Skip to main content

12 ராசியினர் வணங்க வேண்டிய குரு பகவான் திருத்தலங்கள்!

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

 12 shrines of Guru Bhagavan to be worshiped by Rasis!

 

பெரும்பாலோர் குருப்பெயர்ச்சியன்று சிவாலயங்களில் தெற்கு நோக்கியருளும் தட்சிணாமூர்த்திக்கு ஆராதனை செய்வார்கள். ஆனால், விவரம் தெரிந்தவர்கள் நவகிரகத் தொகுப்பில் வடதிசை நோக்கி எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, மஞ்சள் நிற மலர் மாலை சாற்றி, கொண்டைக்கடலை மாலையும் அணிவித்து அர்ச்சித்து வழிபடுவார்கள். பொதுவாக, நவகிரகங்களில் ஒன்றான தேவ குருவான வியாழனுக்கும், லோக குருவான தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் உண்டு. நவகிரக குரு, பிரம்மபுத்திரராகிய ஆங்கீரச மகரிஷியின் மைந்தனாவார்.

 

இவரை வாசஸ்பதி, பிரகஸ்பதி, தேவகுரு என்றழைப்பர். இவர் பொன்னாபரணங்கள் அணிந்தவர். யானை வாகனம் கொண்டவர். திருமணங்களைக் கூட்டி வைப்பவர். உயிர்களுக்கு யோகங்களையும் போகங்களையும் அளிக்கும் சக்தி கொண்டவர் என்கின்றன வேதநூல்கள். உலகம் தோன்றி நிலைப்பெற்று, அந்த உலகை மீண்டும் ஒடுங்கச் செய்யும் பேராற்றல் மிக்க சிவபெருமானின் வடிவமே தட்சிணாமூர்த்தி. இவர் காமனை வென்றவர். மகா யோகி. ஞானத்தை அருள்பவர். கல்லாடை புனைந்தவர். மௌனமாக இருந்தே உபதேசம் செய்பவர். எனவே, நவகிரக குருப்பெயர்ச்சிக்கும் தட்சிணாமூர்த்திக்கும் சம்பந்தமில்லையென்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. எனினும் குருப்பெயர்ச்சியன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் எந்தத் தவறுமில்லை  என்பர்.

 

ஆங்கீரச முனிவரின் மகனான பிரகஸ்பதி தன் தந்தையிடம் கல்வி கற்றாலும், மேன் மேலும் சிறந்து விளங்க அடர்ந்த வனப் பகுதிக்கு வந்து, அங்கு கோவில் கொண்டிருக்கும் இறைவனை வழிபட்டு, கடுந்தவத்தில் ஆழ்ந்தார். அவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் அவருக்குக் காட்சி தந்து நவகிரகப் பதவியை வழங்கி ஆசிர்வதித்தார். நவகிரகங்களில் ஒருவராகப் பதவி உயர்வு பெற்ற திருத்தலம் திட்டை. இத்தலம் தஞ்சாவூரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவன்: வசிஷ்டேஸ்வரர்; அம்பாள்: சுகந்த குந்தளாம்பிகை. இத்திருக்கோவிலில் இறைவனுக்கும் அம்பாள் சந்நிதிக்கும் நடுவே ராஜகுருவாக தனிச்சந்நிதி கொண்டிருக்கிறார் குரு பகவான்.

 

குருவான பிரகஸ்பதிக்கும் தோஷம் ஏற்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. அந்த நிலையில் அவற்றைப் போக்கிக்கொள்ள சில திருத்தலங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு பேறுபெற்றார் என்கின்றன புராணங்கள். ஆனால் தட்சிணாமூர்த்திக்கு எந்த தோஷமும் இல்லை. பிரகஸ்பதியின் தோஷங்கள் நீங்கிய தலங்கள் தென்குடித் திட்டை, ஆலங்குடி, திருச்செந்தூர், திருவதாயம் போன்றவையாகும்.

