Skip to main content

அட்சய திரிதியை தங்கம் வாங்கும் நாளா?

Published on 17/04/2018 | Edited on 17/04/2018

ட்சய திரிதியை என்றாலே தங்கம் வாங்கும் நாள் என்பதாக பலரும் நம்புகிறார்கள். அட்சய திரிதியையில் செய்யும் செயல் ஒன்று பலவாகப் பெருகும் என்பது உண்மைதான். ஆனால் செல்வப் பெருக்கம் குறிக்கோளல்ல. புண்ணியத்தைப் பெருக்குவதே சிறந்தது.

பிறருக்கு உதவ நமக்கு செல்வம் தேவை. அதற்காக நாம் ஐஸ்வர்யக் கோல பூஜை செய்து பயனடையலாம்.

 ஐஸ்வர்யக் கோலம் என்பது செல்வத்தை அளிக்கும் கோலம் மட்டுமல்ல; அது கோலம் என்பதையும் தாண்டி ஸ்ரீசக்கரம் போன்ற ஒரு எந்திரம்! அதில் பல அற்புதமான தத்துவங்கள் அடங்கியுள்ளன. "ஐஸ்வர்யம் கொழிக்கும் வாழ்வை- அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய உன்னதமான வாழ்க்கையை உனக்குத் தருவேன்' என்று சக்தி தேவியே கூறும் வகையில் அமைந்துள்ளது ஐஸ்வர்யக் கோலம்.
 

Akshaya Tritiya


சக்தியின் ரூபமான லக்ஷ்மியை மட்டும் அல்ல; ஈஸ்வரனின் கோலத்தையும் நமக்குக் காட்டுகின்றது ஈ(ஐ)ஸ்வர்யக் கோலம். அந்தக் கோலத்திலுள்ள முக்கோண நாற்கோணங்கள் ஒன்றுக்குள் ஒன்று அடங்கியுள்ளதன் சூட்சுமம் அதுதான்.

ஐஸ்வர்யக் கோலத்தின் அமைப்பிலுள்ள ஈஸ்வர்யத்தன்மை என்ன?

மேலும், கீழும் (ஆகாயம் முதல் பாதாளம் வரை) சிவசக்தியாக ஈஸ்வரர் நின்றிருக்க, இருபுறமும் மற்ற இருமூர்த்திகளான பிரம்மாவும், விஷ்ணுவும் தத்தம் பத்தினிகளுடன் நிற்பதைக் குறிப்பது அது.

அவர்களைச் சுற்றி கங்கை, காவேரி, யமுனை, நர்மதா, கோதாவரி மற்றும் கிருஷ்ணா போன்ற புண்ணிய நதிகளின் தேவியர் பக்தர்களுக்கு சக்தியையும், செல்வ வளத்தையும், மனதில் தூய்மையையும் தந்தவண்ணம் உள்ளனர்.

சக்தியைக் காத்து நிற்கும் பன்னிரண்டு பரிவார யோகினிகள், தேவி சந்நிதியின் துவாரபாலர்களான தெய்வங்கள், காவல் தெய்வங்கள், காமேஸ்வரி, மோதினி, விமலா போன்ற எட்டு சித்திகளைக் கொண்ட எட்டு ஆவரண தேவதைகள், சந்திரன், சூரியன் ஆகியோரும் இந்தக் கோலத்தில் அடங்கியுள்ளனர்.

ஐஸ்வர்யக் கோலத்தைப் பிரார்த்திக்கும் முறை

பூஜையறையில் அல்லது வேறு எந்த இடத்திலும் ஐஸ்வர்யக் கோலப் படத்தை மாட்டி வைத்து, அதன்முன் நெய் விளக்கேற்றி வைத்து பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும். பௌர்ணமியில் வேண்டுதலைத் துவக்கி, அமாவாசை, அடுத்த பௌர்ணமி, மீண்டும் அடுத்த அமாவாசைக்கு முதல் நாளன்று வேண்டுதலை முடிக்கும்பொழுது 45 நாட்கள் ஆகிவிடும். வேண்டுதல் முடிந்த மறுநாள் முதல் தேய்பிறைபோல நம்முடைய பிரச்சினைகள் மறையத் துவங்கும்.

பௌர்ணமியன்று நம் பிரார்த்தனையை ஒரு காகிதத்தில் எழுதி அதை மடித்து, அந்தக் காகிதத்தினால் ஐஸ்வர்யக் கோலத்தை ஒருமுறை தொட்டுவிட்டு, சாமி பீடத்தில் ஒரு இடத்தில் வைத்துவிட வேண்டும்.

