Skip to main content

கொரிய மொழியில் தமிழ் - சான்றுகளுடன் உலகத் தமிழ்ச்சங்க கருத்தரங்கில் முனைவர் ஆரோக்கியராஜ் பேச்சு!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் கொரியத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் 'கொரியத் தமிழரும் தமிழும்' இணையவழி ஆய்வரங்கத்தின் நான்காவது நாளில் 'கொரியாவில் அதிகரிக்கும் தமிழ் ஆர்வம்' குறித்து கொரியத் தமிழ்ச் சங்கத்தின் ஆளுமைப்பிரிவின் இணைச்செயலர் முனைவர் செ.ஆரோக்கியராஜ் உரையாற்றினார். 

 

அப்போது அவர் பேசியது…

 

நான் வேலைக்காக கொரியா வந்து 8 ஆண்டுகள் ஆகின்றன. பேராசிரியராக பணிபுரிந்தாலும், கொரியாவின் கிராமப்புறங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினேன். எனது கொரியா பேராசிரியரும் எனக்கு உதவிசெய்தார். அப்போதுதான் கொரியா மொழியில் தமிழ் கலந்திருப்பதையும், தமிழர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், கலாச்சாரம் ஆகியவற்றின் மிச்சங்கள் கொரியர்களின் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படுவதையும் காணமுடிந்தது.

 

ஏற்கெனவே, கொரியா தமிழக உறவுகள் குறித்து முனைவர் நா.கண்ணன், ஒரிசா பாலு ஆகியோர் சில காணொளிகளை வெளியிட்டிருக்கிறார்கள். இங்கேயும் ஜீ மூன் யாங் என்ற கொரிய பேராசிரியரும் மொழி ஒற்றுமை குறித்து வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்.

 

Korean

 

கொரிய மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த ஒற்றுமை சென்றுசேருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அதன் விளைவாகத்தான், லஸோல் என்ற கொரிய யூ-ட்யூபரை இணைத்து என்னிடமிருந்த தரவுகளைக் கொண்டு, கொரிய தமிழ்மொழி ஒற்றுமை குறித்தும் உணவுப் பழக்கங்கள் குறித்தும் ஆதாரத்தோடு ஒரு வீடியோ தயாரித்து வெளியிட்டேன்.

 

இந்த வீடியோ கொரியாவில் 40 லட்சம் பார்வையாளர்களைச் சென்று சேர்ந்தது. இதுவரை எந்த அன்னிய மொழிசார்ந்த வீடியோவும் இதுபோல ஒரு வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த வீடியோவுக்குப் பிறகு கொரியா தமிழ்மொழி உறவுகளை அறியும் ஆர்வம் கொரியாவில் அதிகரித்துள்ளது.

 

Korean

 

நிறைய வீடியோக்களும் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. ஆனால் நாங்கள் வெளியிட்ட வீடியோ ஏற்படுத்திய உரையாடல்கள் அளவுக்கு மற்ற வீடியோக்கள் உருவாக்கவில்லை. தமிழ் வார்த்தை ஒற்றுமைகளையும், உணவு வகைகளில் உள்ள ஒற்றுமையையும் வீடியோவில் விளக்கினேன். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள கிராமப்புற விளையாட்டுகளையும் எடுத்துக் காட்டினேன்.

 

அம்மா, அப்பா, அண்ணி போன்ற உறவுமுறை வார்த்தைகளையும், கொழுக்கட்டை, எள்ளுருண்டை, பொங்கல் போன்ற உணவுகளையும் அறிமுகப்படுத்தினோம். 


தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கலாச்சார பழக்க வழக்கங்கள் சிலவற்றை ஆதாரத்துடன் சொன்னேன். நோய்த் தடுப்பு நடவடிக்கையாக நாம் வேப்பிலைத் தோரணம் கட்டுவதைப் போல, கொரியாவிலும் தோரணம் கட்டுகிறார்கள். பொங்கல் திருவிழாவில் முக்கியமான நாள், காணும் பொங்கல் ஆகும். அது இங்கேயும் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், கொரியர்கள் இப்போதும் தங்கள் உறவினர்களைக் கண்டு நலம் விசாரித்து இனிப்பு வகைகளை பரிமாறும் பழக்கம் இருக்கிறது.

