ஈரோடு மாவட்டம், கடம்பூர் அருகே திருடி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (36). அவரது மனைவி சுகன்யா. சிவகுமார் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிவகுமார் மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, வழக்கம்போல் சுகன்யா வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் சிவகுமார் மட்டும் இருந்தார். வேலை முடிந்து சுகன்யா வீட்டிற்கு வந்தபோது, கணவர் வீட்டில் இல்லாததால், அவரைத் தேடி உறவினர் வீட்டிற்குச் சென்றார். அங்கும் கணவர் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.இந்நிலையில், கிட்டாம்பாளையம் ரோட்டில் ஒரு புளியமரத்தில் சிவகுமார் தூக்குப்போட்டு தொங்கும் நிலையில் இருப்பதைக் கண்டு சுகன்யா அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர், சிவகுமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து கடம்பூர் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.