திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், கன்னியாகுமரியில் உள்ள ஆயுர்வேதக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தார். இதற்காக அவர், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். அவரது அறையில் செல்போன் இணைப்பு கிடைக்காததால், பக்கத்து அறைக்குச் சென்றார். அப்போது அந்த அறையில் தங்கியிருந்த நபர், திடீரென மாணவியைக் கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

Advertisment


இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி உடனடியாக கூச்சலிட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சுகேந்திரன் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் சுகேந்திரனைக் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.