ஈரோடு வீரப்பன்சத்திரம் எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மூத்த மகன் பரமேஸ்வரன் (25). பரமேஸ்வரன் வைரபாளையத்தில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்று மீன்பிடிப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மதியம் பரமேஸ்வரன் சத்து மாவு மற்றும் மீன் பிடிக்கும் தூண்டில் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வைர பாளையம் காவிரி ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். 

Advertisment

இரவு ஆகியும் பரமேஸ்வரன் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பரமேஸ்வரனை தேடி வைர பாளையம் காவிரி ஆற்றுக்கு நள்ளிரவு வந்தனர். அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த அவரது நண்பர்களான கார்த்தி மற்றும் லோகு உடன் சேர்ந்து பரமேஸ்வரனை தேடிப் பார்த்தனர். அப்போது ஆற்றங்கரையோரம் சத்துமாவு மற்றும் பரமேஸ்வரன் செருப்பு இருந்தது. மீன் பிடிக்க பயன்படுத்திய நரம்பு ஆற்றில் கிடந்து உள்ளது. அந்த நரம்பு சென்ற வழியில் பார்த்தபோது பரமேஸ்வரன் அங்குள்ள ஆற்றுப்பகுதியில் தண்ணீரில் மூழ்கி மூச்சு பேச்சின்றி மயங்கி நிலையில் கிடந்தார்.

Advertisment

உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்து சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரமேஸ்வரனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.