ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சிவகிரி அம்மன் கோவில் வரை என் 38 என்ற அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சம்பவதன்று அதே வழித்தடத்தில் இயங்கிய அந்த அரசு பேருந்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது, அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் போதை ஆசாமி ஒருவர் ஏறியுள்ளார். பேருந்தில் ஏறியது முதலே அந்த போதை ஆசாமி சக பயணிகளிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பேருந்து மூலப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்த போதை ஆசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, ஒரு பயணியை வெட்டியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். அதன்பிறகு, அந்த போதை ஆசாமியைப் பிடித்து கட்டிவைத்த அவர்கள், பேருந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளனர்.
இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போதை ஆசாமியை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பயணிக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டிருப்பதால், உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், போதையில் பேருந்தில் தகராறில் ஈடுபட்ட நபரின் பெயர் பூபதி என்றும், அவர் மீது ஏற்கனவே தாலுகா காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. மேலும், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரை, போதை ஆசாமி பூபதி இரண்டு இடங்களில் வெட்டிவிட்டு, அதன்பிறகுதான் அவர் பேருந்தில் ஏறி பயணித்தது தெரியவந்துள்ளது. காயமடைந்த பெருமாளும் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈரோட்டில் தலைக்கேறிய மதுபோதையில் இரு நபர்களை வெட்டிய சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us