 

Korean

 

விவசாயம் சார்ந்த தமிழ் வார்த்தைகளும் கொரியா மொழியில் ஏராளமாகக் கலந்திருக்கின்றன. உடல்பாகங்கள் பலவற்றுக்கு அப்படியே தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. கொரியர்களின் வாழ்க்கையில் அரிசி உணவுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரு குழந்தை பிறக்கும்போதும் சரி, ஒருவர் இறக்கும்போதும் சரி, புதுமனை புகுவிழா சமயத்திலும் சரி 'அதிரசம்' உள்ளிட்ட அரிசியால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளைப் பரிமாறுகிறார்கள்.

 

இறப்பு வீட்டில் கறி, மீன் போன்றவற்றை படைக்கிறார்கள். அரிசி சார்ந்த உணவுகளையும், அந்தப் பகுதியில் விளையும் பழங்களையும் படைக்கிறார்கள். எந்த ஒரு காரியத்துக்கும் நாம் பலி கொடுப்பதைப் போலவே, கொரியர்கள் பன்றியைப் பலிகொடுக்கிறார்கள். இங்குள்ள கிராமப்புற புத்தர் கோவில் கிட்டத்தட்ட நம் ஊர் அய்யனார் கோவிலைப் போல இருக்கிறது. புத்தரே அப்படியான தோற்றத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறார். புத்தருக்கு இங்கே சாக்கிய முனி என்றே அடைமொழி கொடுத்திருக்கிறார்.

 

Korean

 

கொரியா தமிழக உறவுகளைக் குறித்து முனைவர் நா.கண்ணன், ஒரிசா பாலு, ஆதனூர் சோழன் ஆகியோர்தான் நூல்களை எழுதியிருக்கிறார்கள். 18ஆம் நூற்றாண்டுவரை சமஸ்கிருதம்தான் தொன்மையான மொழி என்று கற்பிக்கப்பட்டதை, கால்டுவெல் மாற்றினார். அதன்பிறகுதான் தமிழ் மொழியின் தனித்தன்மை வெளிப்பட்டது. 

 

ஒரு மொழியின் சிறப்புக்கு மூன்று கூறுகள் இருக்கின்றன். இலக்கியச் சிறப்பு, வணிக சார்பு, தொல்லியல்தன்மை ஆகியவை முக்கியமானவை இவை மூன்றுமே தமிழுக்கு இருக்கின்றன. ரோமாபுரியுடன் வணிகம் செய்ததற்கான ஆதாரங்களாக ரோம நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. தொல்லியல் ஆய்வுகளில் தமிழின் தொன்மை வெளிப்பட்டிருக்கிறது. மிகத் தொன்மையான இலக்கியங்கள் தமிழில் இருக்கின்றன. தமிழை தொன்மையான மொழி என்று அறிவியல் நிரூபித்திருக்கிறது. 

 

Korean

 

இலக்கியத்திலும், அறிவியலிலும் தமிழின் சிறப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வுகள் ஆதிச்சநல்லூரில் நடந்திருக்கின்றன. இப்போதும் கீழடியில் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் பெரும்பாலும் வணிகம் சார்ந்திருக்கிறது. 

 

கொற்கை துறைமுகத்திலிருந்து தமிழன் வணிகம் நடத்தியிருக்கிறான். ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் வெளிநாட்டினர் தங்கியிருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன என்று ஆஸ்திரேலிய ஆய்வறிஞர் ராகவன் கூறியிருக்கிறார். அங்கு கிடைத்த நூற்றுக்கு மேற்பட்ட மனித எலும்புக் கூடுகளில் சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. சமீபகாலமாகத்தான் கொரியா தமிழக உறவுகள் பேசுபொருளாகி இருக்கிறது. தமிழ்ராணி கொரியாவை ஆட்சி செய்திருக்கிறார் என்றால், அதற்கு முன்பே இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் நடந்திருக்க வேண்டும். அந்தத் தொடர்பில்தான் கொரியா மன்னருக்கு தமிழச்சி ஒருவரை மணமுடித்துக் கொடுத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு நம்பிக்கை அதிகரித்திருக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழ் எழுத்துருக்கள் கொரியா மொழியில் மாற்றம் பெற்றிருக்க முடியும். கொரியா தமிழ்ச்சங்கம் இந்த இரு நாடுகளின் தொடர்புகள் குறித்து பல முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறது. 

