Skip to main content

ஜீவநதியாக ஓட வேண்டி விருத்தாச்சலம் மணிமுக்தாறில் ஆரத்தி எடுத்த பக்தர்கள்! 

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

Devotees take Aarti at Vriddhachalam Manimuktar to run as a river of life!

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வழியாக மணிமுக்தாறு செல்கிறது. விருத்தாசலம் தல தீர்த்தமான மணிமுத்தாற்றில் நீராடி மூலவர் விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால், கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வழிபட்ட புண்ணியம் கிடைப்பதுடன் சகல தோஷங்களும், ரோகங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இந்த நதியில் இறந்தவர்களின் அஸ்தியைக் கரைத்தால் அது சுண்ணாம்பு கற்களாக மாறி இங்கேயே தங்கிவிடுவதாக தல புராணம் கூறுகிறது‌. 'காசியைவிடவும் வீசம் பெருசு விருத்தகாசி' என்ற பெருமையை உடையது இந்த மணிமுக்தாறு. முத்தியைத் தருகின்ற முக்தா நதி, விருத்தாசலம் நகரை இரண்டாக பிரித்துக்கொண்டு விருத்தகிரீஸ்வரரை வலமாகச் சூழ்ந்து ஓடி நகருக்கு அழகு சேர்க்கிறது. 

 

சுந்தரர், இறைவனைப் பாடி பெற்ற 12,000 பொற்காசுகளை எடுத்துக்கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்றெண்ணி சிவபெருமானிடம், இந்தப் பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று முறையிட, பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுக்தாற்றில் வீசிவிட்டு, திருவாரூர் கமலாலய குளத்தில் பெற்றுக்கொள்ளும்படி அருளினார். சிவகாமி அம்மையார் என்பவருக்குத் திருக்கோயிலில் விளக்கேற்ற எண்ணெய்க்குப் பதில் மணிமுக்தாற்றின் புண்ணிய மேட்டில் தீர்த்தம் எடுத்து விளக்கேற்ற அருள் பாலித்தார் விருத்தாம்பிகை அம்மன்.

 

Devotees take Aarti at Vriddhachalam Manimuktar to run as a river of life!

 

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆறு வற்றாத ஜீவ நதியாக ஓட வேண்டும் என்று எண்ணி விருத்தகிரீஸ்வரர் அர்த்தஜாம அடியார் வளர்ச்சிக் குழு சார்பில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு நேற்று மாலை மணிமுத்தாறு வற்றாத ஜீவநதியாக அனைத்து நாட்களிலும் தண்ணீர் நிரம்பி ஓட மணிமுக்தாறு படித்துறையில், (காசியில் கங்கை நதிக்கு ஆரத்தி எடுப்பது போல) ஆரத்தி எடுக்கும் விழா நடந்தது. அப்போது மணிமுக்தா அன்னையிடம் 'வற்றாத ஜீவ நதியாக ஓட வேண்டும்' என வேண்டி வழிபாடு செய்து சிவாச்சாரியர்கள் ஆரத்தி எடுக்க, கூடியிருந்த பக்தர்கள் நெய் தீபமேற்றினர். அப்போது திடீரென மழை தூறல்கள் தூர, பக்தர்கள் பக்தி பரவசத்தில் 'ஓம் நமசிவாய' கோஷங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

 

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.