ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதன் பின்னர் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் நடத்திய வான்வழி தாக்குதலால் இந்த பதட்டம் அதிகமானது.

Advertisment

uk ambassador to iran arrested

இந்நிலையில், கடந்த புதன்கிழமை காலை டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டு விமானத்தை ஈரான் படைகள் தவறுதலாக சுட்டது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 176 பேர் உயிரிழந்தனர். இதில் 82 ஈரானியர்கள் மற்றும் 63 கனடா நாட்டவர் ஆகியோரும் அடங்குவர். இதன் காரணமாக ஈரான் நாட்டு மக்கள் தங்களது நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக போராட துவங்கியுள்ளனர். போராட்டங்களை அடக்க பாதுகாப்புத்துறையினரும், போலீசாரும் கடுமையாக போராடி வரும் நிலையில், ஈரானுக்கான இங்கிலாந்து தூதர் போராட்டத்தில் பங்கேற்றதாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

அமீர் கபீர் பல்கலைக்கழகத்தின் வெளியே நடந்த போராட்டத்தில் ஈரானுக்கான இங்கிலாந்து தூதர் ராப் மக்காரே கைதுசெய்யப்பட்டார். ஆனால் அவரோ, தான் போராட்டத்தில் பங்கேற்கவில்லை, உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டதில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கத்தான் சென்றேன் என கூறினார். இதன்பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரின் இந்த கைதுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.