 

Korean

 

அதன்தொடர்ச்சியாக தமிழ் மற்றும் கொரியா மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை மேலும் வெளிக்கொணர ஆராய்ச்சி மையம் நிறுவவேண்டும். இந்தியா தமிழக பல்கலைக்கழக ஆசியா மொழிகள் கொரியா மொழி இணைப்பு, கொரியா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம் என்றார்.

 

Ad

 

முனைவர் ஆரோக்கியராஜ் தனது உரையில் ஏராளமான இலக்கியம் மற்றும் அறிவியல் தரவுகளை மேற்கோள்காட்டி பேசினார். கொரியா தமிழ்ச்சங்கம் தமிழ் ஆர்வலர்களை அழைத்துச் சிறப்பித்ததையும் விருதுகள் வழங்கிக் கவுரவித்து முன்னுதாரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அவருடைய உரையை உலகத் தமிழ்ச்சங்க இயக்குனர் அன்புச்செழியன் பாராட்டினார். சிறப்பான உரை என்று குறிப்பிட்டு பேசினார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.

Next Story

கொரிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர்; ஆஸ்திரேலியா நீதிமன்றம் அதிரடி! 

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

australia overseas friends of the bjp leader balesh dhankhar related court judgement

 

ஆஸ்திரேலியாவில் உள்ள  சிட்னியில் வசித்து வரும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பாலேஷ் தன்கர். பாஜக பிரமுகரான இவர்  'ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆஃப் தி  பி.ஜே.பி' எனும் பாஜகவின் வெளிநாட்டு உறுப்பினர்களுக்காக அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகச் செயல்பட்டு வந்தவர். இந்நிலையில் பாலேஷ் தன்கர் வீட்டில் கடந்த 2018ம் ஆண்டு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் பல பெண்களை பாலேஷ் தன்கர் பாலியல் வன்கொடுமை செய்து பதிவு செய்து வைத்திருந்த வீடியோக்களை போலீசார் கைப்பற்றினர். அந்த வீடியோவில் இருந்த பெண்களில் சிலர் சுயநினைவில்லாமல்  போதையில் இருந்துள்ளனர். அந்த விடீயோக்களில் இருந்தவர்களில் பெரும்பாலும் கொரிய நாட்டைச் சேர்ந்த  பெண்களாக இருக்கும் என போலீசார் கருதினர். இது மட்டுமின்றி பாலேஷ் தன்கர் மீது ஐந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக ம குற்றம் சாட்டப்பட்டது.

 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு  இவ்வழக்கு சிட்னி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில்  தற்போது அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பாலேஷ் தன்கர் போதைப் பொருட்களை பயன்படுத்தி அதன் மூலம் பெண்களை பாலியல் கொடுமை செய்துள்ளார். இணையதளம் மூலம் பெண்களை வீட்டிற்கு வரவழைத்து  தனிமையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில்  5 கொரிய பெண்களை தாக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு வேலை தேடி வரும் கொரிய பெண்களை தன்னுடைய பாலியல் இசைக்கும் பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் பெண்களுக்கு மது அல்லது ஐஸ் கிரீமில்  மயக்க மருந்து கலந்து கொடுத்து தனது பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

 

இது குறித்து இவரிடம் தட்டிக்கேட்ட பெண்களை தாக்கியுள்ளார். மேலும் தனது படுக்கை அறையில் உள்ள கடிகாரத்தில் மறைத்து வைத்திருந்த ரகசிய கேமரா மூலம் பெண்களுடன் தனிமையில் இருக்கும் காட்சிகளையும், தன்னுடன் ஒத்துழைக்காத பெண்களை தாக்கும் காட்சிகளையும் அந்த கேமிரா மூலம் பதிவு செய்துள்ளார். இதன் பதிவுகளை போலீசார் கைப்பற்றியதன் அடிப்படையில் பாலேஷ் தன்கர் குற்றவாளி என்பது உறுதியாகி உள்ளது. மேலும் அவருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.