Youths threatened police with sickles in tirunelveli
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காளிப்பாளரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் அம்மாவட்டத்தில் தொடர்ச்சியாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த சமயத்தில், அவ்வழியாக வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களை காவலர்கள் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்துக் காட்டி காவலர்களை மிரட்டியுள்ளனர். மேலும், ‘இது போன்று எங்களிடம் கேள்வியெல்லாம் கேட்க கூடாது. அப்படி கேட்டால் செதில் செதிலாக செதுக்கிவிடுவோம்’ என காவலர்களை அச்சுறுத்தியுள்ளனர். உடனே காவலர்கள், அவர்களை மடக்கி பிடித்து அரிவாளை பறிமுதல் செய்ததுடன், மூவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர், அவர்களின் மீது ஆயுதங்களை கொண்டு கொலை மிரட்டல் விடுத்தது, காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது என பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் மூவரும் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் குறிச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன், மாலை மற்றும் முத்துராமன் என்பது தெரியவந்துள்ளது. குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் இளைஞர்கள் வீச்சரிவாளை கொண்டு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us