ஈரானில் தமிழக மீனவர்கள் சிக்கித் தவிப்பு!

iran-tamil-fisher

 

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் அதிகரித்தது. இத்தகைய சூழலில் தான் இஸ்ரேல் மற்றும் ஈரான் முழுமையான போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. இந்நிலையில் ஈரானில் உள்ள  தமிழ்நாட்டு மீனவர்கள் உணவின்றி இருப்பதாகவும், பயணச் செலவுக்கு போதிய பணம் இல்லை என்றும்  கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த வீடியோவில் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

அந்த வீடியோவில் மீனவர்கள், “நாங்கள் 10 நாட்களாகச் சாப்பாட்டிற்காக அலைகிறோம். சாப்பாட்டிற்குக் கூட நாங்கள் வழி இல்லாமல் இருக்கிறோம். எங்களை அழைத்து வந்த உரிமையாளர் அவரது வீட்டில் உள்ளார். அவருக்கு ஒரு போன் செய்தால்  எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. ஒரு மெசேஜ் கிடையாது. இதுவரை சாப்பிடுவதற்குக் காசுகூட எங்கிட்ட கணக்குப்போட்டு வாங்கிய பிறகுதான் முதலாளி பாஸ்போர்ட் தருவேன் என்று கூறுகிறார்கள். இதற்கு நாங்கள் என்ன செய்வது?. எங்களுக்கு ஒரு நல்ல முடிவா எடுங்கள்?. நாங்கள் ஆதரவற்றோர்கள் போல் உள்ளோம். 2 மாதம் கடந்தும்  ஒரு பைசா கூட அனுப்ப முடியவில்லை” எனக் கவலைத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கு உரியத் தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று (24.06.2025) கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்
Subscribe