அதன்பின் ஒரு நெய்விளக்கை ஏற்றி, ஐஸ்வர்யக் கோலத்திற்குமுன் அதைக் காட்டிவிட்டு (கற்பூர தீபாராதனை போல) சாமியறையில் வைத்துவிட வேண்டும். ஹாலில் மாட்டப்பட்ட படத்திற்கும் அதைச் செய்யலாம்.

பிறகு நமக்குத் தெரிந்த லட்சுமி அஷ்டோத்திரம் போன்ற ஏதாவது ஒரு துதியைச் சொல்லி நம்மாலியன்ற ஒரு சிறிய நிவேதனத்தைச் செய்யலாம்.

தொடர்ந்து 45 நாட்களும் இவ்வாறே பிரார்த்தனை எழுதப்பட்டுள்ள  காகிதத்தால் ஐஸ்வர்யக் கோலத்தை ஒருமுறை தொட்டுவிட்டு, நெய் விளக்கை ஏற்றி அதை ஐஸ்வர்யக் கோலத்திற்குமுன் காட்டிவிட்டு வைத்து விடவேண்டும்.

அசௌகர்ய நாட்களிலும் முடியாத தினங்களிலும் வீட்டிலுள்ள வேறு எவர் வேண்டுமானாலும் அதைத் தொடர்ந்து செய்யலாம். ஆலயத்தில் அர்ச்சகர்கள் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்வது போன்றதே இதுவும். அட்சய திரிதியையன்று இப்பூஜையை செய்வது மிகவும் விசேஷம். அன்று மட்டுமோ அல்லது அன்றிலிருந்து தொடர்ந்து 45 நாட்களுக்குமோ செய்யலாம்.

Akshaya Tritiya


ஐஸ்வர்யக் கோலத்தினால் என்ன பயன்?

இந்தக் கோலத்தை பூஜையறையில் மட்டுமல்ல; வீட்டில் எங்கு வேண்டுமானாலும் மாட்டலாம்.

வீட்டில் செல்வம் பெருகும்; மகிழ்ச்சி தாண்டவமாடும்; மனம் அமைதி பெறும். காவல் தேவதைகள் தீயசக்தி களை வீட்டிற்குள் நுழையவிடாது.

இப்படி பல நன்மைகளும் அந்தக் கோலத்தை முறையாகப் பிரார்த்திப்பவர்களுக்குக் கிடைக்கும்.

இத்தனை தெய்வங்களும் (தேவதைகளும்) கொலுவிருக்கும் சக்திவாய்ந்த ஐஸ்வர்யக் கோலம், மாட்டக்கூடிய படமாக கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கிக் கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே செய்யலாம். ஐஸ்வர்யக் கோலம் ஸ்டிக்கராகவும் கிடைக்கிறது. அதை வாங்கி கெட்டியான அட்டையில் ஒட்டி அலங்கரித்தும் பூஜிக்கலாம்.

27 நட்சத்திரக்காரர்களுக்கு:

அட்சய திரிதியை தினத்தன்று 27 நட்சத்திரக் காரர்களும் வணங்கவேண்டிய கடவுள் விவரம்:

அஸ்வினி, மகம், மூலம்: விநாயகர்.

பரணி, பூரம், பூராடம்: ஸ்ரீரங்கநாதர்.

கிருத்திகை, உத்திரம், உத்திராடம்: ஆஞ்சனேயர்.

ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்: சிவன்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்: துர்க்கை.

திருவாதிரை, சுவாதி, சதயம்: பைரவர்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி: ராகவேந்திரர்.

பூசம், அனுஷம், உத்திரட் டாதி: சிவன்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி: பெருமாள்.

அட்சய திரிதியையன்று 27 நட்சத்திரக்காரர்களும் செய்யவேண்டிய தானங்கள்:

அஸ்வினி- கதம்ப சாதம் தானம்; ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.

பரணி- நெய் சாதம் தானம்; ஏழை நோயாளி களுக்கு உதவலாம்.

கிருத்திகை- சர்க்கரைப் பொங்கல் தானம்; பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.

ரோகிணி- பால் அல்லது பால் பாயசம் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.

மிருகசீரிஷம்- சாம்பார் சாதம் தானம்; உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.

திருவாதிரை- தயிர் சாதம் தானம்; ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவலாம்.

புனர்பூசம்- தயிர் சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.

பூசம்- மிளகு கலந்த சாதம் தானம்; கால்நடைகளுக்கு எள்ளுப்புண்ணாக்கு கொடுக்கலாம்.

