
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதன்படி, அமெரிக்காவில் இரு பாலினம், சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து, மற்ற நாடுகளுக்கு பரஸ்பர வரி போன்ற அறிவிப்புகளால் உலக நாடுகளே அதிர்ந்து போயின. அதிலும் குறிப்பாக வெளிநாட்டினர் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்கும் நடவடிக்கையை டொனால்ட் டிரம்ப் தீவிரமாக எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகா, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, வருகிற ஜூன் 9ஆம் தேதி அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, ‘கொலராடோவில் போல்டரில் சமீபத்தில் யூத ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையாகப் பரிசோதிக்கப்படாத வெளிநாட்டினரின் நுழைவு நமது நாட்டிற்கு ஏற்படுத்தும் தீவிர ஆபத்துக்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நாங்கள் அவர்களை விரும்பவில்லை. பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் பரிசோதிக்க முடியாத எந்த நாட்டிலிருந்தும் திறந்தவெளி குடியேற்றத்தை நாம் அனுமதிக்க முடியாது. அதனால்தான் இன்று ஏமன், சோமாலியா, ஹைட்டி, லிபியா உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.