
அண்மையில் பகல்ஹாம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்திருந்தது. இவை ஒருபுறம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தானின் செயல்பாடுகளை அந்நாட்டின் நடிகை ஒருவரே விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் தான் நடத்திய அணு சோதனைகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 'யூம்-இ-தக்பீர்' என்ற பெயரில் அணு ஆயுத தேசிய தினத்தை கொண்டாடி வருகிறது. 1998 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் மே 28 மற்றும் 30ம் தேதிகளில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஹினா பயாத் என்ற நடிகை ஒருவர் கராச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணமாக சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததை கண்டு அதிருப்தியடைந்த அவர் அதை வீடியோ மூலம் விமர்சித்துள்ளார். அதில், 'விமான நிலையத்தில் கழிவறைகளில் கூட தண்ணீர் இல்லை. மிகவும் அவமானமாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் அணு சோதனை கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்துவது கேடா? என்ற வகையில் கேள்வி எழுப்பி உள்ளார். 'இருக்கும் குறைகளை ஏற்றுக் கொள்வதற்கு ஏன் யாரும் தயாராக இருக்க மாட்டேன் என்கிறார்கள். அரசு ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை அறிவிக்கின்றன. அதில் எந்த பயனும் இல்லை. வெறும் அறிவிப்புகளும் புகைப்படக் காட்சிகளும் மட்டும்தான் மிச்சம். இதில் வெளிநாட்டு கடன்கள் வேற அதிகரித்து விட்டது' என்று சாடியுள்ள வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.