Skip to main content

சைவமும், வைணவமும் ஒன்று - களைகட்டிய ஆடி தபசு திருவிழா! 

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

Aadi Thabasu festival

 

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சைவமா, வைணவமா யார் பெரியவர் என்ற பிரச்சனை வந்ததாகவும், அதனை தடுத்தாட்கொள்ள ஆதிசிவனாகிய சிவபெருமான் தன் உடம்பில் ஒருபாதியை சங்கரனாகவும், மறுபாதி நாராயணராகவும் ஒரு சேரக் காட்சியளித்து, சைவமும், வைணவமும் ஒன்று என்று பக்தர்களை அமைதிப்படுத்தினார் என்றும் நம்பப்படுகிறது. 

 

அந்த அற்புதமான அரிய காட்சியை தனக்குக் காட்டியருள வேண்டும் என்று புன்னைவனத்தில் தவமிருந்த உமா தேவியரான பார்வதியம்மைக்குச் சிவபெருமான் காட்சியளித்தார். ஆடிமாத பௌர்ணமியுடன் கூடிய உத்திராட நட்சத்திரத்தில் சர்வேஸ்வரனின் இந்தக்காட்சி நடைபெற்றதால் ஆடித்தபசு என்றும் மங்காத சிறப்பானது.

 

இந்த அற்புத திருக்காட்சி புன்னையடி என அழைக்கப்படும் சங்கரன்கோவிலில் நடந்தாக நம்பப்படுகிறது. அதற்காக சங்கரநாராயணராக ஒரு சேர உருவெடுத்த சிவபெருமான் சங்கரநாராயணராகவும், பசுக்களுடன் தவமிருந்ததால் கோமதியம்பிகையாகி, சுவாமி சங்கரநாராயனர் கோவில் என பெரிய ஆலயமாக உருவெடுத்திருக்கிறது.

 

ஆண்டாண்டு காலம் ஆடி மாதம் 12ம் நாள் திருவிழாவாக நடக்கிற ஆடித்தபசு நிகழ்ச்சியின் பொருட்டு ஒவ்வொரு நாளும் அன்னை கோமதியம்பாள் தவக்கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. விழா நிகழ்ச்சியின் சிகரமாக ஆக. 10 அன்று அபிஷேக தீபாராதனைக்குப் பின்பு கோமதியம்பாள் தங்கச் சப்பரத்தில் பகல் 12.15 மணியளவில் ஆலயத்திலிருந்து புறப்பட்டு தபசு மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலை 4.30 மணியளவில் சுவாமி ரிஷப வாகனத்தில் புறப்பட்டு ரதவீதி எழுந்தருளினார். மாலை 6.30 மணியளவில் தபசு மண்டபத்தில் தவமிருக்கும் அன்னை கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராகக் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. மிகச் சிறப்பாக நடந்த ஆதிசிவனின் இந்த அற்புதமான அரியகாட்சியை பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி சிரத்தையோடு தரிசித்தனர்.

 

கொரோனாத் தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்த ஆடித்தபசு காட்சித் திருவிழா இந்த வருடம் வழக்கம் போல் லட்சக்கணக்கான பக்தர்களின் ஆரவாரத்தோடு நடந்தது மிகச் சிறப்பான அம்சமாகக் கருதப்படுகிறது.
 

 

 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.