உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்திருந்த சிடேட்சு வடானபி உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
112 வயதான ஜப்பானை சேர்ந்த சிடேட்சு வடானபி ஜப்பானில் 1907-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நீகாடா நகரில் பிறந்தார். தைவானில் பணியாற்றிய வடானபி, மிட்சூ என்பவரை திருமணம் செய்துகொண்டு தைவானில் வாழ்ந்து வந்தார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் தனது சொந்த ஊருக்கு திரும்பிய வடானபி இரண்டு வாரங்களுக்கு முன்தான் உலகில் வாழும் அதிக வயதான ஆண் என்ற கின்னஸ் சாதனையை படைத்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்த சிடேட்சு, நேற்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். “யார் மீதும் கோபப்படாமல், புன்னகையுடன் இருப்பதுதான்” தன்னுடைய நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.