Skip to main content

ஆசியாவில் உயரமான அய்யனார் கோயில்; மாலையால் சாதனை படைத்த கதை!

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

Ayyanar Temple, tallest in Asia; Malai's record-breaking story!

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் உள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் அப்பகுதி மக்களால் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது. கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள 35 அடி உயரமுள்ள பிரமாண்டமான குதிரை சிலை அய்யனாரின் வாகனமாக இன்றளவும் பக்தர்களால் பார்க்கப்படுகிறது. இந்த குதிரை சிலை ஆசியாவிலே உயரமான குதிரை சிலை என்றும் கூறப்படுகிறது.

 

ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத் திருவிழா மகாமகத்திற்கு இணையாக பக்தர்கள் கூடும் திருவிழாவாக நடத்தப்படுகிறது. மாசி பௌர்ணமி நாளில் நடத்தப்படும் மாசிமகத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிரமாண்ட குதிரை சிலைக்கு நேர்த்திக்கடன் உள்ள பக்தர்கள் காகிதப் பூ மாலைகள் அணிவிப்பதே சிறப்பு. 

 

Ayyanar Temple, tallest in Asia; Malai's record-breaking story!

 

35 அடி உயரம் கொண்ட மாலைகளை கார், வேன், லாரி போன்ற வாகனங்களில் ஏற்றி வந்து குதிரை சிலைக்கு அணிவித்து அய்யனாரை தரிசனம் செய்வதால் மன அமைதி கிடைப்பதாக கூறுகின்றனர் பக்தர்கள். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு மாலைகளுடன் வருவர். கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் கூட தடையின்றி திருவிழா நடத்தப்பட்ட ஒரே கோயில் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் தான் என்ற பெருமையும் உண்டு.

 

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 ஆயிரம் மாலைகள் வரை குதிரை சிலைக்கு அணிவிக்கப்படும் கடந்த ஆண்டு 2200 மாலைகள் வரை அணிவிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக மாலைகள் அதிகம் வரும் என்பதால் முதல் நாளே கிராமத்தின் முதல் மாலை அணிவிக்கப்படுவது போல இந்த ஆண்டும் தொடங்கியது. அமைச்சர் மெய்யநாதனும் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்து மாலை அணிவித்தார். ஆனால் இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் திங்கள் கிழமை இரவு 10 மணி வரை 2750 மாலைகள் அணிவிக்கப்பட்ட நிலையில் சுமார் 200 மாலைகள் ஏற்றப்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தது. "பெரிய கோயில் வரலாற்றிலேயே முதன் முறையாக 2700 மாலைகளை கடந்துள்ளது" என்று பெருமையாக கூறுகின்றனர். 

 

Ayyanar Temple, tallest in Asia; Malai's record-breaking story!

 

மாசிமகத் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம் உள்பட பல கிராமங்களிலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானமும், 100க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தது. கீரமங்கலம் மேற்கு பேட்டை ஜமாத்தார்கள் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் பக்தர்களுக்காக தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் பாட்டில்கள் வழங்கி சிறப்பித்திருந்தனர். இன்று செவ்வாய்க்கிழமை இரவு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.

 

 

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.