உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது ராஜ்மதி என்ற இளம்பெண், கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வந்தார். அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ராஜ்மதிக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதன் காரணமாக, மாப்பிள்ளை வீட்டார் அடிக்கடி பெண் பார்க்க ராஜ்மதியின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாக இருந்தது.
பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைகள், தங்கள் வீட்டிற்குச் சென்று உறவினர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு முடிவு தெரிவிப்பதாகக் கூறி சென்றுவிடுவர். ஆனால், அவர்கள் யாரும் மீண்டும் ராஜ்மதியின் வீட்டைத் தொடர்பு கொள்ளவில்லையாம். இப்படி பல ஆண்டுகளாக நடந்து வந்ததால், ராஜ்மதி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த ராஜ்மதி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ராஜ்மதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.