புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒத்தக்கடையில் கடந்த வாரம் 6 இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் மதுபோதையில் கடைகளில் இருந்த பதாகைகள் மற்றும் பொருட்களை சாலைக்கு இழுத்து வந்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். "ஒத்தக்கடைன்னா நாங்கதான்" என்று வீர வசனம் பேசிக்கொண்டு வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியது சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அறந்தாங்கி காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, ஒத்தக்கடை சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் உடனே 9498181223 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் மறைவதற்குள், புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை கிராமங்களில் கடந்த சில நாட்களாக மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது. கோட்டைப்பட்டினம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடைபெற்றபோது, சில இளைஞர்கள் மதுபோதையில் மதுப்பாட்டில்களை தலையில் வைத்துக்கொண்டு சினிமா பாடல்களுக்கு ஏற்ப குத்தாட்டம் ஆடியுள்ளனர். சாலையில் இளைஞர்களின் குத்தாட்டம் நடக்கும்போது, சிலர் வாகனங்களில் தடுமாறி சென்றனர். இதனை சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். வீடியோ எடுப்பதைப் பார்த்து, சில இளைஞர்கள் கேமரா முன்பு வந்து ஆடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.