Skip to main content

அமீரக விசா விதிகளில் புதிய மாற்றம்... இனி 10 ஆண்டுகள் விசா யாரெல்லாம் பெறலாம்..?

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 

uae expands 10 year golden visa scheme

 

'கோல்டன் விசா' எனப்படும் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் விசாவை பெறுவதில் சில புதிய தளர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது அமீரகம். 

 

அனைத்து துறைகளிலும் பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்களை பெரிதும் சார்ந்து செயல்படும் அமீரகம் அந்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்றும் வகையில், அந்நாட்டில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தொழிலதிபர்களுக்கு 'கோல்டன் விசா' எனவும் பத்தாண்டு செல்லுபடியாகும் விசாக்களை வழங்கி வந்தது. இந்நிலையில், தற்போது இந்த விசாவை மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கும் வழங்க அந்நாடு முடிவெடுத்துள்ளது. 

 

அதன்படி, பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த கோல்டன் விசாவை இனி, முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்களும் பெறலாம். உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் ஒன்றிலிருந்து பி.எச்.டி பட்டம் பெற்றவர்கள், சான்றளிக்கப்பட்ட மருத்துவர்கள், கணினியியல், மின்னணுவியல், நிரலாக்க மின்னணுவியல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளை சார்ந்த பொறியாளர்கள், கல்வியில் அதிக தகுதி வாய்ந்த நபர்கள், எமிரேட்ஸ் விஞ்ஞானிகள் கவுன்சில் அமைப்பில் பதிவு செய்த ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் இனி இந்த கோல்டன் விசாவை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நீதி மறைந்து நிர்வாணமாக நிற்கிறது” - அரபு மண்ணிலிருந்து ஓங்கி ஒலிக்கும் குரல்கள்

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Indians working in Arab countries have condemned the Manipur issue

 

மணிப்பூர் சம்பவத்தால் நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் போராட்டக் குரல்கள் கேட்கத் தொடங்கி இப்போது கடல்கடந்தும் ‘சேவ் ஃபார் மணிப்பூர்’ என்று கண்ணீரோடு போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

 

குவைத் நாட்டிற்கு பிழைக்கச் சென்ற இந்தியர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி பல்வேறு வாசகங்களுடன் கூடிய பதாகைகள் ஏந்தித் தங்கள் கண்டனக் குரல்களை ஓங்கி ஒலித்துள்ளனர்.

 

“இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றக் கடல் கடந்து வந்துள்ளோம். ஆனால் இந்தியாவில், மணிப்பூர் சம்பவத்தால் இந்திய தேசமே தலைகுனிந்து நிற்கிறது. நீதி மறைந்து நிர்வாணமாக நிற்கிறது. பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவராக இருந்தும் மௌனம் காப்பது ஏன் என்று நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.இப்படி ஒரு நிலை நடந்திருப்பது வேதனையாக உள்ளது. 70 நாட்களுக்குப் பிறகு வந்த காணொளியிலேயே இப்படி நடந்திருக்கிறது என்றால் 70 நாளில் வேறு என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். நாங்கள் சாதி, மதம் இல்லாமல் இந்தியனாக ஒற்றுமையாக நிற்கிறோம். இதே போல உலகமெங்கும் உள்ள இந்தியர் ஒன்று கூடி தீர்வு காண வேண்டும். இதை வெறுமன 3 பேரை கைது செய்து மறைத்துவிட நினைக்கிறார்கள்” என்றனர். மேலும், ‘சேவ் பார் மணிப்பூர்’ என்று  உரக்க குரல் எழுப்பியும் உள்ளனர்.

 

 

Next Story

அமீரகத்தில் தமிழக பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்; உதவிக்கரம் நீட்டிய அறக்கட்டளை

Published on 02/07/2023 | Edited on 02/07/2023

 

charity that helped a Tamilnadu girl who was cheated by agents in the UAE

 

திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியினை சார்ந்தவர் முத்து மகேஸ்வரி. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்காக வரவழைக்கப்பட்டு பின் ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டு பாஸ்போர்ட்டை பறிகொடுத்து நிராயுதபாணியாக விடப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரது நிலை அறிந்து தமிழ்நாட்டைச் சார்ந்த மேலும் சில ஏஜெண்டுகள் இவரை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சுரண்டி துன்புறுத்தி இருக்கிறார்கள்.

 

மகேஸ்வரி துபாயில் உணவு உட்கொள்வதற்கு உணவும் இல்லை, செய்வதற்கு வேலையும் இல்லை, நாட்களை கழிக்க பணமும் இல்லை ஊருக்கு திரும்பி செல்ல பாஸ்போர்ட்டும் இல்லை என்ற அவல நிலையில் பல நாட்களாக மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனை சமூக ஆர்வலர்கள் மூலம் அறிந்த அன்வர் அலி என்ற நபர் தனது நிமிர் அறக்கட்டளையின் மூலமாக முத்து மகேஸ்வரிக்கு தேவையான அத்துணை உதவிகளையும் ஆவணங்கள் இல்லாமல் தங்கியதற்கான அபராத கட்டணம் ,பாஸ்போர்ட் இல்லாமல் பயணிக்க தற்காலிக பயண அட்டை (Outpass)இந்திய அரசு ஆவணம், விமான பயண டிக்கெட் உட்பட ஊருக்கு செல்வதற்கான அனைத்து ஆவணங்களை தயார் செய்து உதவி கொடுத்து சொந்த ஊருக்கு திரும்பும் வரை அவருக்கு தேவையான உதவிகளையும் செய்துகொடுத்திருக்கிறார். 

 

மேலும் இன்று(2.7.2023) காலையில் முத்து மகேஸ்வரியை துபாய் விமான நிலையத்திற்கு நேராக வந்து வழியனுப்பிவைத்திருக்கிறார் அன்வர் அலி. இதையடுத்து நிமிர் அறக்கட்டளையின் தலைவர் அன்வர் அலிக்கு கண்ணீர் மல்க முத்து மகேஸ்வரி நன்றி தெரிவித்தார்.  மேலும் மகேஸ்வரி அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் இன்னும் பல்வேறான ஏழை பெண்களை ஏமாற்றி சுரண்டி வருவதை அறிந்த அன்வர் அலி அவர்கள் சம்பந்தப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் அவரை துன்புறுத்திய துபாயில் உள்ள ஏஜென்ட்கள் என அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி நீதி கிடைக்க தமிழக அமைச்சர்கள் மூலமாக தமிழக முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்று சட்ட போராட்டத்தை நிமிர் குழுவினர் முன்னெடுப்பார்கள் என்றும் அன்வர் அலி மகேஸ்வரிக்கு உறுதியளித்துள்ளார்.