Skip to main content

நீதிமன்ற வழக்குகளில் நல்ல தீர்ப்பைப் பெற; ‘பாசுகிநாத் மந்திர்’ வழிபாடு

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

basukinath mandir  temple

 

பாசுகிநாத் மந்திர்’ இந்த ஆலயம் ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ளது. ஜார்கண்டில் இருக்கும் வைத்தியநாத் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் இந்த ஆலயத்திற்கும் கட்டாயம் செல்வார்கள். இங்கு செல்லாமல் வந்துவிட்டால், அந்தப் பயணமே பயனற்றதென்று சாஸ்திரம் கூறுகிறது. தேவ்கரிலுள்ள வைத்தியநாத் ஆலயத்திலிருந்து 42 கிலோ மீட்டர் தூரத்தில், ஜரமுண்டி என்ற கிராமத்தில் பாசுகிநாத் மந்திர் இருக்கிறது. இந்த ஆலயத்திற்குள் பல சிறிய கோவில்களும் இருக்கின்றன.

 

வழக்கு, சண்டை, நீதிமன்றம் என்று அலைந்துகொண்டிருப்பவர்கள் இங்கு சென்று வழிபட்டால் நல்ல தீர்ப்புகள் கிடைக்குமென்பது பொதுவான நம்பிக்கை. இங்கு குடிகொண்டிருக்கும் சிவனை மக்கள் "பாபா நாகேஷ்' என்றும் அழைக்கிறார்கள்.

 

வைத்தியநாத் ஆலயத்திலிருக்கும் சிவலிங்கத்தை காமனா லிங்கம் என்பார்கள். அந்த சிவிலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்துவிட்டு வரும் பக்தர்கள், அதற்கடுத்து பாசுகிநாத் நாகேஷ் ஜோதிர்லிங்கத்திற்கும் நீரால் அபிஷேகம் செய்வதென்பது நடைமுறையில் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும் செயல்.

 

வைத்தியநாத் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் இரு பக்கங்களிலும் நீர்க் கலசங்கள் தொங்கிக்கொண்டிருக்கும் காவடியைத் தோளில் தூக்கியபடி 110 கிலோமீட்டர் தூரம் நடந்துவருவார்கள். அந்தப் பகுதியிலிருக்கும் பாகல்பூர் மாவட்டத்திலுள்ள சுல்தான் கஞ்ச் என்ற இடத்தில் கங்கைநதி வடக்குநோக்கித் திரும்புகிறது. அந்த இடத்தில்தான் காவடி தூக்கிவருபவர்கள் கலசத்தில் நீரைப் பிடிக்கவேண்டும். வழியில் எந்த இடத்திலும் தரையில் அதை வைக்கமாட்டார்கள்.

 

அதற்கென இருக்கும் மரக்கொம்புகளில்தான் (ஆங்காங்கே இருக்கும்) அந்த காவடியைத் தொங்கவிடவேண்டும். 110 கிலோமீட்டர் தூரம் பயணித்து வைத்தியநாத் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், அங்கிருந்து 42 கிலோமீட்டர் தூரம் பயணம்செய்து, பாசுகிநாத் ஆலயத்தை அடையவேண்டும். பலர் காவடியுடன் வாகனங்களிலும் பயணிக்கிறார்கள்.

 

பாசுகிநாத் ஆலயத்திலிருக்கும் சிவனை மனமுருக வழிபட்டால், மனதில் நினைக்கும் அனைத்து விஷயங்களும் உடனடியாக நிறைவேறும் என்பது ஆழமான நம்பிக்கை. புராணத்தில் பாசுகிநாத் ஆலயம் காட்டிற்குள் இருந்ததாக கூறப்படுகிறது. பண்டைக் காலத்தில் அந்தப் பகுதி "தாருகா வனம்' என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த ஆலயத்தைப் பற்றி கூறப்படும் கதை இது...

 

பாசுகி என்ற காட்டுவாழ் மனிதன் நிலத்திற்குக் கீழே இருக்கும் கிழங்குகளை மண்வெட்டியின் மூலம் தோண்டிக் கொண்டிருந்தபோது, அவனுடைய மண்வெட்டி அங்கிருக்கும் சிவலிங்கத்தின் மீது பட்டு, சிவலிங்கத்திலிருந்து பால் வர ஆரம்பித்திருக்கிறது. அதைப் பார்த்து பதைபதைப்பு அடைந்துவிட்டான் பாசுகி. அப்போது ஆகாயத்திலிருந்து ஒரு அசரீரி, "என்னைக் கண்டு பயப்படாதே. நான்தான் சிவன். என்னை வழிபடு. உனக்கு அருள் தருவேன்' என்று கூறியிருக்கிறது. பாசுகி வழிபட்ட அந்த இடம்தான் இப்போது "பாசுகிநாத்' என்று அழைக்கப்படுகிறது.

 

அங்கு சிவன்-பார்வதி இருவருக்கும் பெரிய கோவில்கள் இருக்கின்றன. இங்கு வருபவர்கள் வில்வம், மலர்கள் ஆகியவற்றை வைத்து வழிபடுகிறார்கள். வருடத்திற்கொரு முறை இந்த ஆலயத்தில் ருத்ராபிஷேகம் நடக்கும். அப்போது அங்கு ஆறென பால் ஓடும். ருத்ராபிஷேகம் செய்யும்போது நெய், தேன், தயிர் ஆகியவற்றாலும் அபிஷேகம் செய்வார்கள்.

 

வருடம் முழுவதும் அங்கு பக்தர்களின் கூட்டம் இருக்கும். குறிப்பாக சிரவண மாதத்தில் (ஆடி) மிகவும் அதிகமான கூட்டமிருக்கும். அந்த ஒரு மாதம் தவிர, மற்ற மாதங்களில் அனைத்து பக்தர்களும் சிவனைத் தொட்டு வணங்கலாம்.

 

சென்னையிலிருந்து ராஞ்சிக்குச் செல்லும் ரயிலில் 1,610 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். ஆலப்புழையிலிருந்து சென்னை வழியாக ராஞ்சிக்குச் செல்லும் தன்பாத் விரைவு வண்டியில் செல்லலாம். ராஞ்சியிலிருந்து 274 கிலோமீட்டர் தூரத்தில் பாசுகிநாத் மந்திர் உள்ளது. ராஞ்சியில் விமான நிலையமும் உண்டு.

 

வாழ்க்கையில் ஒருமுறையாவது பாசுகிநாத் மந்திர் என்ற இந்த ஆலயத்திற்கு சென்றுவந்து, சிவனின் பேரருளைப் பெறலாமே!

-மகேஷ் வர்மா

 

 

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.