திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்துள்ள பலவூர் சிதம்பரபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 31). இவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவர் வேலைக்குச் சென்ற இடத்தில் தெருநாய் ஒன்று கடித்துள்ளது. இதற்கு முறையாகச் சிகிச்சை எடுக்காமல் உதாசீனப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஐயப்பனுக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இதனையடுத்து சிகிச்சை பெறுவதற்காகக் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஐயப்பனுக்கு ரேபிஸ் நோய்த் தொற்று பாதிப்பு இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ரேபிஸ் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஐயப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஐயப்பன் தனது மனைவியையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் அவரது மனைவிக்கும் ரேபிஸ் நோய் தடுப்பூசி அளித்து சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Follow Us