபப் பருவம் வரும்போது பல ஆசைகளும் வருகின்றன. அந்த வயதில் உடுக்கும் உடையில் ஆசை; தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் ஆசை; எதைப் பார்த்தாலும் ஆசை. இப்பொழுது மனிதனுக்கு ஆசையென்றால் என்னவென்று புரிந்துவிடுகிறது. இந்த நேரத்தில்தான் அவன் தன்னையுணர்ந்து ஆசையை அறவே விட்டொழிக்க ஆசைப்படவேண்டும்.

 

இந்த வயதில் ஆசையை ஒழிக்கப் பழகிக்கொண்டால், இறுதிவரை ஆசையே வராது. ஆசையைவிட்டால் நிம்மதியாக வாழலாம். பகவத் கீதையில் கண்ணன் சொல்கிறான் "எப்புருஷன் ஆசைகளை அறவே அகற்றி, பற்றற்று, அகங்கார மமகாரமின்றி நடமாடுகிறானோ அவன் சாந்தியடைகிறான்.'ஆசை ஒழிந்தால் "நான், எனது' என்பன போய்விடுகின்றன. ஆசை இருந்தால் அனைத்தையும் அடையவேண்டுமென்ற அபரிமிதமான எண்ணம் உதயமாகிறது. அதுவே இறுதியில் அழிவில் கொண்டுபோய் விட்டுவிடும்.

 

ஒரு பருந்து தனது அலகில் மீனைக் கவ்விக்கொண்டிருக்கிறது. அது உண்பதற்கு எத்தனையோ புழு, பூச்சிகள் இருந்தாலும் அந்த மீனின்மேல் ஆசை. அதைப் பிடுங்குவதற்காக சில காக்கைகளும் பருந்துகளும் அப்பருந்தைப் பின்தொடர்ந்து கொத்தி ஆரவாரிக்கின்றன. பருந்து எந்தத் திக்கில் பறந்தாலும் அவையும் கூடவே பறந்துசென்றன. தொந்தரவைப் பொறுக்கவியலாமல் அப்பருந்து மீனைக் கீழே போட்டுவிட, உடனே அதை வேறொரு பருந்து கவ்விக்கொள்ள, காகங்களும் மற்ற பருந்துகளும் அந்தப் புதிய பருந்தை தொந்தரவு செய்ய ஆரம்பிக்கின்றன. தப்பித்த முதல் பருந்து இப்போது சாந்தமாய் ஒரு மரக்கிளையில் அமர்ந்துகொண்டது. ஆசையை விட்டொழித்து மீனைக் கீழே போட்டதால் அந்தப் பருந்து நிம்மதியாக இருக்கிறது. அதுபோல நாமும் ஆசையை விட்டுவிட்டால் நிம்மதியாக வாழலாம். ஆசை சிலசமயம் அழிவையும் உண்டாக்கிவிடும். 

 

ஒரு மான் துள்ளித்துள்ளி ஓடுகிறது. அதைத் தனது அம்பினால் வீழ்த்த வேடன் துரத்துகிறான். மான் வேகமாக ஓடுவதால் அதை அவனால் குறிவைத்து அடிக்கமுடியவில்லை. அதற்கு ஒரு யூகத்தைக் கையாள்கிறான். தனது இடுப்பிலிருக்கும் கொம்பையெடுத்து "பூம்... பூம்... பூ,.' என்று ஊதுகிறான். அந்த ஓசையைக் கேட்டு நின்ற மான் காதை சாய்த்து அதைக் கேட்கும்போது வேடன் அம்பெய்து அதை வீழ்த்திவிடுகிறான். அந்த ஓசையின்மீது மான் ஆசை வைத்ததால் அதற்கு அழிவு வந்தது.

