Skip to main content

”சில நேரங்களில் பரிகாரங்கள் ஏன் பலிப்பதில்லை?” - ஜோதிடர் எம்.வி.நரநாராயணன் விளக்கம்

Published on 11/06/2022 | Edited on 13/06/2022

 

mv naranarayanan

 

பஞ்சாங்க கணிதக் கலாமணி எம்.வி.நரநாராயணன், நக்கீரனின் ஆன்மீக யூடியூப் தளமான 'ஓம் சரவண பவ'வில் ஜோதிடம் குறித்த பல்வேறு விஷயங்களைப் பேசிவருகிறார். அந்த வகையில், விரும்பியது நடக்க வேண்டும் என்பதற்காக செய்யும் பரிகாரங்கள் சில நேரங்களில் ஏன் பலிப்பதில்லை என்பது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

நினைத்தது நடக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் பரிகாரம் செய்கிறார்கள். ஆனால், அதில் பல பரிகாரங்கள் பலிப்பதில்லை. அதற்கு காரணம் என்ன?

 

நாம் நினைத்த நாட்களிலும் நமக்கு வசதியான நாட்களிலும் பரிகாரம் செய்வது மிகப்பெரிய தவறு. நம்முடைய நட்சத்திரத்திற்கு எந்தத் தினத்தில் தாராபலன் இருக்கிறதோ அன்றைய தினத்தில்தான் பரிகாரம் செய்ய வேண்டும். அதேபோல எந்தத் தேவதைக்கு பரிகாரம் செய்கிறோமோ அந்த நாள் அந்தத் தேவதைக்கு உரிய நாளாக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். எல்லா நாளும் இறைவனுக்கான நாள்தான் என்று நினைத்து நமக்கு வசதியான தினத்தில் பரிகாரம் செய்தால் நிச்சயம் அந்தப் பரிகாரம் பலிக்காது.

 

பிரார்த்தனையின் மூலம் செய்யும் பரிகாரங்கள்தான் வெற்றியைத் தரும். வெறும் சடங்காக செய்யும் பரிகாரம் வெற்றியைத் கொடுக்காது. நமக்கு தாராபலன் இல்லாத நாட்களில் செய்யும் பரிகாரம் சில நேரங்களில் நமக்கு எதிராகவே அமைந்துவிடும். நம்முடைய நட்சத்திரத்திற்கு மூன்றாவது நட்சத்திரம் விபத்து தாரை. அந்த நாளில் பரிகாரம் செய்தால் நமக்கு பலன் கிடைக்காமல் போவது மட்டுமின்றி சில துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். அதேபோல நம்முடைய ஜென்ம நட்சத்திரத்திற்கு ஐந்தாவது நட்சத்திரம் பிரத்யக்கு தாரை. பிரத்யக்கு என்றால் காரிய நாசம் என்று பொருள். அந்தத் தினத்தில் செய்யும் பரிகாரம் காரிய நாசத்தைத்தான் ஏற்படுத்தும். ஏழாவது நட்சத்திரமான வதை தாரையில் பரிகாரம் செய்தால் வாழ்நாள் முழுக்க துன்பத்தை அனுபவிக்க நேரிடும். எனவே மூன்றாவது,ஐந்தாவது, எழாவது நட்சத்திரத்தில் பரிகாரம் செய்யாதீர்கள். 

 

நதிக்கரையில் பரிகாரம் செய்கிறீர்கள் என்றால் சில மாதங்கள்தான் அதற்கு உகந்த மாதங்கள். சித்திரை மாதம் அமாவசைக்கு அடுத்த நாளிலிருந்து அடுத்த முப்பது நாட்களில் நதிக்கரையில் பரிகாரம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அதேநேரத்தில் அந்த நட்சத்திரம் உங்களுக்கு நல்ல நட்சத்திரமாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. ஐப்பசி மாதம் அமாவசைக்கு அடுத்துவரும் பிரதமை முதல் கார்த்திகை மாத அமாவாசை வரையிலான ஒரு மாத காலத்தில் செய்யும் பரிகாரம் உறுதியாக வெற்றியைத் தரும். அதேபோல தை மாத அமாவசைக்கு பிறகான அடுத்த ஒரு மாதமும் பரிகாரத்திற்கு உகந்தது. 

 

பரிகாரத்திற்கு உகந்த நாட்கள் அல்லாத நாட்களில் செய்யும் பரிகாரம் எந்த நன்மையையும் உங்களுக்கு வழங்காது. ஒருவேளை உங்களுக்கு நல்லது நடந்தால் அது உங்களது ஜாதக பலன்களால் கிடைத்திருக்கும். எனவே இனி பரிகாரம் செய்யும் முன் உங்களது நட்சத்திரத்திற்கு ஏற்ற நாளை தேர்ந்தெடுத்து, அன்றைய தினத்தில் பரிகாரம் செய்து எதிர்பார்த்த பலனை அடையுங்கள்.

