Skip to main content

நேட்டோ நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

US President Joe Biden to hold talks with NATO leaders

 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த வாரம் ஐரோப்பா சென்று நேட்டோ நாடுகளின் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். 

 

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் நேரடியாகப் பங்கேற்கவில்லை. எனினும், உக்ரைன் நாட்டிற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் பொருளாதார உதவிகளை நேட்டோ நாடுகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில், மார்ச் மாதம் 24- ஆம் தேதி நேட்டோ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்பார் என்று நேட்டோ அமைப்பின் செயலாளர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலினால் ஏற்படும் விளைவுகள், உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவது, நேட்டோ படைகளை வலுப்படுத்துவது குறித்து பேசப்படும் என்று ஜேன்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்திருக்கிறார். 

 

இந்த சூழலில், போலந்து, செக் குடியரசு, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவிற்கு சென்றுள்ளனர். ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், பாதுகாப்பு அபாயத்தை மீறி இந்த பயணத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

 

தங்கள் நாட்டிற்கு ஆதரவு தருமாறு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அண்மையில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முக்கிய தலைவரைக் கொன்ற புதின்? நெருக்கடியில் ரஷ்யா!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
US President Joe Biden said that Putin responsible for Navalny passed away

ரஷ்யாவில் அதிபர் புதின் அரசின் மீது எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். 47 வயதாகும் அலெக்ஸி நவல்னி எதிர்கால ரஷ்யா என்ற புதிய கட்சியை தொடங்கி புதினைத் தொடர்ந்து விமர்சனம் செய்தும், ரஷ்ய மாகாணங்களில் நடைபெறும் ஊழல் குறித்தும் தன்னுடைய இணையப் பக்கத்தில் எழுதி வந்தார். இதனால் ரஷ்ய மக்களிடையே பிரபலமானார். கடந்த அதிபர் தேர்தலில் புதினுக்கு எதிராக அலெக்ஸி நவல்னி போட்டியிட முடிவு செய்திருந்தார். ஆனால் புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் தேர்தலின் போது புதினுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். 

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும் போது அலெக்ஸி நவல்னி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் வைக்கப்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை ஜெர்மனி அரசு உறுதி செய்ததோடு, விஷம் வைக்கப்பட்டதில் ரஷ்ய அரசுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக ரஷ்ய அரசு மறுத்தது. 

இதனைத் தொடர்ந்து 5 மாத சிகிச்சைக்குப் பிறகு ரஷ்யா திரும்பிய அலெக்ஸி நவல்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலெக்ஸி நவல்னிக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி அவற்றிற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு மேலும் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள ஆர்க்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலெக்ஸி நவல்னி உயிரிழந்துள்ளார். சமீப காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் நடைபயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்து சிறையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அவரது இறப்பிற்கான காரணம் வெளியிடப்படவில்லை. அலெக்ஸி நவல்னியின் மனைவி, புதின் தான் தனது கணவர் இறப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு நீதிகேட்டு பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டு கொலை செய்துவிட்டார். இது ரஷ்ய அரசின் எதேச்சதிகாரப் போக்கு” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

US President Joe Biden said that Putin responsible for Navalny passed away

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “அலெக்ஸி நவல்னியின் மரணம் குறித்து நான் உண்மையில் ஆச்சரியம் அடையவில்லை. புதின் அரசாங்கம் செய்யும் ஊழல் மற்றும் அனைத்து மோசமான செயல்களையும் அவர் தைரியமாக எதிர்த்தார். பதிலுக்கு, புதின் அவருக்கு விஷம் கொடுத்தார், அவரைக் கைது செய்தார். புதினால் இட்டுக்கட்டப்பட்ட குற்றங்களுக்காக நவல்னியின் மீது வழக்கு தொடர்ந்தார். தனிமைப்படுத்தப்பட்ட அவரைச் சிறையில் அடைத்தார்.  அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு புதின் தான் பொறுப்பு” என தெரிவித்துள்ளார். அலெக்ஸியின் மரணம் தற்போது புதினின் ரஷ்ய அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அதிபர் தேர்தல்; எலான் மஸ்க்கின் கருத்தால் பரபரப்பு!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Elon Musk says he can't even imagine voting for Joe Biden

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் டெஸ்லா நிறுவனரும், உலகப் பணக்காரருமான எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராகப் பதிவிட்டுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் மின்சார வாகன உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் எலான் மஸ்க் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் எலான் மஸ்க் தனது சமூக வலைத்தளத்தில், ‘இந்த முறை ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் எலான் மஸ்கின் இந்த கருத்து ட்ரம்ப்பிற்கு ஆதரவாக இருக்கும் என அமெரிக்க அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.