 

மேற்கண்ட தலங்களில் தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட புண்ணிய தலங்களில் ஒன்று திருவலிதாயம் எனப்படும் பாடி. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. இங்கு திருவலிதாய சுவாமி சமேத ஜகதாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இங்கு அருள் புரியும் குரு பகவானுக்கு மஞ்சளாடை சாற்றி, முல்லை மலர்களால் அர்ச்சித்து நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால், அனைத்து தோஷங்களும் நீங்கி சந்தோஷம் ஆட்கொள்ளும் என்று தலபுராணம் கூறுகிறது.

 

குருவின் திருவருளைப்பெற மேலும் பல திருத்தலங்கள் உள்ளன. அவற்றுள் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்திலுள்ள ஆலங்குடி திருத்தலமும் ஒன்று. இங்கு ஆபத்சகாயேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அம்பாள்: மட்டுவார் குழலியம்மை. இங்கு குரு தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். கும்பகோணத்திலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது இவ்வாலயம். ஒரே கோவிலில் ஏழு குருக்கள் எழுந்தருளியுள்ள திருத்தலம் திருச்சியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள உத்தமர் கோவில் ஆகும். இது ‘சப்தகுருத்தலம்' என்று போற்றப்படுகிறது. தேவகுருவான பிரகஸ்பதி, அசுர குருவான சுக்கிராச்சாரியார், தந்தைக்கு உபதேசித்த ஞானகுரு சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு பிரம்மதேவன், விஷ்ணு குரு வரதராஜப் பெருமாள், சக்திகுரு சௌந்தர்ய நாயகி, சிவகுரு தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஒருங்கே அருள்பாலிக்கும் உத்தமர் கோவிலில் எழுந்தருளியுள்ள தெய்வங்களை ஒருமுறை தரிசித்தாலே கோடி புண்ணியம் கிட்டும். குருப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல பலன்கள் கிட்டுமென்று ஞானநூல்கள் கூறுகின்றன.

 

குருபலன் வேண்டும் என்பவர்கள்: மேஷ ராசிக்காரர்கள் ஆலங்குடி திருத்தலத்திற்குச் சென்று குரு பகவானை தரிசிக்கலாம்.

 

ரிஷப ராசியினர் தென் குடித் திட்டைக்கும்;

 

மிதுன ராசியினர் அரக்கோணம் அருகே தக்கோலம் தலத்திற்கும்;

 

கடக ராசியினர் இலம்பயங்கோட்டூர் தலத்திற்கும்;

 

சிம்ம ராசியினர் திருப்புலிவனத்துக்கும்;

 

கன்னி ராசியினர் பாடி (சென்னை) தலத்திற்கும்;

 

துலாம் ராசியினர் பெரிய பாளையம் அருகே சுருட்டப்பள்ளிக்கும்;

 

விருச்சிக ராசியினர் புளியரை (தென்காசி செங்கோட்டை அருகில்) தலத்துக்கும்;

 

தனுசு ராசியினர் உத்தமர்கோவிலுக்கும்;

 

மகர ராசியினர் கோவிந்தவாடி (அகரம்) தலத்துக்கும்;

 

கும்ப ராசியினர் திருவொற்றியூருக்கும்;

 

மீன ராசியினர் மயிலை தட்சிணாமூர்த்தி (கபாலீஸ்வரர் கோவில்) திருக்கோவிலுக்கும் சென்று வழிபட சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

 

வாய்ப்பில்லாதவர்கள் தாங்கள் வசிக்கும் ஊரிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று நவகிரகத் தொகுப்பில் வடக்கு திசை நோக்கியிருக்கும் குரு பகவானையும், தென்திசையில் தனிச் சந்நிதியில் அருளும் ஆதிகுருவான தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டாலும் பேறுகள் பல பெற்று சுகமுடன் வாழலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

 

ஸ்ரீ குரு காயத்ரி

‘ரிஷபத் வஜாய வித்மஹே

க்ருணிஹஸ்தாய தீமஹி

தந்நோ குரு ப்ரசோதயாத்.'

குரு காயத்ரி மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

 


 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.