Skip to main content

ஆமானுடன் துர்க்கை.. கண்டெடுத்த கிராமத்தில் வைத்து வழிபட மக்கள் ஆர்வம்

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட காந்தளூர் கிராமத்தில் மான்  வாகனத்துடன் கூடிய அபூர்வமான  துர்க்கை அம்மன் சிற்பம், தண்ணீர் குழாய் பதிப்பதற்கு குழிவெட்டியபோது கண்டெடுக்கப்பட்டுள்ளது.   இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் சிற்பத்தை தண்ணீர் ஊற்றி கழுவி வழிபாடு நடத்தினர்.

m

 

மண்ணில் புதைந்திருந்த சிற்பம் குறித்தும் அதன் தொன்மை குறித்தும் அறிந்து கொள்ளும் பொருட்டு அவ்வூர் இளைஞர்கள்  தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ. மணிகண்டன் மற்றும் தலைவர்  கரு. ராஜேந்திரன் ஆகியோருக்கு படங்கள் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி தகவல் கேட்டிருந்தனர்.

 

இதனையடுத்து தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் காந்தளூர் கிராமத்திற்கு சென்ற நிலையில், அந்த சிற்பம் வருவாய் துறை வட்டாட்சியர்  ரபீக் அகமது  தலைமையிலான குழுவினர் மூலம்  எடுத்துச் செல்லப்பட்ட தகவல் தெரியவந்தது.

 

இது குறித்து தொல்லியல் கழகத்தினரிடம் கேட்டபோது,
     சிற்பம் மீட்கப்பட்டது குறித்து  திருச்சி கோட்டாட்சியர் அவர்களிடம் தகவல் கேட்டறியப்பட்டு உறுதிசெய்து கொண்ட பின்னர் திருவெறும்பூர் வட்டாட்சியரிடம்  ஒப்படைக்கப்பட்ட சிற்பம் சார்ந்த விவரங்கள்  கேட்டறியப்பட்டது.

     அப்போது அச்சிற்பம் துணி சுற்றப்பட்டு சீலிடப்பட்ட நிலையில் திருவெறும்பூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் தகவல் தெரிவித்தார்.

 

அபூர்வமான துர்க்கை:

சங்க காலப் பாடல்களிலும் இன்னும் பிற இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளவாறு வாகனத்தினை கொண்ட துர்க்கையாக காணப்படுகிறது.  எட்டு கரங்களிலும் சங்கு சக்கரம் சூலம் குறுவாள் உள்ளிட்ட ஆயுதங்களை தாங்கி நின்றாலும், சாந்தமான முகத்தோற்றத்துடன் இடது புற கரமொன்றை தொடையில் வைத்தவாறு சிற்பம் வடிக்கப்பட்டிருப்பது சிறப்பான வடிவமைப்பாகும்.

மார்பு கச்சையுடன்  நின்ற கோலத்தில் காட்சிதரும் தாயாருக்கு ஆமானைத்தவிர வேறு வாகனங்கள் காட்டப்படவில்லை.

காலம் :
 இது முற்கால சோழர் கலைப் பாணியில் அமைக்கப்பட்டிருப்பதால்  இதனை பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாக கருதலாம் என்றாலும் இதன் முடியமைப்பு , முக வடிவமைப்பு உள்ளிட்டவை தாராசுரம் கோவில் சிற்ப அமைவில் ஒத்துபோகிறது என்பதால் 12 ஆம் நூற்றாண்டுக்குட்பட்து என கணிக்கலாம்.

 

ஆமான் பற்றிய இலக்கிய பதிவுகள்:
ஆமான் பார்ப்பதற்குப் பசுவைப்போலவும் அதேசமயம் மான் போன்ற தோற்றமும் அதைவிடச் சற்று உயரமாகவும் உள்ள விலங்காகும். 

”கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி புன்தலைச் சிறா அர் கன்றெனப் பூட்டும்” அதாவது வளைந்த கொம்பினை உடைய ஆமான்களின் இளங்கன்றைச் சிறுவர்கள் தம்முடைய சிறுதேர்க்குச் சேங்கன்றாகப் பூட்டி ஓட்டினர் என்று கூறுவதன் மூலம் ஆமான்களின் கொம்பு வளைந்து இருந்தது என்பதும் அது சேங்கன்று போல இருந்ததாகவும் அறிய முடிகிறது.   புறநானூற்றின் 319 வது பாடல் மூலமும், ”புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்சினங்கழி மூதாக் கன்றுமடுந் தூட்டும்”
 புறநானூற்றின் 323 பாடல் மூலம் புலியால் இறந்துபட்ட மானினுடைய கன்றுக்குக் கறவைப்பசு தன்கன்றாகக் கருதி பாலை ஊட்டும் என்பதால் இது பசுபோன்ற தோற்றம் உடையது என்பது உறுதியாகிறது . இதனால் பசு அல்லாத வேற்றினம் என்னும் பொருளில் ஆமான் என மக்கள் பெயரிட்டு அழைத்துள்ளனர். 

பதிற்றுப்பத்தில் [ 30;10] கருங்கோட்டு ஆமான் என்ற செய்தி
ஆமானின் நிறத்தைக் குறிக்கக் கருங்கோட்டு ஆமான் என கூறப்படுகிறது . 