 

 

Next Story

'ஜாதகம் பார்த்தும் டைவர்ஸ் ஆவது ஏன்?' - ஜோதிடத்தில் இருக்கும் நுட்பமான பிழைகள் குறித்து ஜோதிடர் விளக்கம் 

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

Astrologer MV Naranarayanan

 

பஞ்சாங்க கணிதக் கலாமணி எம்.வி.நரநாராயணன், நக்கீரனின் ஆன்மீக யூடியூப் தளமான 'ஓம் சரவண பவ'வில் ஜோதிடம் குறித்த பல்வேறு விஷயங்களைப் பேசிவருகிறார். அந்த வகையில், ஜாதகம், நல்ல நேரம் பார்த்தும் சில திருமணங்கள் விவாகரத்தில் முடிவது ஏன் என்ற தலைப்பில் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...    

 

"நல்லபடியாக ஜாதகம் பார்த்தும், நல்ல நேரத்தில் திருமணம் செய்தும் ஏன் சில திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன என்று சிலர் கேட்கிறார்கள். ஜாதகம் பார்த்து திருமணம் செய்தும் விவாகரத்து ஆகிறது என்றால் ஜாதகம் தவறானதா? இதற்கு என்ன காரணம்?

 

ஒருமுறை ஜாதகம் எழுதிவிட்டால் அது சரி என்று நாம் நம்பிவிடுகிறோம். அதில் சில தவறுகள் இருக்கவும் வாய்ப்புள்ளன. இன்றைக்கு நான் பார்க்கும் ஜாதகங்களில் 30-40 சதவிகித ஜாதகங்கள் தவறாகவே உள்ளன. நேரம் சரியாக குறிப்பிடப்படாததும், ஜாதகம் எழுதும்போது ஏற்படும் சில தவறுகளும் இதற்கு காரணம். சில ஜாதகங்கள் சரியாக எழுதப்பட்டாலும் சொல்லப்பட்ட நேரம் தவறாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. குழந்தை பிறந்த நேரம் என்று மருத்துவர்கள் கூறும் நேரத்தை வைத்து நாம் ஜாதகம் எழுதுகிறோம். ஆனால், அதிலும் சில நேரங்களில் சிக்கல் இருக்கிறது. 

 

ஒரு லக்கினம் இரண்டு மணிநேர கால அளவு கொண்டது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை லக்கினம் மாறிக்கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு 12 மணி முதல் 2 மணிவரை ஒரு லக்கினம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு குழந்தை 11.58க்கு பிறந்திருக்கும். ஆனால், எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு டாக்டர் வெளியே வந்து குழந்தை 12.05க்கு பிறந்தது என எழுதுகிறார் என்றால் அந்தக் குழந்தையின் லக்கினம் தவறாக மாறிவிடும். டாக்டர் சொன்ன அந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதினால் ஜாதகமே தவறாகிவிடும். லக்கின சந்தியில் பிறந்த குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் வருகிறது. இதனால் செவ்வாய் தோஷம், நாக தோஷம் மாதிரியான தோஷங்கள் எதுவும் இருக்கிறதா என்று அறுதியிட்டு கூறமுடியாத நிலையும் ஏற்படுகிறது. 

 

சில ஜோதிடர்கள் கணினி மூலம் ஜாதகம் எழுதும்போது விவரங்களை சரியாக குறிப்பிட தவறிவிடுகின்றனர். அதனாலும் ஜாதகம் தவறிவிடுகிறது. கையால் எழுதிய ஜாதகம், கணினியில் எழுதிய ஜாதகம் இரண்டையும் அருகருகே வைத்து பார்த்தால் எது சரியான ஜாதகம் என்று ஒரு தேர்ந்த ஜோதிடரால் கூறிவிட முடியும். 

 

திருமணம் சம்மந்தப்பட்ட எந்த செயல் செய்தாலும் முதலில் குலதெய்வத்தை வழிபட வேண்டும். குலதெய்வத்தை வணங்காமல் செய்யும் காரியங்கள் தவறாக போய்விடுகின்றன. திருமண தேதி குறிப்பதிலும் சிலர் தவறுகள் செய்கிறார்கள். பெண்ணின் நட்சத்திரத்திற்கு நல்ல தாராபலன் உள்ள நட்சத்திர நாளை தேர்வு செய்யவேண்டும். ஆணின் நட்சத்திரத்திற்கு தாராபலன் சிறிது குறைவாக இருக்கலாம். பெண்தான் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு வருவதால் அன்றைய தினம் அந்தப் பெண்ணின் நட்சத்திரத்திற்கு மிகமிக உகந்த நாளாக இருக்கவேண்டும். பெரும்பாலானோர் பஞ்சாங்கத்தை பார்த்துவிட்டு மட்டுமே திருமண தேதியை குறித்துவிடுகிறார்கள். எனவே நல்ல நேரம், நல்ல நட்சத்திரம் பார்த்து தேதி குறித்தால் திருமண வாழ்க்கையில் தவறுகள் வரவே வாய்ப்பு இருக்காது". இவ்வாறு ஜோதிடர் எம்.வி.நரநாராயணன் தெரிவித்தார்.