ஆயில்யம்- வெண்பொங்கல் தானம்; 

பசுமாட்டுக்கு பச்சைப்பயிறைக் கொடுக்கலாம்.

மகம்- கதம்ப சாதம் தானம்; கால்நடைகளுக்கு கொள்ளு தானியம் கொடுக்கலாம்.

பூரம்- நெய் சாதம் தானம்; மனநோயாளிகளுக்கு உதவலாம்.

உத்திரம்- சர்க்கரைப் பொங்கல் தானம்; கால்நடைகளுக்கு கோதுமை அளிக்கலாம்.

ஹஸ்தம்- பால் பாயசம் தானம்; மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.

சித்திரை- துவரம்பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்; விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.

சுவாதி- உளுந்து வடை தானம்; வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கித் தரலாம்.

விசாகம்: தயிர்சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.

அனுஷம்: மிளகு கலந்த சாதம் தானம்;

வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு சாதம் கொடுக்கலாம்.

கேட்டை: வெண்பொங்கல் தானம்; பசு மாட்டுக்கு பச்சைப்பயிறு கொடுக்கலாம்.

மூலம்- கதம்ப சாதம் தானம்;

ஏழைகளுக்கு உதவலாம்.

பூராடம்- நெய் சாதம் தானம்; ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.

உத்திராடம்- சர்க்கரைப் பொங்கல் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.

திருவோணம்- சர்க்கரை கலந்த பால் தானம்;

வறுமையிலிருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.

அவிட்டம்- சாம்பார் சாதம் தானம்; கால்நடைகளுக்கு துவரை வாங்கித் தரலாம்.

சதயம்- உளுந்துப் பொடி சாதம் தானம்; கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் தரலாம்.

பூரட்டாதி- தயிர் சாதம் தானம்; பிறகுக்கு இயன்ற உதவி செய்யலாம்.

உத்திரட்டாதி- மிளகு சாதம் தானம்; ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.

ரேவதி- வெண் பொங்கல் பிரசாதம் தானம்

நல்லது; பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்கலாம்.

 

 

Next Story

ஊரடங்காவது, தடையாவது... 'அட்சய திருதியை' நாளில் சக்கைப் போடு போடும் தங்கம் விற்பனை... 

Published on 26/04/2020 | Edited on 26/04/2020


அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையில் ஒரு கிராம் நகையாவது எடுக்கணும் என்று மக்கள் நகைக் கடைகளுக்குச் செல்வார்கள். அன்றைய தினம் நகைக்கடைகள் கூட்டத்தால் நிரம்பி வழியும். இந்த வருடம் ஊரடங்கு காலமான 26.04.2020 ஞாயிறுக்கிழமையான இன்று அட்சய திருதியை வந்துள்ளது. ஊரடங்கு உத்தரவில் நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. நகைகளை நேரில் சென்று பார்த்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பெரிய நகைக் கடைகள் ஆன்லைன் மூலம் தங்களது கடையில் உள்ள நகைகளின் டிசைன்களை வெளியிட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளன. 
 


 

 

Gold



பெரும்பாலான நகைக்கடைகள் மாதாந்திர சீட்டு நடத்தி வருகின்றன. தங்களிடம் சீட்டு கட்டி வரும் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தவும், தங்களது நகைகளை விற்பனை செய்யவும் முடிவு செய்த அந்தக் கடை நிர்வாகம், தங்களிடம் சீட்டு கட்டி வரும் வாடிக்கையாளர்களின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு, ஒரு கிராம் விலை எவ்வளவு எனத் தெரிவித்து, எத்தனை கிராம் வேண்டும் என போனில் பேசி முடித்துவிட்டு, சரியாக இத்தனை மணிக்கு வாருங்கள் என்று தெரியப்படுத்துகிறது. அதன்படி வாடிக்கையாளர்களும் நகைக்கடைகளுக்குச் செல்கின்றனர். 
 

ஒரு கிராம் காயின் முதல் வாடிக்கையாளர்கள் விரும்பிய நகைகள் வரை விற்று வருகிறார்கள் நகைக்கடையினர். தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளிப் பொருட்களையும் வாங்கிச் செல்கிறார்கள். தங்கம் வியாபாரம் சென்னை, திருச்சி, கோவை, தஞ்சை எனத் தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் எந்தத் தடையும் இல்லாமல் நடக்கிறது. தகவல் அறிந்த சில அரசின் உயர் அதிகாரிகளையும் நகைக்கடைக்காரர்கள் சரி செய்துவிட்டார்களாம். பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர்களும் நகைக் கடைக்காரர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்களாம். 


-மகேஷ்