குறிஞ்சிப்பாட்டில் 
(253) ”புழற்கோட்டு ஆமான்” என்று கூறுவதன் மூலம் இதன் கொம்பு உள்துளை உடையது என்பதையும்,

சிறுபாணாற்றுப்படையில் ஆமான்  பற்றிய செய்தி முல்லை நிலத்தூராகிய வேலூரில் (உப்பு வேலூர்) பாணர்கள் சென்று தங்கிய போது அவர்களுக்கு எயினர்குலப் பெண்கள் புளியங்கறியிட்ட சோற்றுடன் ஆமாவின் இறைச்சியையும் தந்து அவர்களுடைய பசியைத் தீர்த்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.


 சிலப்பதிகாரத்தில் கொற்றவையைப் பற்றிக் குறிப்பிடும் வேட்டுவ வரிகளில் 
”கரிய திரிக்கோட்டுக் கலைமிசைமேல்நின்றாயால்' என துர்க்கையின் வாகனம் மான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
'இருண்முகைச் சிலம்பின் இரைவேட்டு எழுந்த' 'பனைமருள் எருத்திற் பல்வரி இரும்போத்து''மடக்கண் ஆமான் மாதிரத்து அலறத்' 'தடக்கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு என்கிறது அகநானூறு( 238)
ஆமான் பாவை[துர்க்கை]ச் சிலைகளில் துர்க்கையின் வாகனமாக ஆமான் உள்ளதால் துர்க்கை சிற்பம் "ஆமான் பாவை" என அழைக்கப்பட்டது .


திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் உள்ள கட்டளைக் கிராமம் , மானூர், நத்தமேடு இவ்வூரில் உள்ள துர்க்கை சிலைகளில் வாகனமாக ஆமான் உள்ளது.
புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் துர்க்கை தேவகோட்டத்தின் இருபுறங்களிலும் வாகனமான சிங்கம் மற்றும் மான் வடிக்கப்பட்டுள்ளது.


தற்போது காந்தளூரில் அடையாளம் காணப்பட்ட அதே கோலத்தில்  திருவண்ணாமலை செல்லும் பாதையில், 5 கி.மீ தொலைவில் அகரம் - குலதீபமங்களம் என்ற அழகிய சிற்றூர் அமைந்துள்ளது.  வழிபாட்டில் இருக்கும் துர்க்கை வடிவம் மிகவும் சிறப்பானது. இலக்கியங்களில் கொற்றவை என அழைக்கப்படுகிறாள். 


 மேலிருகரங்களில் சக்கரமும் - சங்கும் தாங்கியும், கீழிருகரங்களில் வலது கரம் மலர் ஏந்தும் நிலையிலும், இடதுகரம் தொடை மீது வைத்தும்  தேவியின் பின்புறத்தில் கலை மான் நிற்கும் கோலத்தில் துர்க்கை அம்மன் வடிக்கப்பட்டுள்ளது  ஒப்புநோக்கும் வகையில் உள்ளது. என்றனர்


    இந்த அபூர்வ சிலையை கண்டுத்த கிராம மக்கள் தாங்களே வைத்து வழிபாடுகள் நடத்துகிறோம் என்று முதல்கட்டமாக அபிஷேகங்களும் செய்தனர். ஆனால் தகவல் அறிந்து வந்த வருவாய் துறை அதிகாரிகள் தொல்லியல் துறைக்கு தகவல் சொல்லவில்லை. சிலையை மீட்க வந்த நிலையில் பொதுமக்கள் சிலையை இதே ஊரில் வைத்து விட்டுபோகச் சொன்னார்கள்.

 

சிலர் சிலையை எடக்கவிடாமல் தடுக்க வந்தனர். அப்போது குறுக்கிட்ட அதிகாரிகள் 100 நாள் வேலை செய்யும் பெண்கள் சிலையை எடுக்க விடாமல் தடுக்கிறார்கள். அவர்களுக்கு இன்று ஆப்செண்ட் போடுங்கள் என்று ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததால் பெண்கள் ஒதுங்கினார்கள். அடுத்து சில இளைஞர்கள் அபூர்வ சிலை எஙகள் ஊரில் இருந்தால் ஊருக்கும் எங்களுக்கும் பெருமை என்றனர். அவர்களைப் பார்த்த வருவாய் துறை அதிகாரிகள் ஜாதி, வருமானம், இருப்பிடசான்று என்று எங்களிடம் வரும் போது தரமாட்டோம் என்று மிரட்டல் தொணியில் சொன்னதால் அவர்களும் ஒதுங்கினார்கள். அதன் பிறகு எடுத்து சென்றுள்ளனர். 


    ஆனால் மத்திய, மாநில, தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்து ஆய்வு செய்தது போல தெரியவில்லை. அபூர்வ சிலை இதை ஆய்வு செய்தால் தமிழர்களின் வரலாறு, கலை, பண்பாடு தெரிய வரும். அதை துணியில் சுற்றி ஓரமாக வைத்திருந்தால் எப்படி வெளிவரும் வரலாறு. அதனால் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்கிறார்கள் கிராம மக்கள்.
                

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.