கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியராக சுரேஷ் குமார் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கென மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட அரசு வாகனத்தை நாள்தோறும் பயன்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியருக்கென ஒதுக்கப்பட்ட அரசு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. சிந்தலகுப்பம் கிராமத்தைச் சார்ந்த 30 வயதுடைய வாலிபர் தேவநாதன் என்பவர் அரசு அலுவலகம் முன்பு நிறுத்தி வந்திருந்த வாகனத்தின் மீது அமர்ந்தபடி சினிமா வசனத்திற்கு ஏற்றவாறு செய்கைக்காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த ரீல்ஸ் வீடியோ வாட்ஸப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பட்டதாரி இளைஞர் தேவநாதன் மீது வழக்குப் பதிவு செய்த சிப்காட் காவல் நிலைய போலீசார் தேவநாதனை வலைவீசி தேடி வருகின்றனர்.
ரீல்ஸ் மோகத்தில் பட்டதாரி இளைஞரின் செயல் அவரின் வாழ்வில் ஒரு கரும்புள்ளியைப் பதித்துள்ளது என்பதைக் குறிப்பிடத்தக்கது.