முன்னாள் காதலியின் குடும்பத்தினரால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நபர், ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

காதலியின் குடும்பத்தினர் 22 வயது இளைஞரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் போட்டு உடலை இரண்டு துண்டாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயதான அம்ரேந்திர சிங். கடந்த 16ஆம் தேதி அதிகாலை மெதினிநகரில் உள்ள ஜோகியாஹி ரயில் தண்டவாளம் அருகே அம்ரேந்திர சிங்கின் உடல் சிதைந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அம்ரேந்திர சிங்கின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடக்கத்தில் விபத்து என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், அம்ரேந்தர் சிங் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் புகார் அளிக்கவே, அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

அம்ரேந்திர் சிங் 5 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவர அதை கடுமையாக எதிர்த்துள்ளனர். இதனால், கடந்த 2022ஆம் ஆண்டு அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில், தனது காதலியை பார்ப்பதற்காக  கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இரவு அம்ரேந்தர் சிங் சென்றுள்ளார். அப்போது பெண்ணின் குடும்பத்தினர், அவரைப் பிடித்து வீட்டிற்குள் இழுத்துச் சென்று கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதன் பின்னர், இந்த கொலையை விபத்து போல் காண்பிக்க ரயில் தண்டவாளத்தில் அவரது உடலை விட்டுச் சென்றுள்ளனர். அங்கு வந்த ரயில், அம்ரேந்தர் சிங்கின் உடல் மீது ஏறிச் சென்றுள்ளது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.