trump declines to extend deadline for tiktok

Advertisment

டிக்டாக் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது அந்நிறுவனத்திற்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.

சீன செயலியான டிக்டாக், பயனர்களின் தகவல்களைச் சீனாவிற்கு விற்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி, இந்தியாவில் இந்தச் செயலி தடை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்தச் செயலியைத் தடை செய்யத் திட்டமிட்டு வருவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனிடையே, அமெரிக்காவின் இந்த முடிவால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மட்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய டிக்டாக் நிறுவனம் முடிவெடுத்தது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் இரு நிறுவனங்களுக்கும் இடையே நடந்துவரும் சூழலில், செப்டம்பர் 15-க்குள் இதற்கான பேச்சுவார்த்தையை முடிக்கத் திட்டமிட்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் டிக்டாக்கை வாங்கவில்லை என்றால், அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில், டிக்டாக் நிறுவன விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படாத சூழலில், டிக்டாக் நிறுவனத்திற்கு வழங்கிய காலக்கெடுவை மேலும் நீட்டிக்கப்போவது இல்லை என ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.