Skip to main content

வரலாற்றிலேயே முதன்முறையாக தங்கள் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பெண் ஒருவரை நியமித்த லெபனான்...

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

லெபனான் நாட்டில் மோசமான அரசியல் சூழல் நிலவி வந்த நிலையில், அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்த சாத் ஹரிரி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவி விலகினார். அதனையடுத்து புதிய பிரதமராக ஹசன் டயப்பை நியமித்தார் அந்நாட்டு அதிபர் மைக்கேல் அவுன்.

 

Zeina Akar is the first female defense minister of lebanon

 

 

ஹஸன் டயப் தலைமையிலான அரசு ஜனவரி 21 அன்று பொறுப்பேற்றுக்கொண்டது. இதில் முதன்முறையாக 6 பெண்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் 30 அமைச்சர்கள் அங்கம் வகித்து வந்த சூழலில், இந்த அரசாங்கத்தில் 20 அமைச்சர்கள் மட்டுமே பொறுப்பேற்றுள்ளனர். மொத்தமுள்ள 6 பெண் அமைச்சர்களில் ஜெய்னா அகர் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் அந்நாட்டின் துணை பிரதமராகவும் பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் வரலாற்றிலேயே ஒரு பெண் முதன்முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை ஆகும். அதேபோல லெபனான் நாட்டின் மக்கள்தொகையில் நான்கு சதவீதம் மட்டுமே உள்ள அர்மேனியாரான வார்டின் ஓஹானியன், லெபனானின் இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் லெபனான் நாட்டில் அமைச்சராக பொறுப்பேற்கும் முதல் அர்மேனியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லெபனானில் இருந்து திடீர் தாக்குதல்; இஸ்ரேல் பதிலடி - மத்திய கிழக்கில் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rocket attack from Lebanon towards Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர்ச்சூழல் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை சமாளிப்பதற்கு இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர்  இன்று இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்ட நிலையில் அதனை இஸ்ரேல் நடு வானிலேயே தடுத்து தாக்கி அழித்தது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறி வைத்து, இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் கொல்லப்பட்ட மற்றும் பதிப்பு நிலவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் எந்த மாதிரியான பதிலடித் தாக்குதலை கொடுக்க போகிறார்கள் என்று மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Next Story

“இஸ்ரேலுடன் போரை விரும்பவில்லை” - லெபனான்

Published on 24/10/2023 | Edited on 24/10/2023

 

 Lebanon says it does not want conflict with Israel

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 1 வாரத்திற்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது.

 

இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அங்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இது மட்டுமின்றி அண்டை நாடான சிரியா மீது ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 7 ஆம்  தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிரியா நாட்டிலிருந்தும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று சிரியாவின் டமாஸ்கஸ் விமான நிலையம் மற்றும் அலொப்போ விமான நிலையம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. 

 

அதேபோன்று இஸ்ரேலின் மற்றொரு முனையில் உள்ள லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராகச் சண்டையிட்டு வருகின்றனர். இதன் காரணமாக, லெபனான் எல்லையில் இருக்கும் 1 லட்சம் இஸ்ரேல் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹிஸ்புல்லா இஸ்ரேலுடன் போரிட நினைத்தால் அது இரண்டாவது லெபனான் போராக இருக்கும் என பிரதமர் நெதன்யாகு எச்சரித்திருந்த நிலையில், தற்போது லெபனான், இஸ்ரேலுடன் போரை விரும்பவில்லை என லெபனான் அமைச்சர் ஜியாத் மக்காரி தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக ரஷ்ய அரசு ஊடகத்திடம் பேசிய ஜியாத் மக்காரி, “இஸ்ரேல் ஒருபோதும் அச்சுறுத்தல்களை குறைக்கவில்லை; ஒவ்வொரு வாரமும் இஸ்ரேல் அரசியல் தலைவர்களோ, ராணுவ அதிகாரிகளோ லெபனானை அச்சுறுத்தி வருகின்றனர். எங்கள் நாட்டை கற்காலத்திற்கு கொண்டு செல்ல இஸ்ரேல் முயற்சித்து வருகிறது.  ஹிஸ்புல்லா அமைப்பின் மீது நீங்கள் சண்டை  நடத்திக் கொள்ளுங்கள்; ஆனால் லெபனான் போரை விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார். மேலும், அதுமட்டுமில்லாமல் இஸ்ரேல் பிரதமர் தனது சொந்த காரணத்திற்காக போரை விரும்புவதாக குற்றம் சாட்டியுள்ளார்.