சிரியாவின் மேற்கு இட்லிப்பில் உள்ள அரிஹா என்ற இடத்தில் கிளர்ச்சிப்படைக்கு எதிராக அரசு ஆதரவு ரஷ்ய படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாவது மாடியில் வசித்து வந்த குடும்பம் தான் இந்த புகைப்படத்தில் இருப்பது.
5 வயதான சிறுமி ரிஹாம், 7 மாத குழந்தையான துகா மற்றும் அவர்களது பெற்றோர் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலில் அவர்களின் வீடு இடிந்து விழுந்துள்ளது. இதில் வான்வழி தாக்குதலின் போதே குழந்தைகளின் தாய் உயிரிழந்துள்ளார். அப்போது சுவர்கள் இடிந்து 7 மாத குழந்தையான துகா வீட்டிலிருந்து வெளியே விழும் நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்த ஐந்து வயதான ரிஹாம் தனது தங்கையின் உடையை பிடித்து அவரை காப்பாற்றியுள்ளார்.
நீண்ட நேரம் அந்த இடிபாடுகளுக்குள் சிக்கியபடியே தனது தங்கையை பிடித்து வைத்திருந்துள்ளார். இடிபாடுகளில் இருந்த இவர்களது தந்தை, தனது மகளின் அருகே செல்ல முடியாமல் மேலே நின்றி கதறி அழுதுள்ளார். அவர் அங்கு நின்று பரிதவித்துக் கதறும் தந்தையின் காட்சிகள் காண்போரையும் கலங்க வைத்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த 5 வயது சிறுமி மீட்கப்பட்டு, அவரது கையில் இருந்த 7 மாத குழந்தை காப்பாற்றப்பட்டது.
இதில் தனது தங்கையை காப்பாற்றிய ரிஹாம் உயிரிழந்துள்ளார். 7 மாத குழந்தையான துகாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தனது உயிரை கொடுத்து தனது தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமியின் இந்த செயல் பலரையும் மனமுருக வைத்துள்ளது.