Skip to main content

குடியரசுக் கட்சியின் ஒரு ஓட்டு; வரலாறு படைக்கப்போகும் இந்திய வம்சாவளிப் பெண்! 

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

vanita gupta

 

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற அவர், பல்வேறு பொறுப்புகளுக்கு அதிகாரிகளைப் பரிந்துரைத்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

 

அந்த வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வனிதா குப்தாவை, ஜோ பைடன் இணை அட்டர்னி ஜெனரல் பதவிக்குப் பரிந்துரைத்திருந்தார். அதிபரின் பரிந்துரையை, அமெரிக்காவின் செனட் சபை அங்கீகரிக்க வேண்டும். இல்லையென்றால் பரிந்துரை தோல்வியில் முடியும் என்ற நிலையில், அதற்கான வாக்கெடுப்பு செனட்டில் நடைபெற்றது.

 

அமெரிக்க செனட்டில் குடியரசுக் கட்சி மற்றும் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி இரண்டிற்குமே 50 உறுப்பினர்கள் இருந்ததால், வனிதா குப்தா தேர்வாவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதேசமயம் வாக்கெடுப்பு சமனில் முடிந்ததால், வாக்களிப்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் கமலா ஹாரிஸும் செனட் அவையில் இருந்தார்.

 

இந்த வாக்கெடுப்பின்போது வனிதா குப்தாவிற்கு குடியரசுக் கட்சியினர் எதிராக வாக்களித்தாலும், ஒரே ஒரு குடியரசுக் கட்சி உறுப்பினர் வனிதா குப்தாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். இதனையடுத்து வனிதா குப்தாவிற்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து வனிதா குப்தாவை இணை அட்டர்னி ஜெனரலாக நியமிக்கும் பரிந்துரை வெற்றிபெற்றது.

 

இதனையடுத்து வனிதா குப்தா இணை அட்டர்னி ஜெனரலாகப் பதவி ஏற்கவுள்ளார். இந்தப் பதவி அமெரிக்க நீதித் துறையில் மூன்றாவது உயர்ந்த பதவியாகும். மேலும் இந்தப் பதவியேற்பதன் மூலம், இணை அட்டர்னி ஜெனரலாகும் முதல் இந்திய அமெரிக்கர், முதல் பெண் மற்றும் முதல் சிவில் உரிமை வழக்கறிஞர் என்ற வரலாற்றுப் பெருமைகளை அடையவுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்