
உலகில் மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் முதல் இரண்டு நாடுகளாக சீனாவும், இந்தியாவும் இருந்து வருகின்றன. இருப்பினும், 2027 ஆம் ஆண்டில் சீன மக்கள் தொகையை இந்தியா தாண்டிவிடும் என ஐக்கிய நாடுகள் சபை கணித்திருந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், இந்தியாவின் மக்கள் தொகை 2025ஆம் ஆண்டில் 146 கோடியை எட்டும் என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 146 கோடியே 39 லட்சமாக உள்ளது என்றும் இன்னும் 40 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக உயரும் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. இதன் மூலம், 141 கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவை பின்னுக்கு தள்ளி, மக்கள் தொகையில் உலகிலேயே இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த மதிப்பீடு இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு 1.9 குழந்தை பிறப்புகள் என்ற தற்போதைய கருவுறுதல் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு பெண்ணுக்கு 2.1 பிறப்புகள் என்கிற அளவில் இருந்து குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை 24 சதவீதமாகவும், 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டார்கள் எண்ணிக்கை 17 சதவீதமாகவும், 10 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை 26 சதவீதமாகவும் உள்ளது. நாட்டின் 68 சதவீதம் பேர், 15 முதல் 64 வயதுக்கு உட்பட்ட உழைக்கும் வயதை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் எண்ணிக்கை 7 சதவீதமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.