Skip to main content

அமேசான், ட்விட்டர், ஃபேஸ்புக் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பு - இந்தியர்களுக்கும் ஆபத்து

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 - தெ.சு.கவுதமன்

nn

 

கரோனா பெருந்தொற்றின் பரவலால் கடந்த 2020 - 2021ஆம் ஆண்டுகளில் உலகெங்கும் பொருளாதாரச்சரிவு ஏற்பட்டது. கரோனா பொது முடக்கம் படிப்படியாக விலக்கப்பட்டு, விமான போக்குவரத்தும், கப்பல் போக்குவரத்தும் சீரடைந்த பின்பே கொஞ்சம் கொஞ்சமாகப் பொருளாதார நிலை சீரடையத் தொடங்கியது. இந்தச் சூழலில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைனுக்குள் ரஷ்யா நுழைந்து தாக்கத் தொடங்கியதில் உக்ரைன் பெருத்த நாசத்தை எதிர்கொள்ளத் தொடங்கியது. உக்ரைன் நகரங்களைத் தொடர்ச்சியாகத் தாக்கி சின்னா பின்னப்படுத்திய ரஷ்யாவின் போக்கினை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கண்டித்தன. இந்தியா நடுநிலை வகித்தது.

 

இந்நிலையில், ரஷ்யாவின் அடாவடித்தனத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா, ரஷ்யாவின் மீது பொருளாதாரத்தடை விதித்தது. உலகளவில் பெரிய பெட்ரோலிய ஏற்றுமதி நாடான ரஷ்யாவிடமிருந்து பெட்ரோல் வாங்குவதை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நிறுத்திக்கொண்டன. இதனால் ரஷ்யாவில் உற்பத்தியாகும் பெட்ரோல் தேக்கமடைந்ததோடு, ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது.

 

nnn

 

அடுத்த பாதிப்பாக, உணவு ஏற்றுமதி இறக்குமதியில் உலகளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவும் உக்ரைனும், கோதுமை உற்பத்தியில் உலகளவில் மூன்றாவது இடம் வகிக்கின்றன. தற்போது கோதுமை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் இதை நம்பியிருக்கும் குறைந்த வருவாய் நாடுகளான ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பார்லி உற்பத்தியிலும், சூரியகாந்தி உற்பத்தியிலும் ரஷ்யாவும்  உக்ரைனும் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் இதை நம்பியுள்ள நாடுகளுக்கும் பலத்த அடியாகியுள்ளது.

 

ரஷ்யாவுக்கு எதிராக, உக்ரைனுக்கு ராணுவ உதவியளிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு மறைமுகமாக அடி கொடுக்கும் வகையில் அந்நாடுகளுக்குச் செல்லும் எரிவாயுக் குழாயை நிறுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது ரஷ்யா. குளிர்காலம் வந்தாலே ஐரோப்பிய நாடுகளுக்குக் கதகதப்பு தேவைப்படும். அதற்கு எரிவாயு மிகவும் அவசியம். தற்போது முக்கியமான எரிவாயு குழாயில் தொழில்நுட்பப் பிரச்சனை என்றும், மெயின்டெனன்ஸ் என்றும் ஏதேதோ காரணம் சொல்லி எரிவாயு சப்ளையைக் குறைத்துள்ளது ரஷ்யா. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள்,  மாற்று எரிபொருளை அதிக விலைக்குத் தேட வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கின்றன. ஆக, கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீண்ட உலக நாடுகள், தற்போது இந்தப் போரின் காரணமாக மீண்டும் பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டு வருகின்றன.

nn

 

இதன் எதிரொலியாக, உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வருவாய் இழப்பைச் சந்தித்து அதனைச் சரிசெய்வதற்காக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உலகின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் இத்தகைய அறிவிப்பு கார்ப்பரேட் உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகம் முழுவதுமுள்ள அந்நிறுவனத்தின் பணியாளர்களில் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இ-மெயில் மூலம் பணியாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. இந்தப் பணி நீக்கம் அவர்களுடைய ஊழியர்கள் எண்ணிக்கையில் 3% என்று கூறப்படுகிறது.

 

அதேபோல்  பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. இது அந்த நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களில் 13 சதவீதமாகும். அடுத்ததாக ட்விட்டர் நிறுவனத்தை சமீபத்தில் மூன்றரை லட்சம் கோடிக்கு விலை கொடுத்து வாங்கிய எலான் மஸ்க், அந்நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே பணியாளர்கள் விஷயத்தில் கெடுபிடியாக நடந்து வருகிறார். ஒருபுறம் ட்விட்டரில் ப்ளூ டிக் ஆப்ஷனுக்கு விலை நிர்ணயம் செய்தவர்; தனது நிறுவன ஊழியர்கள் பணியிலிருந்து விலக விரும்பினால் விலகலாமென பச்சைக்கொடி காட்டினார். அதோடு, 3,700 பணியாளர்களை இவரே பணி நீக்கம் செய்துள்ளார். 'இன்று தான் உங்களுடைய கடைசி பணி நாள்' என்று இ-மெயிலில் ஊழியர்களுக்குச் செய்தி அனுப்பி அதிர்ச்சியளித்தார். இவர்களுக்கான பணி இழப்பீடாக 2023 ஜனவரி மாதம் வரையிலான ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

 

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. ஃபைனான்சியல் டிரேடிங் நிறுவனமான ராபின்ஹூட் தனது ஊழியர்களில் 23% பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இந்த மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கைகளால் அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் 1,20,000 பேர் பணியிழப்பைச் சந்தித்துள்ளார்கள். ஏற்கெனவே இந்தியாவில் பெட்ரோல் விலை எகிறியுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் படு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் முடிவுக்கு வராமல் தொடர்ந்தபடியே இருக்கும்பட்சத்தில் இந்தியாவில் இதன் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்குமென்று பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.