 

விட்டில் பூச்சி எரியும் விளக்கின் மீது ஆசைகொண்டு அதில் தானே விழுந்து உயிரை இழந்துவிடுகிறது. குளத்தில் பாசி உள்ளது. வேறு புழு, பூச்சிகளும் உள்ளன. இருந்தாலும் அந்த மீனுக்கு தூண்டில் கட்டிவிடப்பட்ட புழுவின் மீது ஆசை வந்து, தூண்டிலில் சிக்கி தன் உயிரை இழந்து மனிதனுக்கு இறையாகி விடுகிறது.

 

இப்படி ஆசையினால் அழிவுப்பாதையை உண்டாக்கிக் கொள்ளாமல் நாம் ஆசையைக் கைவிட வேண்டும். அதற்கு பதில் பகவான் மீது பக்தி செலுத்த ஆசைப்பட வேண்டும். பகவானிடம் பக்தி செலுத்தினால் அது நம்மை முக்திக்கு அழைத்துச் செல்லும். முக்தியென்பது எல்லாருக்கும் உண்டு. ஒரு சிலருக்கு முதற்பிறவியிலேயே கிடைக்கும். இன்னும் சிலருக்கு அடுத்த பிறவியிலும், மேலும் சிலருக்கு அவர்களின் பாவ, புண்ணியத்தை அனுசரித்து அடுத்தடுத்து பிறந்து, கடைசிப் பிறவியிலாவது முக்தி கிடைத்துவிடும். உலகத்தில் மனிதன் பிறக்கும்போது வித்யாகுணம், அவித்யா குணம் என்ற இரண்டு குணங்களுடன் பிறக்கிறான். இதில் வித்யா குணமுள்ளவன் முக்தியடைகிறான். வித்யாகுணம் என்னவென்பதை கீதை இப்படிக் கூறுகிறது:

 

கண்ணன் கூறுகிறான்: "என்னிடத்தே மனதை வைத்து, என்னிடத்து புத்தியைச் செலுத்தி பக்தியை வளர்த்தால் பின்பு நீயே என்னிடம் வசிப்பாய்; சந்தேகமில்லை.' இதற்கு அர்ஜுனன், "மனதை உன்பால் செலுத்தி பக்தி செய்ய முடியாமல், உறுதியாக இறைவன்பால் வைக்கமுடியாதவர்கள் என்ன செய்வது?' என்று கேட்கிறான்.

 

இதற்குக் கண்ணன் கூறுகிறான்; "தனஞ்ஜயா! இனி சித்தத்தை என்பால் செலுத்த, உறுதியாக வைக்க இயலாவிடின் அப்பியாச யோகத்தால் என்னையடைய விரும்பு!

 

அதாவது மனது உறுதியாக இறைவன்பால் இருக்குமானால் அது முதிர்ந்த பக்தியாகிவிடுகிறது. நல் இயல்பு, கெட்ட இயல்பு இரண்டுக்கும், பழக்கத்தால் ஆகாததை ஆகும்படி செய்யலாம்.

 

அப்பியாசத்தைவிட ஞானம் சிறந்தது. ஞானத்திலும் தியானம் மேலானது. தியானத்தைக் காட்டிலும் கர்மபலத் தியாகம் உயர்ந்தது. தியாகத்தினின்று விரைவில் சாந்தி வருகிறது. சாந்தி வந்தால் முக்தியடையலாம்.

 

பக்தியில் வைதீக பக்தி, ராகபக்தி என்று இரண்டு உள்ளது. பகவந்நாமாவை பலமுறை உச்சாடணம் செய்தல், உபவாசமிருத்தல், தீர்த்தயாத்திரை செல்லுதல், பூஜை செய்தல் போன்றவை வைதீக பக்தியில் சேரும். நெடுங்காலம் பக்தி செய்து, ஈஸ்வரபக்தியில் உயர்ந்த நிலையை அடைதல் ராக பக்தியாகும். உலகப்பற்றிலிருந்து முழுவதும் விடுபட்டு, முழுமையான ஈஸ்வரபக்தி செலுத்தினால் முக்தியடையலாம்.

 

 - ராம சுப்பு

 


 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.