Skip to main content

"ஸ்பைவேர் விற்பனையை நிறுத்துங்கள்!" - உலகநாடுகளுக்கு ஐ.நா கோரிக்கை! 

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

unhrc

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைப்பேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

 

இந்த விவகாரம் தொடர்பாக ஃபிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன. இந்தநிலையில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை நிபுணா் குழு, பெகாசஸ் விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

ஐ.நா. மனித உரிமை நிபுணா் குழு அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, "கண்காணிப்பு தொழில்நுட்பத்தையும், வர்த்தகத் துறையையும் மனித உரிமைகளற்ற பகுதிகளாக செயல்பட அனுமதிப்பது ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது. இத்தகைய நடைமுறைகள் கருத்துச் சுதந்திரம், தனியுரிமை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமைகளை மீறுகின்றன. நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. பத்திரிகை சுதந்திரத்தை காயப்படுத்துவதோடு ஜனநாயகத்தையும் வலுவிழக்கச் செய்கின்றன. மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான சர்வதேச விதிகளை நாடுகள் ஏற்றுக்கொள்ளாதவரை, உளவு மென்பொருட்களின் விற்பனையை நாடுகள் நிறுத்தி வைக்கவேண்டும். என்.எஸ்.ஓ குரூப், தங்களது பெகாஸஸ் உளவு மென்பொருளை பயன்படுத்துவதால், மனித உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்ததா என்பது தெரியவில்லை. அந்த நிறுவனம் தனது விசாரணையில் கண்டறிந்த தகவல்களை வெளியிட வேண்டும். மனித உரிமை மீறல்களுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் எனக் கருதப்படும் நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு, என்.எஸ்.ஓ போன்ற நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை விற்கவோ, பரிமாறிக்கொள்ளவோ அல்லது ஒப்பந்தம் செய்துகொள்ளவோ இல்லை என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் உறுதிப்படுத்தவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்காள தேச பொதுத் தேர்தல்; ஐ.நா, அமெரிக்கா குற்றச்சாட்டு

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
UN, US accused on Bangladesh General Election

வங்காள தேசத்தில், பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி சார்பில் ஷேக் ஹசீனா 15 வருடங்களாகப் பிரதமராகப் பொறுப்பு வகித்து வருகிறார். பிரதமர் ஷேக் ஹசீனா மீது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வந்தன. அதனால், வங்கதேச தேசியக் கழகம் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய இரு பிரதான எதிர்க்கட்சிகள், பிரதமர் உடனடியாக பதவி விலகவும், ஆளும் ஆட்சி கலைக்கப்பட்டுத் தேர்தல் முடியும் வரை கட்சி சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன. 

இதையடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கழகம் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும், இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கருதி கலீதா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், அந்நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த 7 ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. 350 தொகுதிகள் கொண்ட வங்காள தேசத்தில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். எனவே, 300 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறும். ஆனால், ஒரு வேட்பாளர் இறந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு மட்டும் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 41.8 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 

தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, எண்ணிக்கை முடிவுகள் நேற்று முன்தினம் (08-01-24) வெளியிடப்பட்டன. அதன்படி, தேர்தல் நடைபெற்ற 299 தொகுதிகளில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 223 இடங்களில் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. முக்கிய எதிர்க்கட்சியான ஜாதியா கட்சி 11 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது.

இதன் மூலம், ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக வங்காள தேச நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கிறார். கோபால் கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசீனா, 8வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இந்த குறைந்தபட்ச வாக்குப்பதிவே தங்களது தேர்தல் புறக்கணிப்புக்கு கிடைத்த வெற்றியாகும். எனவே, நியாயமற்ற முறையில் நடந்த இந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வருகின்றன. 

இந்த நிலையில், வங்காள தேசத்தில் நடந்த பொதுத் தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறவில்லை. அனைத்து கட்சிகளும் பங்கு பெறாதது வருத்தமளிக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த தேர்தல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், “புதிய அரசு ஜனநாயகம், மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் எதிர்க்கட்சி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என 25,000க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையால் தேர்தல் சிதைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து,  “வங்கதேசத்தில் நடந்த 12வது பொதுத் தேர்தல் நம்பகமான, நியாயமான முறையில் நடைபெறவில்லை. அனைத்து கட்சிகளும் போட்டியிடாததால், மக்களுக்கு வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை” என்று இங்கிலாந்து குற்றம்சாட்டியுள்ளது. 

Next Story

ஒரு பக்கம் தொற்று நோய்; மறுபக்கம் தாக்குதல் - இன்னல்களுக்கு உள்ளாகும் காசா மக்கள் 

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

Epidemics in Gaza says united nation

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 வாரத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்தில் இருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் காசா நகரில் தொற்று நோய் பரவி வருவதாக  பாலஸ்தீன விவகாரங்களுக்கான ஐ.நா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. மேலும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த அமைப்பின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், தெரிவித்துள்ளது. இதனிடையே காசாவில் பல குடியிருப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகி நிர்மூலமாக்கப்பட்டதால், பெருமளவில் பொதுமக்கள் தெருக்களிலும் சாலைகளிலும், தங்கி இருப்பதால், காயங்கள் ஏற்பட்டுத் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.