நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் 50 பேர் பலியாகினர்.
இதில் 7 பேர் இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏராளமானவர்கள் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு காரணமானவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவன் கைது செய்யப்பட்ட நிலையில், கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு குறித்து ஆஸ்திரேலிய வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேசர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசும்போது, முஸ்லிம்களை நியூஸிலாந்தில் அனுமதித்ததால்தான் இப்படிப்பட்ட கடுமையான சூழல் உண்டாகியிருக்கிறது என்ற தொனியில் சர்ச்சையான கருத்தைப் பதிவு செய்தார். அவர் இந்தக் கருத்தைச் சொன்னதும் அருகில் இருந்த 17 வயது சிறுவன் ஒருவன் தனது கையிலிருந்த முட்டையால் அவர் தலையில் அடித்தார். இதனைச் சற்றும் எதிர்பாராத பிரேசர் அந்த சிறுவனை திரும்பி தாக்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.