Skip to main content

கோவாக்சினுக்கு அவசரகால அனுமதி குறித்து எப்போது முடிவு? - தேதியை அறிவித்த உலக சுகாதார நிறுவனம்!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

who

 

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழுமையான பயன்பாட்டில் உள்ளன. அதேசமயம் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு, பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி சமர்ப்பித்தது. இதனையடுத்து விரைவில் கோவாக்சினுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

இருப்பினும், கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகால அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுப்பது தாமதமாகிவந்தது. இந்தநிலையில், கடந்த ஐந்தாம் தேதி கூடிய உலக சுகாதார நிறுவனத்தின் 'நோயெதிர்ப்பு தொடர்பான நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழு' கூட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இருப்பினும் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தகவல் வெளியாகவில்லை.

 

இந்தநிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, வரும் 26ஆம் தேதி கூடி கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர் சௌமியா ஸ்வாமிநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அங்கீகாரத்திற்காக விண்ணப்பிக்கப்படும் தடுப்பூசிகளை நோயெதிர்ப்பு தொடர்பான நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழுவும், தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும் ஆய்வு செய்யும். அதன்பிறகே அவசரகால அங்கீகாரம் வழங்கப்படும். ஏற்கனவே  நோயெதிர்ப்பு தொடர்பான நிபுணர்களின் மூலோபாய ஆலோசனை குழு கோவாக்சின் குறித்து ஆய்வு செய்துவிட்டதால், தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டத்திற்குப் பிறகு கோவாக்சினுக்கு அவசரகால அனுமதி வழங்குவது தொடர்பான தனது முடிவை உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Permission granted to covaxin vaccine to 6 to 12 year olds

 

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  

 

6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என இந்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், 6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் 6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 

 

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.