இந்து முன்னணி அமைப்பின் சார்பில் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே பெரியார், அண்ணா குறித்து சர்ச்சைக்குள்ளான வீடியோ ஒளிபரப்பட்டது. இது சர்ச்சையாகிய நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பங்கேற்றிருப்பது விவாதப் பொருளாக மாறியது.

பெரியார், அண்ணா குறித்து ஒளிபரப்பப்பட்ட வீடியோவிற்கு அதிமுக கண்டம் தெரிவித்திருந்தது. அம்மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டு விளக்கத்தையும் கண்டனத்தையும் கொடுத்திருந்தார். அதுபோல இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, 'பெரியார், அண்ணா இவ்வளவு இழிவுபடுத்தப்பட்ட பிறகும் அதிமுக, பாஜக கூட்டணியில் இருப்பது அவமானம்' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கனிமொழியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''கனிமொழியை பொறுத்தமட்டில் அவர்கள் பேசுவது ஒன்றையும் நடத்துவதில்லை. நான் அவரிடம் மறுபடியும் கேட்கிறேன் டாஸ்மாக் கடையை நீக்குவோம் என்றும், தமிழ்நாட்டில் விதவைகள் அதிகமாக இருக்கிறார்கள் என்றும் சொன்னவர் கனிமொழி. ஏன் இன்னும் டாஸ்மாக் கடைகளை மூடவில்லை.

இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தீர்கள். தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்த காங்கிரஸுடன்  கூட்டணி வைத்திருக்கீர்கள். ஏற்கனவே அதற்கு பதில் சொல்லி ஆகிவிட்டது. யாரையும் இழிவு படுத்த வேண்டிய சூழ்நிலையில் இல்லை. ஒரு கொள்கை ரீதியாக ஒரு படம் காண்பிக்கப்பட்டது. அதில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என்பதை தெளிவுபடுத்திவிட்ட பின்னரும் கனிமொழி, ஸ்டாலின் ஆகிய எல்லோரின் பயமும் என்னவென்றால் திமுக கூட்டணியை விட அதிமுக-பாஜக கூட்டணி மக்களிடம் பலம் பெற்று வருகிறது. இதை குறைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் சொல்கிறார்கள். இதில் நீங்கள் வெற்றி பெறப் போவதில்லை. தேர்தலிலும் வெற்றி பெறப் போவதில்லை' என்றார்.