வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவாகியது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முத்துவேல், அவரது மனைவி கீதா, மகள்கள் ரேணுகா மற்றும் கனிமொழி ஆகியோர் வசித்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் இவர்கள் வசித்து வந்த வீடு மழையால் சேதம் அடைந்ததால் முன்னெச்சரிக்கையாக, முத்துவேல் குடும்பத்தினர் அவரது பக்கத்து வீட்டில் தங்கி உறங்கியுள்ளனர். இந்நிலையில் தொடர் கனமழையால் அவரது வீடு இடிந்து பக்கத்து வீட்டின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது முத்துவேல், அவரது மனைவி கீதா, மகள்கள் ரேணுகா மற்றும் கனிமொழி மீது சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் ரேணுகா தேவி (வயது 20) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Follow Us