gotabaya rajapaksa

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இரண்டு வாரங்களுக்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்துவரும் நிலையில், தான் எடுத்த தவறான முடிவுகள்தான் இலங்கையின் இந்த நிலைக்கு காரணம் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புக்கொண்டுள்ளார்.

Advertisment

இலங்கை தலைநகர் கொழும்புவில் இது குறித்து பேசிய கோத்தபய ராஜபக்சே, "கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனா, கடன்சுமை காரணமாக நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கும் மக்களிடம் வருத்தம் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே உதவி கேட்காதது, ரசாயன உரங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்தது போன்ற தவறான முடிவுகளைத் தாங்கள் எடுத்ததாகவும், அந்தத் தவறுகளைக் களைந்து மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.